Sunday, September 26, 2010

புலரும்..............பொழுது..........


வசந்த கால வண்ண மலர்களின்
வசீகரம் நெஞ்சையள்ள
காதல் பறவைகளின் பூபாளம்
இதமாக மனதை வருட..........

மணி 5.15. அலார பென்குயினின் தலையில் செல்லமாகத் தட்டிவிட்டு, எழுந்திருக்கலாமா, வேண்டாமா என்று யோசித்த நொடி...........

அடுத்த 45 நிமிட, வழமையான மூன்று கிலோமீட்டர் நடைப்பயணம்..............இன்று ஒரு நாள் போகாமல் விட்டால்தான் என்ன ஆகிவிடப் போகிறது?

அன்பு கணவர் அருகண்மையில், ஆனந்தமான நித்திரையில் ஆழ்ந்திருக்கிறார். இரவு வெகுநேரம் , ஒரு சிறிய பந்திற்காக, 22 வல்லுநர்கள் ஆடி, ஓடி விளையாடும் அரிய காட்சியைக் காண தன் இரவு நேர நித்திரையைக்கூடத் தியாகம் செய்த உத்தமர்..........இப்பொழுதுதான், சாக்லேட் உண்ணும் மழலையைப் போல புன்னகை தவழும் இதழ்களுடன், [ ஏதாவது கனவு கண்டு கொண்டிருப்பாரோ?] உறங்கிக் கொண்டிருக்கிறார்.......

ஒரு வேளை நான் எழுந்தால் அந்த அசைவுகளின் உரசல் அவருடைய இன்ப நித்திரைக்கு பங்கம் விளைவித்து விடக் கூடுமே.................அதனால் இன்று நடைப்பயணத்தை தியாகம் செய்து விடலாமா, என்று சுகமான நித்திரையைக் குறிவைத்த சுயநல மனது, ஏதேதோ, நொண்டிச் சாக்கைத் தேடுகிறது..........

ஆனால் வானம் தெளிவாக இருப்பது, கண்ணாடி சன்னலின் திரைச்சீலையின் இடுக்கில் தெளிவாகிறது........எப்படியும் இன்னும் 45 நிமிடங்களில், பகலவனின் தங்கக் கிரணங்கள் தக தகவென ஒளி வீச ஆரம்பித்து விடும்.......என்னவரும் எழுந்தவுடன் ஏன் நடைப் பயணம் செல்லவில்லை என்றுதான் கேட்பார்.

ஒருவாறு மனதை தேற்றிக் கொண்டு எழுந்து, அவசர அவசரமாக, ஓய்வரைக்குச் சென்று, காலைக் கடன்களை முடித்து, உடை மாற்றி, படியிறங்கி கீழே வந்தேன்......

கண்ணாடிக் குடில், மீன் தொட்டியில், தங்க மீன்கள் நிற்க நேரமின்றி, சுற்றித் திரிந்து கொண்டிருந்தபோது, வெள்ளை ஷார்க் மீன்கள் சுழன்று, சுழன்று சாலம் புரிவதையும், அழுக்குத் தின்னி மீனோ, கொழு கொழுவென, அசையாது உண்ட மயக்கத்தில் சயனித்திருக்கிறது..........இது எப்பொழுதும் இப்படித்தான், ஏதோ ஒரு சில நேரம் தான் தானும் இருக்கிறேன் என்று லேசாக உடலசைத்துக் காட்டும்........

அந்த ஐந்து நிமிடக் காட்சி, மேலும் சுறு சுறுப்பையும், உற்சாகத்தையும் ஊற்றெடுக்கச் செய்ய..........

வாசலைத் தாண்டி பூச்செடிகளின் குளுமையான இலைகளைத் தீண்டிக் கொண்டே, தெருவில் இறங்கி நடந்தேன் நேற்றைய பௌர்ணமி நிலவின் சொச்சம் இன்னும் இருக்கிறதா என்று பார்க்கும் ஆவல் துளிர் விட............அழகான முழு நிலவு இன்னும் தக தகத்துக் கொண்டிருப்பது, மெலிதான அந்த இருட்டு வேளையிலும் தெரிந்தது.

