Tuesday, May 17, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை -பகுதி - 2 (5)



அடுத்து நாங்கள் சென்ற கோவில்களில் மிக இனிமையான, அதாவது இனிப்புகளாலேயே அலங்கரிக்கப்பட்ட கோவில் இருந்ததே........சொல்கிறேன்....சற்று பொருங்கள் சாமி.....

கால பைரவர் சிவனுடைய பக்தர்.இவருடைய கோவிலில்தான் முழுவதும் விதவிதமான இனிப்பு தின்பண்டங்களினாலேயே அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.இவருடைய மகிமை எத்தகையது என்பதற்கான ஆதாரம், பனாரஸில் ஔரங்கசீப்பின் கையிலிருந்து தப்பித்தது இந்த கால பைரவர் கோவில் மட்டும்தானாம்.கால பைரவர் நீதிமான் என்று கருதப்படுகிறார் ஒரு கவளம் சோறுண்டு, ஒரு கோடி சொத்தானாலும், சோர்வின்றி விடிய விடிய காக்கும்,நாய் என்ற அந்த நன்றியுள்ள ஜீவன்.கால பைரவரின் வாகனமாக இருக்கக்கூடிய தகுதி வாய்ந்த ஜீவன்!நகரத்தின் ஒவ்வொரு முக்கிலும் நின்று காவல் காத்துக் கொண்டிருக்கிறார்.ஊரில் உள்ள அத்துனை விதமான இனிப்பு வகைகளையும் அந்த கால பைரவருக்கு நன்றி செலுத்தும் வகையில் அலங்க்காரம் செய்திருந்தனர்.

அடுத்து துர்கையம்மன் கோவில் தரிசனம்! மகா துர்கா கோவில், காசி நகரத்தின் தெற்கே உள்ளது. இக்கோவில் பதினெட்டாம் நூற்றாண்டில் கட்டப்பட்ட மிகப்பழமை வாய்ந்த கோவிலாம்.ஒவ்வொரு செவ்வாய் கிழமையும், நவராத்திரி காலங்களிலும், விசேட பூசைகள் நடப்பதுடன், கூட்டமும் அதிகமாக இருக்கிறது. ஒரு ஆங்கிலேய அதிகாரி, ஏதோ ஒரு சண்டையில் வெற்றி கொண்டால் ஒரு மணி வாங்கி வைப்பதாக வேண்டிக்கொண்டு அச்சண்டையில் வெற்றி கண்டதால் ஒரு மணியும் வாங்கி தொங்க விட்டுள்ளார். அந்நிய நாட்டவருக்கும், நம்பிக்கையை ஏற்படுத்திய அற்புத சக்திவாய்ந்த அம்மன்!இந்தக் கோவிலில் குரங்குகள் மிக அதிகமாக இருக்கிறது. அதனாலேயோ என்னவோ இக்கோவிலை குரங்கு கோவில் என்றும் அழைக்கின்றனர்.

அடுத்து, சோளியம்மன் கோவில் என்ற மிகப் பழமையான சிறிய கோவில். காசிவிசுவநாதரின் தமக்கை இந்த சோளியம்மன் என்றும் மக்கள் நம்புகிறார்கள்.சற்றே உயர்ந்த குன்றின் மீது தனியளாக கம்பீரமாக வீற்றிருக்கிறாள் சோளியம்மன்.

சிரி சுவாமி பாஸ்கரானந் சமாதி:

