Friday, March 18, 2016

தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்





பவள சங்கரி


தமிழர் தம் தெய்வ வழிபாடுகளும் குறியீடுகளும்

ஆன்மீக நாடான நம் தமிழ்நாட்டில் ஆயிரக்கணக்கான கோவில்களும், வழிபாடுகளும் இருந்தாலும், குல தெய்வ வழிபாடு என்பது அந்தந்த குடும்பங்களில் உள்ள நபர்களுக்கான தனிப்பட்டதொரு தெய்வம் என்பதால் மிகவும் சக்திவாய்ந்த தெய்வமாகக் காணப்படுவது குறிப்பிடத்தக்கது.குலம்' என்றால் "குடும்ப பாரம்பரியம்' என்று பொருள். நமது குடும்பத்திற்கென்று ஒரு வழிபாட்டு தெய்வத்தினை நமது முன்னோர்கள் வைத்திருக்கிறார்கள். தனது அடுத்த சந்ததியினர் நன்றாக இருக்க வேண்டும் என்பதே குல தெய்வ வழிபாட்டின் முக்கியக் குறிக்கோள். ‘சுக்குக்கு மிஞ்சிய மருந்தும் இல்லை, குலதெய்வத்திற்கு மிஞ்சிய கடவுளும் இல்லை’ என்று வழிவழியாக வழங்கப்படும் பழமொழியே இதற்குச் சான்றாகும். அதாவது  ஒருவரது குலம் ஆல்போல் தழைத்து அருகுபோல வேரூன்ற வேண்டுமெனில் குலதெய்வ வழிபாடு என்பது மிகவும் அவசியமான ஒன்று. அந்த வகையில் தமிழ் நாட்டில் குல தெய்வ வழிபாடு என்பது நாகரிக மாந்தர்கள் மத்தியில் அருகி வந்தாலும் சிற்றூர்கள் மற்றும் கிராமப்புறங்கள், பாரம்பரியக்  குடும்பங்கள் போன்ற இடங்களில் இன்றளவிலும் தவறாமல் ஐதீக முறைப்படி வழிபாடுகள் நடைபெறுவதைக் காணமுடிகிறது. சிலர் குல தெய்வ வழிபாட்டை சிறு தெய்வ வழிபாடு என்று புறந்தள்ளுபவர்களையும் காண முடிகிறது.

சிவனோடு ஒக்கும் தெய்வம் தேடினும் இல்லை
அவனோடு ஒப்பார் இங்கு யாரும் இல்லை
புவனம் கடந்தஅன்று பொன் ஒளி மின்னும்
 தவனச் சடை முடித் தாமரையானே! (திருவாசகம்)

என்பார், சிவனைத் தவிர எந்த ஒரு தெய்வத்தையும் வழிபடுவதில்லை என்று உறுதியாக இருப்பவர்கள். குலதெய்வம் பெரும்பாலும் சிறு தெய்வமாகவே காணப்படும் என்றாலும்  அளவிட முடியாத சக்தி படைத்த தெய்வம் என்ற நம்பிக்கையும் உண்டு. குல தெய்வம் என்பது தங்கள் குலத்தில் தோன்றிய  முன்னோர்களாகவோ அல்லது தங்கள் குடும்பம், சமூகம் அல்லது பல குடும்பங்கள் விளங்க தங்கள் உயிரையே கொடுத்து காப்பாற்றியவராகவும் இருக்கலாம்.
குல தெய்வம் என்று எடுத்துக்கொண்டால் எந்த ஒரு வம்சத்திலும் 13 வம்சாவளியினருக்கு மேல் வணங்கும் குல தெய்வம் இருக்க முடியாது என்கிறார்கள். குறிப்பிட்ட அந்த வம்சத்தில் வழி வழியாக வந்தவர்களில் சிலருக்கு குழந்தைப் பேறு இல்லாமலோ, அகால மரணங்களினாலோ, ஆண் வம்ச விருத்தி அடையாமலோ அல்லது வேறு ஏதும் காரணத்தினாலோ வம்சம் அழிந்து விடக்கூடும் என்ற நம்பிக்கையும் உண்டு. ஆகவே ஒரு வம்சத்தின் குல தெய்வம் என்பது 13  வம்சாவளிகளுக்கு மட்டுமே  சக்தியளிக்கக்கூடியதாக இருக்கும் என்றும் நம்புகிறார்கள். எந்தவொரு நல்ல காரியமும்  குல தெய்வத்தை வழிபட்ட பின்பே செய்வது பெரும்பாலான குடும்பங்களில் வழமையாக உள்ளது. குழந்தைக்கு முதல் மொட்டையடிப்பதும் குல தெவ கோவிலில் மட்டுமே செய்பவர்களும் உண்டு. குலதெய்வத்தின் கோவிலுக்கு செல்லும்போது பொங்கல் வைத்து சாமி கும்பிட்டு வரவேண்டும். எல்லா குலதெய்வத்திற்கும் அது தான் வழக்கம்மகள் என்பவள் திருமணம் ஆனவுடன் புகுந்த வீட்டிற்குச் சென்று விடுவதினால் அவளுக்கு தாய்-தந்தையின் குல தெய்வத்தை தனது குல தெய்வமாக ஏற்க முடியாமல் போகிறது. அவள் புகுந்த வீட்டின் குலதெய்வமே அவள் குல தெய்வம் ஆகி விடும்.
.குருவை மறந்தாலும் குலதெய்வத்தை மறவாதே... 