பிரின்ஸ்டன் குடியிருப்புப் பகுதியின், சாலையின் இரு மருங்கிலும் வித விதமான உல்லாச உந்துகளின் அணிவகுப்பு. சற்று தூரத்தில் ஒரு சிறிய சரிவில் இறங்கி, திரும்பவும் ஒரு குடியிருப்பு. உல்லாச உந்துகள் சயனித்திருக்கும் காட்சிகள்...........அங்கிருந்து, பிரதான சாலைக்குச் செல்லும் பாதையை நோக்கி நகர்ந்தேன்.........

திரும்பவும் ஆவல் உந்த மேற்கு திசையை நோக்கித் தலை தானாகத் திரும்பியது. இன்னும் அந்த நிலா மகள் அங்கு புன்னகைத்துக் காத்துக் கிடந்தாள். அதற்குக் கீழே பஞ்சுப் பொதி போன்ற மெல்லிய மேகம்..........

பிரதான சாலையின் திருப்பத்திற்கு வந்துவிட்டேன். அங்கு ஒரு சிறிய செயற்கைக் குளம்......வெள்ள நீரையும், மழை நீரையும் அணை போடும் விதமாக உருவாக்கப்பட்ட அழகிய குளம்.......[ திருமண பந்தம் போல.....] அருகில் ஒரு சிறிய ஊசி இலைக் காடு.... பனிக் காலத்தில் இந்த குளம் முற்றிலுமாக உறைந்துக் கிடக்கும் காட்சி கண் முன்னே விரிந்தது.

ம்மா........ம்மா..........மாடு பால் கறக்க வேண்டிய வேளையை நினைவு படுத்த கத்த ஆரம்பித்திருந்தது. உட்புறமாகத்தான் மாடு மேய்ச்சலுக்கான பசும் புல் வெளிகள் இருந்தது......

ஊசியிலைக் காட்டின் முகப்பில் ஏதோ சல சலப்பு.........என்னையறியாமல் இதயம் ஒரு நொடி பலமாகத் துடித்து, கால்கள் சற்றே பின் வாங்கியது. சலசலப்பு வந்த திசை நோக்கித் தலை தானாகத் திரும்பியது......... அங்கே,

ஆறு மான்கள், விசாரமாக நின்று கொண்டு, குறு குறுவென எனை உற்று நோக்கிக் கொண்டிருந்தது........ரடார் கருவி போன்ற அதனுடைய காதுகள் குவிந்து என் புறம் திரும்பியிருந்தன. முதுகில் சிலீரென ஒரு மின்னல்........

எங்கோ தூரத்தில்.......கொக்கரக்கோ........சேவல் கரைவது மெலிதாகக் கேட்டது. காலங்காலமாக மாறாத சங்கதிகள்..........பால் கறக்கும் மாடுகள், ஒலி எழுப்பும் பறவைகள், அன்றாடம் தோன்றி மறையும் சூரியன், பௌர்ணமி நிலவு, மலரும் மொட்டுக்கள்.......இப்படி எத்தனையோ......... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவையெல்லாம் ஓய்வில்லாமல் நடந்து கொண்டுதானிருக்கிறது. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளானாலும் நடந்து கொண்டுதானிருக்கும்........

அந்த இடத்தைக் கடக்க முயன்றவள் மனம் மறுக்க, அன்றாடம் வழமையாகச் செல்லுகிற பாதையில் செல்லும் எண்ணத்தைக் கைவிட்டு, அப்படியேத் திரும்ப வந்து கண்ணிறைந்த அதே காட்சியைக் காணும் பேராவல் ஏற்பட்டது. இயற்கை அரசியின் உன்னதத்தை விட்டு அகல மனம் மறுக்க, நிலவோவியமும் என்னோடு சேர்ந்து அக் காட்சியைக் கண்டு கொண்டிருக்கிறது.

15 நிமிடங்கள் கடந்திருக்கும். திரும்பவும் போய் அதே குளக்கரையின் முகப்பில் நின்று மேற்கே நோக்கினேன்..........அழகு நிலவை திடீரெனக் காணவில்லை........ மேகமூட்டம் சிறிது, சிறிதாக , மென்மையான சல்லடைக்கண் துணி போல விலகிக் கொண்டே இருந்தது............மான்களையும் காணவில்லை...........பொழுது புலர ஆரம்பித்திருந்ததால், குளுமையான, பாதுகாப்பான இடம் தேடிச் சென்றிருந்தது போலும்..... மாடு கத்தும் ஓசையும் இல்லை. பால் கறந்து விட்டிருக்க வேண்டும். சேவலும் தன் கடமை முடித்த திருப்தியோடு அமைதியாகிவிட்டிருந்தது......