துர்கா கோவிலின் அருகில் சுவாமி பாஸ்கரானந் சமாதி மிகவும் அழகாக சங்மர்மங் என்ற கல்லினால் கட்டப்படடு இருக்கிறது.இந்த சமாதியின் பூந்தோட்டம், கண்ணைக் கவரும் வண்ணம் அழகாக வடிவமைக்கப்பட்டு, பாதுகாக்கவும்படுகிறது.சிவலிங்கத் திருமேனி வடிவில் கட்டப்பட்ட இச்சமாதி எந்நேரமும் திறந்திருக்கிறது.இங்குதான் அருகில் நாங்கள் ஏடிஎம்மில் பணம் எடுத்துக் கொண்டுச் சென்றோம். பயணிகளுக்கு வரப்பிரசாதம் இந்த ஏடிஎம் வசதி. கையில் பணம் அதிகமாக வைத்துக் கொள்வது பாதுகாப்பற்ற சூழலை எற்படுத்துகிற காலகட்டத்தில் அங்கங்கே, ஏடிஎம் வசதி, மிகுந்த பயனளிப்பதாகாவே இருக்கிறது!அதிகமான கல்வியறிவற்ற கிராமத்து மக்கள் கூட பழக்க தோசத்தில் அழகாக ஏடிஎம்மை பயன்படுத்துவது வரவேற்கத்தக்க அம்சமாகும்.

துளசி மனாஸ் கோவில் :

துளசி மனாஸ் கோவில் துர்கா கோவிலுக்குப்பின் 1964ல் இரண்டு இலட்சம் ரூபாய்க்கு மேல் செலவு செய்து கட்டப்பட்டிருக்கிறது. இக்கோவிலின் சுவர்களில் ராமர், சீதை, விஷ்ணு,இலக்குமி, அண்ணபூரணி, ராமாயணம் வடித்த துளசிதாசர் ஆகியவர்கள் அழகிய சித்திர வடிவமாக அருள்பாலிக்கின்றனர். அருகில் சிவபெருமான் தன் தலையில் கங்கையைத் தாங்கியுள்ளது போல் அழகாக வடிவமைக்கப்பட்ட கோவிலும் அதனருகில் அழகான பூந்தோட்டமும் உள்ளது.

பாரத மாதா கோவில் :

இந்த கோவில் 1936ல் மகாத்மா காந்தியடிகள் திறப்பு விழா செய்த பெருமை வாய்ந்த கோவில்.ஆங்கிலேயர்களுடன் நடந்த சுதந்திரப் போராட்டத்தின் நினைவாக சிரிசில் பிரசாத் குப்தா என்பவர் இக்கோவிலைக் கட்டியுள்ளார். இக்கோவிலில் இமாலய பர்வதத்தின் சிகரம் , திபெத் முதலிய இயற்கை காட்சிகளுடன், அழகான சித்திரங்களும் மேலும் அழகூட்டுகிறது. அருகில் ஒரு நூலகமும் இருக்கிறது.

சமஸ்கிருத பல்கலைக்கழகம் :

காசியில் சமஸ்கிருத மொழி கற்றுக் கொள்பவர்கள் அதிகம். பிரிட்டிஷ் அரசாங்கத்தாரால் கட்டப்பட்ட ‘குயீன்ஸ் காலேஜ்’ என்ற பிரபலமான கல்லூரி, அந்த காலகட்டத்தில் முதல்வராக இருந்த டாக்டர் சம்பூர்ணா நந்தி காலத்தில் கட்டப்பட்டுள்ளது. இந்த பல்கலைகழகத்தில் அருங்காட்சியகம் மற்றும் நூலகமும் இருக்கிறது. இந்த பல்கலைக் கழகத்தில் அழகாக கோவில்களும் கட்டப்பட்டுள்ளது. தற்சமயம் இந்த பல்கலைக்கழகம் ஆயுர்வேத கல்லூரியாக இயங்கிக் கொண்டிருக்கிறது.

பனாரஸ் இந்து பல்கலைக்கழகம் :

பனாரசின், தெற்கு எல்லையில் 1300 ஏக்கர் நிலம் காசி ராஜாவினால் கொடுகப்பட்டுள்ளது.இது மிகப் பெரிய பல்கலைக்கழகமாக உள்ளது.மதன் மோகன் மாளவியர் 1916ல் இந்த பல்கலைக்கழகத்தை கட்டியுள்ளார்.முதல் வாசலில் இவருடைய சிலையும் இருக்கிறது.இந்த பல்கலைக்கழகத்தில் மருத்துவக் கல்லூரி, நூலகம், சமஸ்கிருத அறிவியல், விவசாய நுட்பம், இசைக்கல்லூரி முதலியவைகள் இருக்கின்றன.இன்னொரு சுவையான தகவல், இந்த பல்கலைக்கழகத்தில், சுயமின் உற்பத்தி செய்யப்படுகிறது.

