Thursday, April 12, 2012

காற்றில் ஆடும் தீபங்கள்


இனிய நந்தன புத்தாண்டு வாழ்த்துகள் நண்பர்களே!


வாழ்வியல் வண்ணங்கள் (1)

பெண்களை, குத்துவிளக்கு, குலவிளக்கு என்று கொண்டாடுவது பெரும்பாலும் நம் தமிழர் மரபு. அம்மரபு வழி பண்பாடு பெண்களுக்கென்று ஒரு எல்லைக்கோட்டையும் நிர்ணயித்து வைத்துள்ளது. அந்த எல்லைக்கோட்டினுள் வாழ்த் தெரிந்த பெண்மகள், தம் சுய விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடாமல் ஒரு தவ வாழ்க்கையை மேற்கொண்டு காலத்தை கடத்தி வந்த காலங்கள், பெண்களின் வாழ்க்கைக்குப் பாதுகாப்பு என்பது உறுதியான ஒன்றாக இருந்தது. பெண்களுக்கு பொருளாதார சுதந்திரம், கல்வியறிவு, என முன்னேற்றமடைய ஆரம்பித்தவுடன், இந்த பாதுகாப்பு பண்பாட்டு எல்லை சுருங்கி, சுதந்திரம் என்ற ஒன்று கட்டவிழ்த்து விட்டது போன்ற நிலையை ஏற்படுத்துவதன் விளைவாக பல பிரச்சனைகளையும் எதிர்கொள்கிறார்கள். சில நேரங்களில் காற்றில் ஆடும் தீபமாக வாழ்க்கை அச்சமூட்டுகிறது. சில காலங்களில் அது நிலைபெற்று நின்றுவிடும் என்ற நம்பிக்கை இருந்தாலும், இந்த இடைப்பட்ட கால ஊசலாட்டம் ஏற்படுத்தும் பிரச்சனைகள் குறித்த விழிப்புணர்வு வேண்டும்.

நிமிர்ந்த நன்னடையும், நேர்கொண்ட பார்வையும், தன்னம்பிக்கையும், சலியாத உழைப்பும் கொண்டு சமுதாயத்தில் பல்வேறு சாதனைகள் புரிந்து கொண்டு, பலவேறு துறைகளிலும், பலருக்கும் முன்னோடியாகவும், இருக்கக் கூடியவராகவும் உள்ள இக்காலகட்டத்திலும், சுயவிழிப்புணர்வு இன்மையாலும், தேவையில்லாத அச்சம், அசாத்திய துணிச்சல், தவறான முடிவெடுத்தல், அளவிற்கதிகமான தன்னம்பிக்கை, கோழைத்தனமான முடிவு என இப்படி பல்வேறு வழிகளில் தங்கள் வாழ்க்கைக்கு தாங்களே பகையாளி ஆனவர்களும் உண்டு. அந்த வகையில் இக்கட்டுரைத்தொடர் பல உண்மைச் சம்பவங்களை மையமாகக் கொண்டு, இன்றைய பெண்களின் நிலையை அலசப்போகிற ஒரு நிதர்சனம். இதில் சுழலப் போகும் தீபங்கள் நீங்கள் அறிந்தவர்களாகவோ, உங்களுக்கு மிகவும் நெருங்கியவர்களாகவோ இருக்கலாம்….. தத்தளிக்கும் தீபங்கள் சில அணைந்து விட்டாலும், எப்படி வாழக்கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக இருப்பதன் முகமாக வாழப்போகிறவர்கள். இக்கட்டுரைகளில் ஊரும், பெயரும் மாற்றப்பட்டுள்ளது. யாருடைய மனதையும் புண்படுத்துவதற்காக எழுதப்பட்டதும் அல்ல. சில நிதர்சனங்கள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படல் வேண்டும் என்ற ஆதங்கத்தில் மட்டுமே எழுதப்படுகிறது.

தீபம் (1)

தணலில் வெந்த தாய்மை…..

