Thursday, August 20, 2026

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

 


63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார்





குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்

    கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப்

பொன்றாழு முடிவேண்டப் புலியூர் வாழும்

    பூசுரர்கள் கொடாதகலப் புனித னீந்த

மன்றாடுந் திருவடியே முடியாச் சூடி

    மாநிலங்காத் திறைவனுறை மாடக் கோயில்

சென்றாசை யுடன்வணங்கிப் பணிகள் செய்து

    திருவருளா லமருலகஞ் சேர்ந்து ளாரே.

 

கூற்றுவ நாயனார் களந்தை என்னும் ஊரில் வாழ்ந்த சிவனடியார். ஒரு சிற்றரசராக இருந்த இவர் தன் தோள் வலிமையாலும், வாள் வலிமையாலும் பகைவர்களை வென்ற மாவீரராகவும் இருந்தார். பல்லவ மன்னரான இவர் பல்வேறு மன்னர்களை தன் ஆதிக்கத்தின் கீழ் கொண்டுவந்தார். தும்பைப் பூ மாலை சூடியவர், சோழ மன்னர்களையும் வென்று சோழ நாட்டையும் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டுவந்தார். யானைப் படைகள், விரைந்து செல்லும் குதிரைகள், வலிமையான தேர்கள் மற்றும் சிறப்புப் படை வீரர்கள் என மிகவும் சக்திவாய்ந்த படைகளுக்குத் தலைவராக விளங்கினார். என்றாலும் இவர் முடி சூடிக்கொண்ட அரசராக இல்லை. அந்நாட்களில் மன்னர்களுக்கு மணிமகுடம் சூட்டுவது ஒரு பெரிய விழா. பண்டைய நாட்களில் சோழர்களின் மணிமுடி தில்லையின் கருவூலத்தில் இருந்தது. உரிய காலத்தில் இதனை சோழ மன்னர்களுக்குச் சூட்ட வேண்டும் என்று தில்லை வாழ் அந்தணரை வேண்டினார்.

 

·         ஆனால் அவர்கள் சோழர் குலத்தில் தோன்றாத மன்னர் எவருக்கும் முடி சூட்டமாட்டோம் என்று கூறிவிட்டனர். தீட்சிதர்கள் தங்கள் மரபில் வந்த ஒருவரிடம் மணிமகுடத்தை ஒப்படைத்துவிட்டு சேர நாடு சென்றுவிட்டனர். ஆனால் கூற்றுவ நாயனார் அவர்களிடம் வாதிட்டு முடி சூட்டிக்கொள்ள விரும்பவில்லை.

·         கூத்தப் பெருமானிடத்தில் கூற்றுவனார், தில்லைவாழ் அந்தணர்கள் தனக்கு முடிசூட்ட ஒப்புதல் அளிக்காவிட்டாலும் பரவாயில்லை ஐயனின் திருவடியையே மணிமுடியாகச் சூட்டி அருள வேண்டும் என வேண்டினார். தன் அடிகளை முடியாகத் தரவேண்டும் என்று சிவனை வேண்டியதால், சிவபெருமானும் அவர் கனவில் தோன்றி அவரது சென்னியின் மீது தம் திருவடிகளைச் சூட்டி அருள் புரிந்தார். கண் விழித்த நாயனார் எல்லையற்ற மகிழ்ச்சியடைந்தார். பேரானந்தம் கொண்ட அந்நாயனார் இறைவனுடைய திருவடியே மணிமுடியாகக் கொண்டு நாடாண்டார். அரசு செல்வத்தைப் பெருமான் அருளால் கிடைத்ததாக எண்ணி மகிழ்ந்து போற்றி இறைப்பணிக்கும், அடியவர் பணிக்கும் அரசு செல்வத்தைப் பயன்படுத்தி இறைவன் திருவடி நிழல் சார்ந்தார்.

·          

·           கூற்றுவ நாயனார் புராணம் சொல்லும் கருத்து:

 

பகைவர்களுக்கு எமன் போன்று விளங்கியதால் கூற்றுவர் என்ற பெயர் பெற்றார் இந்நாயனார். கூற்றுவர் என்பதற்குக் கூறுபடுத்துபவர் என்று பொருள். உடம்பையும், உயிரையும் கூறுபடுத்துவதால் எமனுக்குக் கூற்றுவன் என்று பெயர். வெற்றிகளால் இவர் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார். அருளிலும் பொருளிலும் சிறந்து விளங்கிய இந்நாயனார் பகைவர் அஞ்சும் நாற்படை கொண்டு பெருமிதத்துடன் பகைவர்க்குக் கூற்றுவன் போல விளங்கினார்.

 

தம் பூர்வ புண்ணியப் பேறாகக் கூற்றுவ நாயனார் சிவபெருமான் எனும் மெய்யுணர்வும், சிவநாமமும் எம்பெருமான் வழிபாடும் தவறாது புரிந்து சிறந்த சிவனடியாராக விளங்கியுள்ளார். சேக்கிழார் பெருமான் வாக்கில்,

"துன்னார் முனைகள் தோள்வலியால் வென்று

சூலப்படையார்தம் நன்னா மந்தந் திருநாவில்

நாளும் நாளும் நவிலும் நலம்மிக்கார்

பன்னாளீச ரடியார்தம் பாதம்பரவிப் பணிந்தேத்தி

முன்னா கியநல் திருத்தொண்டின்

முயன்றார் களந்தை முதல்வனார்"

என்று போற்றுகின்றார்.

 

தமக்கு முடிசூட்ட மறுத்த தில்லைவாழ் அந்தணரை வலிந்து உடன்படுத்தவோ அல்லது மாற்று வழி கண்டு முடிசூட்டு விழாவைக் கொள்ளவோ போதிய ஆற்றல் உள்ளவராக இருந்தும் கூற்றுவ நாயனார் அவற்றை நாடாது சிவபெருமான் திருவருளையே வேண்டியவர், அத்திருவடியே தமக்கு மணிமுடியாகப் பெற்று நாடாண்டார். நாடாளும் பணியுடன், இறைப்பணியும், அடியவர் பணியும், சிறக்க வாழ்ந்து இறைவன் திருவடி நிழல் சேர்ந்தார்.

 

திருச்சிற்றம்பலம்.

 

 

·          

 

 

No comments:

Post a Comment

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 43

  63 நாயன்மார்கள் வரலாறு – 37 கூற்றுவ நாயனார் குன்றாத புகழாளர் களந்தை வேந்தர்     கூற்றுவனார் மாற்றலர்மண் கொண்டு சூடப் பொன்றாழு முட...