..குலதெய்வத்தைக் கும்பிட்டு கும்மியடி...

என்ற முதுமொழிகள் குலதெய்வ வழிபாட்டினைக் குறிப்பிடுகின்றன.

குல தெய்வங்கள் தோன்றும் முறையை ஒவ்வொரு குடும்பத்திலும் ஒரு நாட்டுப்புற கதை போலவே செவி வழிக் கதையாக சுவைபட வழங்கப்படுவதும் குறிப்பிடத்தக்கது. உதாரணத்திற்கு, ஒரு கன்னிப்பெண் குல தெய்வமான கதையைக் காணலாம்.

குல தெய்வம்


பாரதி ராஜாவின் கேமராக் கண்களுக்குத் தப்பிய அழகிய பண்ணை வீடு. வீட்டைச் சுற்றி கண்ணுக்கு எட்டிய தூரம் வரை பச்சைக் கம்பளம் விரித்தது போன்று அப்படி ஒரு பசுமை, நிறை மாத கர்ப்பிணியாக துவண்டு நிற்கும் நெற்கதிர்கள்! வரப்பு மேட்டு மேலேயே போய் நெல் வயலைத் தாண்டியவுடன் ஒரு புறம் தாயும், கன்றுமாக வாழைத்தோப்பும், மறு புறம் நெடிதுயர்ந்து கொத்துக் கொத்தாக குலையுடன் தென்னை மரங்களின் அணிவகுப்பு.இந்தக் காட்சியெல்லாம் சாமான்யரையே கிறங்கச் செய்யும் போது கவிஞரொருவரின் கண்ணில் பட்டால் என்ன ஆவது?

அந்தி மயங்கும் மாலை வேளையில் வரப்பு மீது அமர்ந்து கொண்டு ஓடை நீரில், கணுக்கால் தெரியும் வரை சின்னாளப் பட்டுப் பாவாடையை தூக்கிப் பிடித்துக் கொண்டு காலை விட்டு ஆட்டிக் கொண்டே சலசலக்கும் அந்த ஓடை நீரின் தண்ணளியுடன் கூட்டில் அடையும் ஆவேசத்துடன் அன்றில் பறவைகள் அணிவகுத்துச் செல்லும் அழகையும், குச்சு வீட்டில் காதல் மொழி பேசி கொஞ்சிக் குலவும் இணைகளின் சங்கேத மொழியின் கீதமும் கண்ணையும், செவியையும் ஒரு சேர கொள்ளை கொள்ள, வானத்தில் ஆங்காங்கே கரிய மேகங்களின் ஓவியச் சாலங்களும் அதில் இணைந்து கொள்ள தன்னை மறந்ததொரு மோன நிலைக்குச் செல்ல வேறு முகாந்திரமும் வேண்டுமோ ஒயிலரசிக்கு? இவளுடைய அன்றாட வழமைகளில் இதுவும் ஒன்று.