இரண்டு விடயங்களில் எனக்கு ஞானோதயம் ஏற்பட்டது. அந்த இனிய நாள் என் வாழ்நாளின் ஒரு மகுடமாக ஆனது......ஒரு வேளை, சயன அறையை விட்டு வெளியே வர சோம்பல் பட்டு விட்டிருந்தால், எத்துணை அரிய வாய்ப்பை நழுவ விட்டிருப்பேன்.......இயற்கை அன்னைத் தன் பரிவாரங்களுடன் ஒன்று கூடி, காட்சி கொடுத்த, அழகு நர்த்தனம், இன்னொரு நாள் இப்படிக் காணக் கிடைத்திருக்குமோ என் வாழ்நாளில்..........

மற்றொன்று, அனைத்துக் காட்சிகளும், மாறிவிட்டிருந்தாலும், பெரியோர்கள் சொல்கின்ற 'உலகில் மாற்றங்கள் மட்டுமே நிலையானது' என்ற பேருண்மை............. சில விடயங்களில் பொருந்தாதும் போகிறதே? அதாவது.........'நிலையான நிலையாமை'..........

மேலும், மனித உயிர்களுக்கு மட்டுமே, உரித்தான, இரசிக்கும் தன்மை, [தியானம் என்று கூட இதைச் சொல்லலாமோ] மற்றும் பாராட்டும் வள்ளல் தன்மை......... மிக எளிமையான முறையில் கிடைக்கக் கூடிய மகிழ்ச்சி..........

அதாவது, மிக ஆழமாக, மிக அடிப்படையாக, மிகத் தனிப்பட்ட முறையில் மனிதனுக்கு மட்டுமே, உரித்தான அந்த குணம்............ தானும் மகிழ்ந்து, அடுத்தவரையும், மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தச் செய்யும் அந்த வள்ளல் தன்மை............ கடவுட் தன்மை.............

இந்த எண்ணம் எனக்குள் நிரந்தரமாக இருந்தாலும், அந்த விடியற்காலை நேர விழிப்புணர்வு என்னுள், ஏற்படுத்திய தாக்கம் மட்டும், நிலைத்து விட்ட ஒன்று......... அந்த மான் கூட்டமும், பறவை, மிருகங்களின் கீதமும், பௌர்ணமி நிலவும்............. நல்ல பொழுதை ஆரம்பித்து வைத்தது......

வழமையாக மனம் பாடுகிற, 'குறை ஒன்றும் இல்லை மறை மூர்த்திக் கண்ணா' என்ற பாடலை, இதழ்களும் அசைந்து உயிரூட்டியது............

22 comments:

  1. ம்ம்மைத் தாண்டி திருவாய் மலர்ந்தருளியதற்கு கோடி வணக்கங்கள் ஆரூர் அவர்களே.........ஹ..ஹா...

    ReplyDelete
  2. காட்சிகள் கண்முன்..

    ஐ எங்க வீட்லயும் கோல்ட் பிஷ் & வொயிட்/சில்வர் ஷார்க் இருக்கே:)

    ReplyDelete
  3. நன்றி வித்யா. அட நீங்களும் அதே சில்வர் வொயிட் ஷார்க் இருக்கா.....மேட்சுக்கு மேட்ச்......அவ்வ்வ்வ்

    ReplyDelete
  4. || இன்ப நித்திரைக்கு பங்கம் விளைவித்து விட||

    வாக்கிங் போகம இருக்க இப்படியொரு காரணம் சொல்லலாமோ?



    ||ம்ம்மைத் தாண்டி திருவாய் மலர்ந்தருளியதற்கு கோடி வணக்கங்கள் ஆரூர் அவர்க||

    அப்படிப்போட்டு சாத்துங்க

    ReplyDelete
  5. நன்றிங்க கதிர். ஒவ்வொரு நாளும் இப்படித்தாங்க பொழுது போய்க்கிட்டிருக்குது..........என்னத்த சொல்ல.......ஆஹா, ஆரூர் அய்யாவை சாத்த இன்னோரு கையா, வாங்க, வாங்க.....