பெரும்பாலான குடும்பங்களில் நம் குழந்தைகளின் திருமண வாழ்க்கையையும், மற்ற முக்கியமான எதிர்கால முடிவுகளை எடுப்பதிலும் ஜோசியம், ஜாதகம் என்பது பெரும்பங்கு வகிக்கிறது. பல நேரங்களில் தலையெழுத்தையே மாற்றக்கூடிய வல்லமை பெற்றது. அளவிற்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சாகும் அல்லவா….?

சந்திரிகா, நல்ல பாரம்பரியம் மிக்க குடும்பத்தில் பிறந்து, தெய்வ நம்பிக்கையும், பெரியோரிடம் பயபக்தியும் கொண்டு, அவ்ர்தம் சொற்களை வேதவாக்காக எண்ணி வாழக்கூடிய சராசரி இந்தியப்பெண். சுயவிருப்பு, வெறுப்பு என்பதற்கெல்லாம் இடம் இருந்ததில்லை இது போன்ற சூழலில் வளரும் பெண்களுக்கு. பெரியவர்கள் சொல்வதை கண்மூடி கேட்டுக் கொண்டு போக வேண்டியதுதான் ஒரேவழி. மாற்றுவழி என்ற உபாயமே வழங்கப்படுவதில்லை. படிப்பில் நல்ல சூட்டிப்பான பெண் அவள். பள்ளியிறுதித் தேர்வில் பள்ளியிலேயே இரண்டாவது மாணவியாக தேர்ச்சி பெற்றவள். மேற்படிப்பு படித்து மருத்துவராக வேண்டும் என்று பல கற்பனைகள் கொண்டிருந்தவள். தன் விருப்பம் எப்படியும் நிறைவேறும் என்ற கனவும் கொண்டு வாழ்பவள்.

ஆனால் நடந்ததோ வேறு. உறவு வகையில் நல்ல வரன் வரவும், ஜாதகத்தில் சில தோஷங்கள் பெயரைச் சொல்லி, அதற்குத் தோதான வரன் அமைவது சிரமம், அதனால் எல்லாம் கூடிவந்து இப்படி ஒரு வரன் வரும்போது தவிர்க்கக் கூடாது என்ற மூத்தோரின் சொல்கேட்டு வேறு வழியின்றி, கனவுகளைப் புதைத்துவிட்டு மங்கல நாணை மனமுவந்து ஏற்றுக் கொண்டவள். அதற்குப் பிறகு வாழ்க்கை தெளிந்த நீரோடையாகத்தான் போய்க்கொண்டிருந்தது, இரண்டாவது குழந்தை பிறக்கும் வரை. நல்ல வசதியான குடும்பம். பரம்பரையாக நெசவுத் தொழில் செய்பவர்கள். தற்காலமுறையில் நவீனப்படுத்த்ப்பட்ட இயந்திரங்களுடன், கடின உழைப்பும் சேர நன்கு கொடிகட்டி பறந்து கொண்டிருந்தனர்.

காலச்சக்கரம் எப்போதும் ஒரே மாதிரி சுழலுவதில்லையே. நூல் விலை ஏற்றம் பணியாட்கள் பிரச்சனை என வியாபாரத்தில் புயல் அடிக்க ஆரம்பிக்க, காரணங்கள் அலசப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, ஜோசியம், ஜாதகம் என்று பார்க்க ஆரம்பித்தார்கள். அப்போதுதான், சந்திரிகா இரண்டாவது குழந்தை உண்டாகியிருந்தாள். வீட்டு நிலை அவள் உடல்நிலையையும் பாதித்தது. மிகப் பொறுமையான குணமும், அமைதியான சுபாவமும் கொண்டவளான அவள் அனைத்தையும் பொறுத்துக் கொண்டுதான் இருந்தாள். ஆனால் அந்தப் பொறுமையின் எல்லையைச் சோதிப்பதாகவே சம்பவங்கள் நடந்தது.