எலே, ஒயிலா, நெதமும் இது ஒனக்கு தொழுவாடா போச்சுதா? காலேசு உட்டு ஊடு வந்தோமா, எதுனாச்சும் சாப்புட்டோமான்னு கூட இல்லாம, நேரா இங்கன வந்து குந்திக்கிட்டு ஆகாசத்தையும், பூமியிம் விரைக்க விரைக்க பாத்துக்கிட்டு அப்படி என்னலே பண்ணுதே…..?”

போங்க அப்பத்தா, இன்னும் கொஞ்சம் நேரம் போனா நானே வந்துடப் போறேன். நீங்க என்னத்துக்கு இவ்வளவு தொலவு வந்தீங்க?”

சரி சரி வா போகலாம். உங்கம்மா கடந்து ஆகாசத்துக்கும் பூமிக்குமா குதிச்சிக்கிட்டு கிடக்கா
அப்பத்தா இந்த பச்சப் பசேல் வயலும் தென்னங் காத்தும், சலசலக்கும் நீரோடையும், புள்ளினங்களின் கீதமும் என்னை அப்படியே மயக்கி கட்டிப் போடுது அப்பத்தா. அப்படியே இந்த இயற்கையோடேயே கரைஞ்சு போயிட மாட்டோமான்னு மனசு ஏங்குது அப்பத்தா

என்னலே என்னமோ சினிமா வசனமாட்டம் பேசற. உங்கப்பன் என்னமோ உன்னை பெரிய படிப்பெல்லாம் படிச்சு பட்டணத்துல உத்தியோகம் பாக்குற மாப்பிள்ளைக்கு கட்டிக் குடுக்கப் போறதா சொல்லிக்கிட்டுத் திறியறான். நீ என்னடான்னா இந்த தோட்டத்தையே கட்டிக்கிட்டு கிடக்கற

போங்க அப்பத்தா நான் செத்தாலும் இந்த தோட்டத்தை விட்டுப் போக மாட்டேன் ஆமா!”

அவள் பேச்சில் இருந்த உறுதியும் முகத்தில் தெரிந்த கடுமையும் அப்பத்தாவையும் ஒரு கணம் மிரளச் செய்தது.

அப்பத்தா நம்ம கருப்பராயன் கோவில்கிட்ட பெரிய வேப்பமரம் இருக்கிதுல்ல. அதுக்குங் கீழே சின்ன சின்ன சாமியா இருக்குதே அது என்ன சாமி அப்பத்தா?”


அதுவா அது ஏழும் ஏழு கன்னிமாருங்க. நம்ம பரம்பரையில கன்னியா செத்துப் போன பொண்ணுங்க நம்ம குலதெய்வமா அங்கனயே இருந்து நம்ம வம்சத்தையே காத்துக்கிட்டு இருக்குதுன்னு எம்பட மாமனாரு, அதேன் உங்க பெரிய தாத்தன் சொல்லுவாரு

பாட்டியும்,பேத்தியும் பேசிக் கொண்டே வீடு வந்து சேர்ந்தனர். வழக்கம் போல அம்மாவின் சத்தத்தைச் சமாளிக்க ஓடிச் சென்று அவள் கழுத்தைக் கட்டிக் கொண்டுமன்னிச்சுடும்மா….என் செல்லந்தானே..கோவிச்சுக்காதம்மாஎன்று கொஞ்சிக் கொண்டே காபியை வாங்கி உறிஞ்சிக் கொண்டே, ‘மஞ்சுக் குட்டிஎன்று செல்லமாகக் கூப்பிட்டாள்.

அக்காவின் குரலைக் கேட்டவுடன் தாய்ப்பசுவைக் கண்ட கன்றைப் போல துள்ளிக் கொண்டு ஓடி வந்து அவளை அணைத்துக் கொண்டாள்.

என்னக்கா, இன்னைக்கு என்னக்கூட பார்க்காம தோட்டத்துக்குப் போயிட்ட. உனக்காக எவ்வளவு நேரமா என் மார்க் சீட்டை காட்டறதுக்காக காத்துக்கிட்டு இருக்கேன்

என் செல்லக்குட்டி எப்பவுமே ஃபர்ஸ்ட் ரேங்க் தானே. அதில என்ன சந்தேகம். சரி உனக்கு உன்னோட ஃபேவரிட் மயிலிறகு நாளைக்கு கொண்டு வந்து தறேன். சரியா.”