    ReplyDelete
  6. அட...இதென்ன வேடிக்கப்பாக்க வந்தவனையும் கையோட நடைபயணம் கூட்டிட்டுப்போறீங்களே... அழகான இடங்கள், படிப்படியாய் காட்சிப்படுத்தியவிதம் என அனைத்திலும் அழகான இடுகைங்க..

    அதானே சும்மா சோம்பல் பட்டுண்டு வீட்டிலேயே படுத்திருந்தா இந்த குளிர்ச்சியை அனுபவிக்க முடியுங்களா...

    நல்ல பகிர்வுங்க...

    ReplyDelete
  7. //எங்கோ தூரத்தில்.......கொக்கரக்கோ........சேவல் கரைவது மெலிதாகக் கேட்டது. காலங்காலமாக மாறாத சங்கதிகள்..........பால் கறக்கும் மாடுகள், ஒலி எழுப்பும் பறவைகள், அன்றாடம் தோன்றி மறையும் சூரியன், பௌர்ணமி நிலவு, மலரும் மொட்டுக்கள்.......இப்படி எத்தனையோ......... ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக இவையெல்லாம் ஓய்வில்லாமல் நடந்து கொண்டுதானிருக்கிறது. இன்னும் பல்லாயிரம் ஆண்டுகளானாலும் நடந்து கொண்டுதானிருக்கும்........//

    ரசிக்கத் தவறினால் அது யார் குற்றம்? நல்ல பதிவு.

    ReplyDelete
  8. ஒரு பொழுதின் விடியலும் காதலும் அன்புமாய் ஒரு பதிவு.அற்புதம் நித்திலம்,

    ReplyDelete
  9. நல்ல ரசனையான பகிர்வு. அருமையான வர்ணனைகள். அழகு.

    ReplyDelete
  10. நல்லா சொன்னீங்க பாலாசி........நன்றிங்க.

    ReplyDelete
  11. ஆமாங்க ராமலஷ்மி, இயற்கையின் ஒவ்வொரு பரிமானமும் அழகுங்க..........சில நேரங்களில் கொட்டும் அருவியைக் காணும் போது அத்ற்குள் அப்படியே கரைந்து போய்விடக் கூடாதோ என்று தோன்றும் போது ஒரு சிலிர்ப்பு ஏற்படும் பாருங்க.......சொல்லி முடியாதுங்க.....நன்றிங்க.

    ReplyDelete
  12. நன்றிங்க ஹேமா, இயற்கையின் மீது கொள்ளும் காதல் நம் உள்ளத்தின் எத்தனையோ காயங்களுக்கு மருந்தாகிப் போவது தானேங்க நிதர்சனம்..........

    ReplyDelete
  13. நன்றிங்க அம்பிகா........அழகு ......எண்ணம் போல........

    ReplyDelete
  14. //நித்திலம்-சிப்பிக்குள் முத்து said...
    ம்ம்மைத் தாண்டி திருவாய் மலர்ந்தருளியதற்கு கோடி வணக்கங்கள் ஆரூர் அவர்களே.........ஹ..ஹா...
    //

    அதானே. உங்களுக்கும் பெப்பேதானா:)). ரொம்ப நல்லா வந்திருக்குங்க இடுகை.

    ReplyDelete
  15. நல்லாருக்கு நித்திம்மா... ரசனை...

    ReplyDelete
  16. நன்றிங்க அண்ணாமலையான் அய்யா. தங்கள் வரவு நல்வரவாவுக........

    ReplyDelete
  17. நன்றிங்க வானம்பாடி சார். ஆரூர் அண்ணாச்சிக்கு அதிலெல்லாம் எந்த வஞ்சனையும் இல்லை.......எல்லாத்துக்கும் அதே பதில்தான்........

    ReplyDelete
  18. நன்றிம்மா ப்ரியா. ஆமாம் ப்ரியா ரசிக்க ஆரம்பித்தால் மனது எவ்வளவு லேசாக ஆகி விடுகிறது ப்ரியா.....

    ReplyDelete
  19. நல்லா எழுத்து, நல்ல பதிவு.

    ReplyDelete
  20. நன்றிங்க விஜி. உங்க கிச்சனுக்கு வருகிறேன். அடுத்து என்னோட கிச்சனும் பாருங்க விஜி.........அடுத்த இடுகை, சமையல் தான்.

    ReplyDelete