காசி ராஜாவின் அரண்மனை கங்கை நதியின் தெற்குப் புறம் மிக அழகாக கட்டப்பட்டுள்ளது. ராஜா பயன்படுத்திய விதவிதமான பல்லக்கு,வண்டிகள் மற்றும் அவருடைய உடைகள், ராணியின் உடைகள், அனைத்தும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. அவையெல்லாம் மிக மோசமான நிலையிலேயே உள்ளது.

அடுத்து வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தலமான சாரநாத் சென்றடைந்தோம். பண்டைய அரண்மனைகளும், தர்பார்களின் நினைவுகள் பல நூற்றாண்டுகளுக்குப் பிறகும், இன்றும் செவ்வனே பராமரிக்கப்பட்டு வருகிறது.சாரநாத் காசியிலிருந்து, 6 மைல் தொலைவில் வடக்குப் பகுதியில் இருக்கிறது.இதுவே புத்த மதத்தின் தாய்நாடு. காசியிலிருந்து கார் அல்லது இரயில் மூலம் செல்லலாம்.சாரநாத்தில் இரயில் நிலையம் உள்ளது. பிர்லா சத்திரமும் உள்ளது. சுமார் 2 அல்லது 3 ஃபர்லாங்க் தூரத்தில் கி.மு.5ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட சாக்குண்டி இருக்கிறது. அசோகர்,கனிஷ்கர்,குப்தர் முதலிய அரசர்கள் காலத்தில் சாரநாத் நகரம் மென்மேலும் சிறப்படைந்திருக்கிறது. பாஹினி, ஹியின் சங் ஆகிய இரண்டு சீன யாத்ரீகர்கள் கி.மு.5,7ம் நூற்றாண்டில் மிகவும் புகழ்ந்துரைத்துள்ளார்கள். சாரநாத்தில், செங்கற்களால் கட்டப்பட்ட மிக அழகிய புத்தர் கோவில்கள் உள்ளன. புத்த மதத்தினர்கள்,அழிந்து போன, செங்கற்கள், கருங்கற்கள் முதலியவைகளையும் வணங்குகின்றனர். புத்த பகவான் இங்கே ஒரு சாதாரண குடிலில் 4 மாதங்கள் தங்கி இருந்துள்ளார். அந்த இடத்தில் 200 அடி உயர புத்தர் கோவில் கி.மு 5ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது. ஒரு அருங்காட்சியகமும் உள்ளது.

இந்த அருங்காட்சியகம் கி.மு.3ம் நூற்றாண்டில் கட்டப்பட்டுள்ளது.இதில் புத்த மதத்தின் வரலாற்று சின்னங்கள் மற்றும், அசோகச் சக்கரத்தின் சிதைந்த பாகங்களை அதன் மூல வடிவம் போல் செய்து பாதுகாத்து வருகின்றனர். அதன் முகப்பில், அசோக ஸ்தூபியில் உள்ள நான்கு புறமும் இருக்கக்கூடிய சிங்க உருவ அமைப்பை அப்படியே வைத்து பாதுகாக்கின்றனர்.

முல்காஞ்குடி விஹார் :

இந்தக் கோவில் தங்கத்தில் இலங்கை ஆளுநர் காதர்மபாலினால் கட்டப்பட்டது.ஜப்பானிய சிற்ப வல்லுநர்களால் கட்டப்பட்டுள்ளது. அஜந்தா பெயிண்டிங்கும் உள்ளது.

அடுத்து நாம் தரிசிக்கப் போவது சுவர்க்க லோகத்தின் முகப்பு வாயிலான ரிசிகேஷ் மற்றும் ஹரித்துவார் ஆகிய புண்ணியத்தலங்களை!

தொடரும்.


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 (5)
May 15, 2011
by coral shree

No comments:

Post a Comment