அம்மா நான் போயி கண்ணன் அண்ணனை பார்த்துட்டு வாரேன்
எதுக்குடி இந்நேரத்துல போற... காலைல போகலாமில்ல

இல்லம்மா,எனக்கு அண்ணனைப் பார்க்கலாம்னு இருக்கு. நாளைக்கு அண்ணன் தான் என்னை பாக்க வாரோனும்என்றாள் சிரித்துக் கொண்டே.

கண்ணன் ஒயிலாவின் பெரியப்பா மகன். அவளிடம் மிக அன்பாக இருப்பவன்.பிறந்த நாளுக்கு ஒவ்வொரு வருடமும் அவன் எடுக்கும் துணியைத்தான் அவள் அணிந்து கொள்வாள். அண்ணனும் தன் தங்கைக்கு அவள் விரும்பும் துணியைப் பார்த்து பார்த்து டவுனுக்குச் சென்று வாங்கி வருவான்.ஒயிலாவும் ஒரு சின்ன விசயமானாலும் அண்ணனைக் கேட்காமல் செய்ய மாட்டாள். பக்கத்துத் தோட்டத்திலேயே அவள் பெரியப்பா வீடு என்பதால் தினமும் ஒரு முறையாவது சென்று வருவாள்.

பெரியப்பா, பெரியம்மா, அண்ணன் எல்லோரையும் பார்த்து விட்டு வீடு திரும்புவதற்கு இரவு மணி 8 ஆகியிருந்தது. அப்பாவுடன் உட்கார்ந்து அன்று நடந்ததெல்லாம், கல்லூரித் தோழிகள் பற்றி என்று ஒரே அரட்டைதான்.

பாட்டியின் அருகில்தான் அவளுக்கும் படுக்கை. தூக்கம் வரும் வரை ஏதேனும் பழங்கதைகள் பேசிக் கொண்டிருப்பது இருவருக்கும் வழமையான ஒரு பொழுது போக்கு. பாட்டியும் ஊர் கதை அத்தனையும் அறிந்து வைப்பவர். தன் பேத்தியும் எல்லாவற்றையும் பற்றி அறிந்து வைத்திருப்பது நல்லது என்று எண்ணுபவர்.

அப்பத்தா, போன வருசம் நம்ம செண்பகம் அத்தையோட பொண்ணு சந்திரா, அதான் எங்கூட படிச்சாளே அப்பத்தா, அவ எப்படி அப்பத்தா செத்திருப்பா. அவ, மண்ணெண்ணை அடுப்பு வெடிச்சி செத்துட்டதாத்தானே நாம நினைச்சிக்கிட்டு இருக்கோம். ஆனா, அப்படி இல்லையாம்.அவ வேணுமின்னே தானே நெருப்பு பத்த வைச்சுக்கிட்டாளாம். ”

சரி அதப்பத்தி இப்ப என்னாத்துக்குப் பேசறே? தூங்கறப்ப கண்டதையும் பேசக் கூடாது”.

இல்ல அப்பத்தா,செத்துப் போனப்பறம் என்ன ஆவாங்கன்னு சொல்லு ….”

நல்லபடியா செத்தா சாமிகிட்ட போவாங்க. உடம்பு போனாலும் ஆன்மா அழியாது. ஒரு குறிப்பிட்ட காலம் வரை இருந்துட்டு அடுத்த பிறவியோ அல்லது சாமி பாதத்துக்கோ போயிடும். அது அவரவர் விதிப்படி நடக்கும். ஆனா, உங்க அத்தை மகள் போல நிறை மாத புள்ளதாச்சியா, புருசன்கிட்ட சண்டை போட்டுக்கிட்டு கிணத்துல விழுந்து செத்துப் போனாப் பாரு அப்படிப் போனாத்தான் ஆவேசம் அடங்காம ஆவியா அலைவாய்ங்க…….அவளும் அப்படித்தேன் கொஞ்ச நாள் அலைஞ்சிக்கிட்டு கிடந்ததா சொல்லுவாய்ங்க….அப்பறம் பூசையெல்லாம் பண்ணி அவளுக்கு சாந்தி பண்ணாங்க.. சரி சரி தூங்கு. காலைல பேசிக்கலாம்.தூங்கும் போது சாமியப் பத்தி மட்டும் தான் நினைக்கோனும் சரியா ஆத்தா….”