எத்தைத் தின்றால் பித்தம் தெளியும் என்ற நிலையில், அனைத்து விதமான பரிகாரங்களும் செய்யத் தயாராகிவிட்டனர். அந்த இடத்தில்தான் சந்திரிகாவின் விதி விளையாட ஆரம்பித்தது. குடும்ப ஜோசியர் குலதெயவ வழிபாடு, அன்னதானம் என ஏற்றுக்கொள்ளக்கூடிய அனைத்துப் பரிகாரங்களையும் சொன்னவர், இறுதியாக ஒரு குண்டை தூக்கிப் போட்டுவிட்டார். ஆம், சந்திரிகாவின் வயிற்றில் கரு உருவான நேரம் சரியில்லையாம்.! அதுவும் ஒரு காரணமாம் வியாபாரம் நொடித்துப்போவதற்கு. அவ்வளவுதான் குடும்பமே சேர்ந்து முட்டாள்தனமாக ஒரு முடிவெடுத்துள்ளார்கள். சந்திரிகாவின் வயிற்றில் வளரும் கருவை அழித்துவிடுவது என்று. அவள் அழுது ஆர்ப்பாட்டம் செய்தும் கணவனின் கட்டாயத்தால், வேறு வழியின்றி மருத்துவமனை சென்றவள், அங்கு மருத்துவர், குழந்தை நன்கு வளர்ந்துவிட்டதால் கருவை அழிக்க முடியாது என்று சொல்லி, வயிற்றில் பாலை வார்த்ததால், வேறு வழியின்றி, வீடு திரும்பினர்.

நாட்கள் பிரச்சனைகளுடன் சேர்ந்தே நகர்ந்து கொண்டிருந்தது. வியாபாரத்தில் ஒரு பிரச்சனை முளைவிட ஆரம்பிக்கும்போதே அதன் வேரை சரியாக அறிந்து அதனைக் களையாவிட்டால், அது விடவிருட்சமாக வளரத்தானே செய்யும்? அதனைக் களையும் முயற்சியை சரியாகக் கடைப்பிடிக்காமல், தேவையற்ற மற்ற விசயங்களில் கவனம் செலுத்தி, மேலும் பிரச்சனையை வளர்த்துக்கொண்டவர்கள், சந்திரிகாவின் வயிற்றில் வளரும் குழந்தையின் மீதே அதிருப்தியை வெளிப்படுத்திக் கொண்டேயிருந்ததால் அவள் மனதிலும், உளைச்சல் அதிகமாக ஆரம்பித்தது. விளைவு அவள் உடல் நலமும் பாதிக்கப்பட்டது. பிரசவ நேரம் நெருங்க, நெருங்க, குடும்பத்தில், குழந்தை பிறந்தவுடன் அதை என்ன செய்வது என்று யோசிக்கும் அளவிற்கு போனது, தாயினால் தாங்க முடியாத வேதனையாகிப் போனது.

பிரசவ வேதனையை பல்லைக் கடித்துக்கொண்டு தாங்கிக் கொண்ட அந்தத் தாய்க்கு, பெற்ற குழந்தையை அனாதை ஆசிரமத்தில் விட்டுவிடலாம் என்று இறுதியாக எடுத்த முடிவில் உடன்பட முடியாத வேதனையில் கதிகலங்கிப் போனாள். எவ்வளவோ வாதாடிப் பார்த்தும் குடும்பத்தில் அனைவரும் ஒன்றுபோல குழந்தையை இழப்பதிலேயே குறியாய் இருக்க, செய்வதறியாது, மன வேதனையில் புழுவாய்த் துடித்தவள், பிறந்தவீடே அடைக்க்லம் என்று அடிக்கடி அங்கு சென்று தங்கவும் ஆரம்பித்திருக்கிறாள். அங்கேயும் அவளுக்குப் பிரச்சனை உறவினர் வழியாக வந்துள்ளது. பெண் கணவன் வீட்டில் ஒழுங்காகப் பிழைக்காமல் தாய் வீட்டில் வந்து அடிக்கடி தங்க ஆரம்பித்தால் சில பெற்றவர்கள் வழக்கமாகச் செய்யும் தவறு, அப்பெண்ணின் மனநிலையைப் பற்றிக்கூட அறிந்து கொள்ள முயலாமல், எப்படியும் அவளை சமாதானப்படுத்தி கணவன் வீட்டில் கொண்டு விட்டுவிடுவது….. அதற்கு, திருமணம் ஆகாத அடுத்த பெண்ணைக் காரணம் காட்டி அவள் வாழ்க்கை கெட்டுவிடும் என்று பயமுறுத்தி கட்டாயப்படுத்தி அனுப்பி விட்டார்கள்.

பிரச்சனை அதிகமாக, புகுந்த வீட்டிலோ குழந்தையை எங்காவது தொலைத்துவிட்டு வந்தால்தான் ஆச்சு என்று கட்டாயப்படுத்தவும், பிறந்த வீட்டிலோ, கணவனும், மாமனார், மாமியாரும் என்ன சொல்கிறார்களோ அதன்படி கேட்டுத்தான் நடக்க வேண்டும் என்று உறுதியாகச் சொல்லி அனுப்பிவிட்டதாலோ, இருதலைக்கொள்ளி எறும்பாக போக்கிடம் தெரியாமல், ஒரு வயதே ஆன, பெண் குழந்தையை, இழக்கவும் முடியாமல் அத்தாய் பட்டவேதனை சொல்லில் அடங்காது. பொருளாதாரச் சுதந்திரமும் இல்லாமல், தனியாக வெளியே சென்று குழந்தைகளைக் காப்பாற்றும் துணிச்சலும் இல்லாமல், பெற்றக் குழந்தையை பிரித்து வைக்கக் கட்டாயப்படுத்தும் கொடுமையைச் செய்யும் புகுந்த வீட்டாரைத் தட்டிக் கேட்கும் தைரியமும் இல்லாமல், ஒரு பெண் எடுக்கக் கூடிய அடுத்த முடிவு என்னவாக இருக்க முடியும்?

ஆம், அதேதான், தன் இறப்பு மட்டுமே இதற்கான ஒரே தீர்வு என்று முடிவெடுத்தவள், தன் குழந்தைகளும் இவர்களிடம் சிக்கித் தவிக்கக் கூடாது என்ற கோழைத்தனமான முடிவையும் சேர்ந்தே எடுத்து விட்டாள். மூன்று வயதான மூத்த மகனையும், ஒரு வயதான இளைய மகளையும் தம் படுக்கையறையினுள் கூட்டிச்சென்று, எண்ணவும் அச்சம் ஏற்படுத்தும் செயலைச் செய்துவிட்டாள். மண்ணெண்ணையை ஊற்றிக் கொளுத்தி விட்டாள். மூன்று உயிர்களும் கருகி சாம்பலாகிவிட்டன. இதற்கு யார் காரணம், மூடநம்பிக்கைகள் என்றாலும்,

பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
பயங்கொள்ள லாகாது பாப்பா!
மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!
துன்பம் நெருங்கி வந்த போதும்-நாம்
சோர்ந்துவிட லாகாது பாப்பா!
திடங்கொண்டு போராடு பாப்பா!

என்று முழங்கினானே பாரதி, அத்துணிச்சலை ஊட்டி வளர்க்காத பெற்றோரின் குற்றமா அன்றி,

துன்பம் தீர்வது பெண்மையி னாலடா!
சூரப் பிள்ளைகள் தாயென் றும் போற்றுவோம்.
வலிமை சேர்ப்பது தாய்முலைப் பாலடா!
மானஞ் சேர்க்கும் மனைவியின் வார்த்தைகள்
கலிய ழிப்பது பெண்க ளறமடா!
கைகள் கோர்த்துக் களிப்பதுநின் றாடுவோம்.!

என்று கணவனை வழிநடத்திச் செல்லும் வனமையையும் வளர்த்திக் கொள்ளாதது அவளுடைய குற்றமா? சிந்திக்க வேண்டும் நண்பர்களே. பெண் குழந்தைகளை கட்டுப்பாடுகள் வைத்து வளர்க்க வேண்டியது அவர்களுடைய பாதுகாப்பிற்காக மட்டுமே என்று வாதிடும் பெற்றோராக இருந்தாலும், அவளுக்கு தற்காப்பு என்ற தாரக மந்திரத்தையும், வாழ்க்கையில் எத்தகைய பிரச்சனைகள் வந்தாலும், கோழைத்தனமான முடிவு எடுக்காமல், எதிர்த்து நின்று சமாளிக்கும் வல்லமையையும் ஊட்டி வளர்க்க வேண்டாமா?

ஒரு பெண் குழந்தை பிறந்தவுடன், பெற்றோரின் பொறுப்புகள் அதிகமாவதை உணரும் நாம், தங்கத்தையும், வெள்ளியையும் சேர்க்க ஆரம்பிக்கிறோம். அவளுடைய சுயவலிமையை மேம்படுத்திக் கொள்ளும் கலையைக் கற்பிக்கத் தவறுகிறோம். திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் ஒரு பகுதி மட்டுமே. அதற்கு அவள் தன்னை முழுவதுமாக தயார்படுத்திக் கொள்ளவேண்டும். அதற்கு அவளுக்குத் தேவையான கல்வியறிவை ஊட்டவேண்டும். சுயவிழிப்புணர்வை ஏற்படுத்தி வாழ்க்கையில் நேர்படும் பிரச்சனைகளை எதிர்த்து நின்று சமாளிக்கும் சக்தி கொடுப்பதும் அக்கல்வியறிவு மட்டுமாகத்தானே இருக்க முடியும். அக்கல்வியறிவை எப்பாடுபட்டேனும் அளிக்க வேண்டும் என்பதில் உறுதி கொள்ள வேண்டும். அது மட்டுமே இது போன்றதொரு பிரச்சனைகள் வராமல் தடுக்கக்கூடிய காப்பாக அமைய முடியும் அல்லவா.

”தற்காத்துத் தற்கொண்டாற் பேணித் தகைசான்ற
சொற்காத்துச் சோர்விலாள் பெண்.”
என்னும் ஐயனின் வாக்கைக் காக்கும் பெண்மகளாக வாழும் வாய்ப்பை வளப்படுத்துவோம்!

தயவுசெய்து உங்கள் கருத்துகளை பகிர்ந்து கொள்ளுங்கள்.

தொடரும்.

படங்களுக்கு நன்றி:

http://ssubbanna.sulekha.com/albums/bydate/2009-09-20/slideshow/281605.htm

http://trade.indiamart.com/details.mp?offer=2095133988

2 comments:

  1. இனிய நந்தன வருட வாழ்த்துக்கள் உங்களுக்கும் !

    பெண்மனநிலையில் பெண்ணும் ஒரு மனித உயிராய் மதித்தெழுதிய அழுத்தமான பதிவு.ஆண்கள் அல்லது சமூகம் பெண்ணின் இயல்பான மென்மையை அதன் பலஹீனத்தைப் ஆண்டாண்டாகப் பயன்படுத்திப்பழகிவிட்டது.பெண்கள் நாங்கள் துணிவு,தைரியம்,நம்பிக்கையோடு செயல்படத் தொடங்கினால் மட்டுமே வாழ்வை ஓரளவு சந்தோஷமாக வைத்திருக்கமுடியும்.தற்கொலை கோழைத்தனம்.வெறுக்கிறேன் !

    ReplyDelete
  2. பாதகஞ் செய்பவரைக் கணடால்-நாம்
    பயங்கொள்ள லாகாது பாப்பா!
    மோதி மிதித்துவிடு பாப்பா!-அவர்
    முகத்தில் உமிழ்ந்துவிடு பாப்பா!

    இனிய நந்தன வருட வாழ்த்துக்கள்..

    பெண்களுக்குத் தைரியம் ஊட்டிவளர்ப்பது அவசியம்..

    ReplyDelete