வழமைக்கு மாறாக அன்று வெகு சீக்கிரமே விழித்துக் கொண்டாள் ஒயிலரசி.
நேரே சமயலரையில் சென்று தாயிடம் வம்பிழுக்க ஆரம்பித்து விட்டாள். தாய்க்கு மிக ஆச்சரியம் மகள் என்றும் இல்லாத திருநாளாக இவ்வளவு சீக்கிரம் எழுந்து விட்டாளே.

அம்மா எனக்கு இன்னைக்கு தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிப்பாட்டுகிறாயா…”என்றாள்

என்னடி இது அதிசயம். தலைக்கு குளிக்கறதுனாலே உன் கிட்ட சண்டை போட்டு மாளாது, இன்னைக்கு அதிசயத்துக்கு மேல அதிசயமா இருக்கு.என்னை வேற தலைக்கு குளிச்சி விடச் சொல்லறமழைதான் கொட்டப் போகுது போ…”

மகளுக்கு தலைக்கு நல்லெண்ணெய் இளம் சூடாகக் காய்ச்சி அதில் சிறிது வெந்தயமும் போட்டு, அந்த எண்ணையை தலையில் நன்கு தேய்த்து ஊறவிட்டு பிறகு தண்ணீர் காய வைத்து மகளுக்கு தலை தேய்த்து குளிக்க வைத்து சாம்பிராணிப் புகை போட்டு , அதன் மீது பெரிய கூடை கவிழ்த்து , அவளுடைய சுருள் சுருளான, நீண்ட கூந்தலை அதன் மீது விரித்து சாம்பிராணிப் புகை எல்லாப்பக்கமும் பரவும் படிச் செய்து அவள் கூந்தல் காய்ந்ததோடு நறுமண்மாகவும் இருந்தது.

அம்மாவை இட்லி ஊட்டி விடச் சொல்லி அடம் பிடித்து ஒரு இட்லி சேர்த்தே சாப்பிட்டாள் என்றும் இல்லாதத் திருநாளாக.தனக்கு மிகவும் பிடித்தமான, பளபளவென கருப்பு வண்ண ஜெர்சி பாவாடையும் அதே வண்ண இரவிக்கையும், வெள்ளை சிப்பான் ஜார்ஜெட் தாவணியும் அணிந்து கொண்டு அழகு தேவதையாய் கல்லூரிக்குக் கிளம்பினாள்.

தன் மகளின் அழகைப் பார்த்து தாய்க்கு மாளாத பெருமை. இருக்காதா பின்னே. அந்த ஊரிலேயே கொடியிடை அம்மன் போல மிக அழகான பெண் இவள்தான். கடைக்குட்டி மஞ்சுவும் அக்காவின் அழகிற்கு சளைத்தவள் அல்ல. தன் மகள்களுக்கு சுத்திப் போட வேண்டும் என்று நினைத்துக் கொண்டாள். வீட்டில் ஒவ்வொரு வியாழன் மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் வாடிக்கையாக நடக்கின்ற ஒன்று.

ஊரு கண்ணு உறவு கண்ணு
கோழி கண்ணு கொள்ளி கண்ணு
அண்டை கண்ணு அயலு கண்ணு
பல்லி கண்ணு பாம்பு கண்ணு
தாய் கண்ணு தந்தை கண்ணு
உற்றார் கண்ணு மற்றார் கண்ணு
மூளி கண்ணு முட்டை கண்ணு
எல்லா கண்ணும் மண்ணோடு மணணாப் போக

என்று சிகப்பு மிளகாய் சுற்றி அடுப்பில் போட்டு அது காரத்துடன், சடசடவென பொரிய, தாய் கண்ணிலோ மகள்களின் கண் திருட்டியெல்லாம் போய் விட்டது என்று பெருமை பொங்கும் !

பேருந்து நிறுத்தத்தில் தோழி மாலாவுடன் நின்று கொண்டிருக்கும் போது ஏதோ லேசாகத் தலை சுற்றுவது போல இருந்தது ஒயிலாவிற்கு. என்னமோ நடக்கப் போகிறது என்பதை உள்ளுணர்வு உணர்த்திக் கொண்டிருந்தது. எங்கோ மற்றொரு உலகத்தின் வாசல் தனக்காக திறந்து கொண்டிருப்பதாகத் தோன்றியது. கண்கள் இருட்டிக் கொண்டிருந்தது.ஆனாலும் மன உறுதி அதனோடு போராடச் செய்து தலையை சிலிர்த்துக் கொண்டு கண்ணை விரித்து பார்வையை தெளிவு படுத்திக் கொண்டு ஒரு அடி எடுத்து வைக்க முயன்று….தோற்று , மூக்கில் ஏதோ ஊறுவது போன்று தோன்ற துடைக்க எண்ணி கைக்குட்டையை எடுத்து துடைத்து விடடு தன்னிச்சையாக கையைப் பிரித்துப் பார்த்தவள் அந்தக் கைக்குட்டையெல்லாம் இரத்தமாக இருந்ததைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தாலும், சில்லி மூக்கு உடைந்திருக்கும் சற்று நேரத்தில் சரியாகி விடும் என்று நினைத்துக் கொண்டே, பேருந்து வருவதைப் பார்த்து விட்டு அதை நோக்கிச் செல்ல முடிவெடுத்த வேளையில் அருகிலிருந்த தோழி மாலாவிற்கு, ஒயிலாவின் முகத்தில் இருந்த ஒரு இயலாமை தன்னையும் பின் வாங்கச் செய்தாலும், ஒயிலா அவள் கையையும் பிடித்து இழுத்துக் கொண்டு இருவரும் பேருந்தில் ஏறி உட்கார்ந்தார்கள்.

உட்கார்ந்து சற்று சாய்ந்து இளைப்பாற நினைத்து மெதுவாகக் கண்ணை மூடியவள் .. அதற்குப் பிறகு நடந்தது எதுவும் அவள் அறிந்தாளில்லை. அருகில் இருந்த மாலா மட்டும் ஒயிலாவிடம் இருந்த பெரும் மாற்றத்தைக் கவனித்துக் கொண்டிருக்கும் போதே, திடுமென மூக்கிலிருந்து இரத்தம் வெள்ளமாக பெருக ஆரம்பித்தது…..மாலாவின் மீது அப்படியே சரிந்து விட்டாள். மாலா போட்ட கூச்சலில் பேருந்தின் ஓட்டுநர் அப்படியே பேருந்தை ஓரம்கட்டி நிறுத்தினார். நடத்துநர் ஓடி வந்து பார்த்து சூழலைப் புரிந்து கொண்டு கூடியிருந்த மாணவர்களை விலக்கி விட்டு நேரே அரசாங்க மருத்துவ மனைக்கு பேருந்தை செலுத்தச் செய்து ……..பின் நடந்ததெல்லாம் சாமான்ய மக்கள் உணர முடியாத ஒரு அமானுஷ்ய நிகழ்வுகள் ஆகிப் போனது! ஆன்மா என்ற ஒன்று அழிவில்லாதது……..உயிர் என்பது என்றுமே அழிவில்லாதது. இதற்கான ஆதாரமே ஒயிலரசியின் சரிதம் ஆனது.

ஆம், அன்று இரவே ஒயிலரசி தன் அன்புத் தங்கை கனவில் வந்து தோட்டத்தில் உள்ள கன்னிமார் சிலைகளில் மூன்றாவது சிலையில் தாம் இருப்பதாகவும், இனி தாம் குலதெய்வமாக இருந்து சந்ததியினரைக் காக்கப்போவதாகவும் சொன்னதாகக் கூறுகிறாள். சின்ன மகளின் பேச்சைக்கேட்டு அவள் சொன்ன இடத்திற்கு ஓடியவர்கள், அங்கு ஒயிலரசி அணிந்திருந்த கை வளையல்களும், தலை முடியில் கட்டும் ரிப்பன், பொட்டு போன்ற சில பொருட்கள் இருப்பதையும் பார்த்து ஓவென்று அழுதவண்ணம், அவைகளை எடுத்து பத்திரப்படுத்தியவர்கள் அன்று முதல் அவள் சொல்லிச் சென்றவாறு அவளையேத் தங்கள்  குலதெய்வமாக வழிபட ஆரம்பித்தனர்.

முடிவுரை:

குலதெய்வம் என்பது நம் பெற்றோரைப் போல நம்கூடவே இருந்து வழிகாட்டும் அருட்சக்தியாகக் கருதப்படுகிறது. நமக்கு ஒரு துன்பம் நேருகிறபோது  குலதெய்வம் தான் உடனே முன் வந்து காப்பாற்றும், மற்ற தெய்வங்கள் எல்லாம் அடுத்து தான் வரும் என கிராமங்களில் கூறுவர். வீரத்தோடு வாழ்ந்து வீரமரணம் அடைந்தவர்களுக்கு நடுகல் வழிபாடு செய்வது சங்க காலத்தில் இருந்தே தமிழ்நாட்டில் நடைமுறையில் இருந்தது. அதில் இருந்து குல தெய்வ வழிபாடு உருவாகி இருக்கலாம் என்ற கருத்தும் நிலவுகிறது. குல தெய்வ வழிபாடு கிராம மக்களை நெறிப் படுத்துவதோடு, அவர்களை ஒற்றுமைப்படுத்தவும் செய்கிறது.
தொழில் நிமித்தமாக பல இடங்களில் பரவி இருக்கும் உறவினர்களை ஒன்று சேர்த்து காணும் வாய்ப்பை குல தெய்வ வழிபாடே ஏற்படுத்திக் கொடுக்கிறது. கணவன் மரணம் அடைந்ததும் உடன்கட்டை ஏறும் பெண்களுக்கும் இறைசக்தி இருப்பதாக நம்பி வழிபடப்பட்டது. தீப்பாய்ச்சியம்மன் இம்முறையில் இருந்து வந்ததாக கூறப்படுகிறது
குல தெய்வ கோவில்கள் பெரும்பாலும் `வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கியே கட்டப்பட்டிருக்கும். ராஜகோபுரம், மாட வீதிகள் என்று இருப்பதில்லை. சிறிய கோவில் அமைப் பாகத்தான் இருக்கும். தமிழ் நாட்டில் உள்ள குல தெய்வங்களில் பெரும்பாலான குல தெய்வங்கள் பெண் தெய்வங்களாக உள்ளதும் குறிப்பிடத்தக்கது.

குழந்தை பிறந்தவுடன் அதற்கு பெயர் வைப்பது முதல் மொட்டைஅடித்து முடி காணிக்கை செலுத்தி காது குத்துவது வரை அனைத்தும் குலதெய்வத்தின் கோயிலில்தான். குடும்பத்தில் எந்த சுபநிகழ்ச்சி நடந்தாலும், குலதெய்வத்தை முதலில் வணங்கிய பிறகே அதற்கான பணிகளைத் தொடங்குவது வழக்கம். சுப நிகழ்ச்சிகளை துவங்குபவர்கள் உடனே குல தெய்வம் கோயிலுக்கு செல்ல முடியாவிட்டால் குல தெய்வத்தை நினைத்து காணிக்கையை ஒரு மஞ்சள் துணியில் முடிந்து வைத்து, குலதெய்வம் கோயிலுக்கு செல்லும் போது செலுத்தி விடுவது வழக்கம்.

சில குடும்பங்களில் ஆடு, கோழி, பன்றி போன்ற உயிர் பலி கொடுப்பதும் வழமையாக உள்ளது. குல தெய்வ வழிபாடுகளில் ஆகாச பூஜை என்பது தனிச் சிறப் புடையது. ஆட்டின் ரத்தத்தை சோற்றுடன் கலந்து ஊர் எல்லைக்கு கொண்டு சென்று ஆகாசத்தை நோக்கி எறிவார்கள். அந்த பிரசாதத்தை சிறு தெய்வங்கள் பெற்றுக் கொள்வதாக நம்பப்படுகிறதுகுல தெய்வ வழிபாடு என்பது தமிழர்களின் வாழ்க்கை பண்பாடு மற்றும் பாரம்பரியத்தைப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment