Wednesday, October 27, 2010

ஸ்ரீலங்கா அதிபருக்கு நல்லிணக்க அறிவுரை - வழக்குரைஞர் ஜார்ஜ் வில்லி

மேதகு அய்யா அவர்களே, மதிப்பிற்குரிய காங்கிரஸ் பெண்மணி, திருமதி ராஜபக்ச, ஷீலா ஜேக்சன் லீ அவர்களே! இந்த அமைப்பை ஏற்படுத்திக் கொடுத்தமைக்கு ஷீலா அவர்களுக்கு மனமார்ந்த பாராட்டுக்கள். தூதரக தலைமை அதிகாரி அரோரா அவர்களுக்கும் நன்றி உரித்தாகுக.

மேன்மை தங்கிய விருந்தாளிகளே, லேடிஸ் & ஜென்டில் மென், மேன்மை பொருந்திய தங்களை இந்த பெருமை வாய்ந்த நகருக்கு வரவேற்கிறோம். ஓக் மரங்களையும் பாசாங்குப் பறவைகளையும் பொருட்படுத்தாவிட்டால், தாங்கள் இந்நகரத்தை சிறிலங்கா என்றே தவறாக எண்ணலாம்.

நான் பிறந்தது சிறிலங்காவில் தான். என் தாய், மனைவி சாந்தியின் பெற்றோர், மற்றும் என் தாத்தா, பாட்டி என அனைவரும் என் தாய்த்திருநாட்டின் புனிதமான பூமிக்கடியில்தான் சாமாதியாகியுள்ளனர். மேதகு அய்யா அவர்களே, நான் என்னுடைய 10 வது வயது வரை ஜாஃனாவில் வளர்ந்து, பிறகு கொழும்புவிற்கு இடம் பெயர்ந்தோம். என் மனைவி பதுளாவைச் சேர்ந்தவர். பெரு மதிப்பு வாய்ந்த ராணுவத் தளபதியாக இருந்த இவர் தந்தையுடன், தியாதலவாவில் வளர்ந்தவர். நான் ஜாஃனாவின் மகோசா மரங்களின் நறுமணம் நுகர்ந்தவன். கொழும்புவில் என் பால்யப் பருவத்தில் பள்ளிக்குச் செல்லும் போது, செந்நிற நாவற்கனிகளை அதன் செங்கறைகள் என் வெண்மையான மேல் சட்டையில் படும்படி அதனைச் சுவைத்தவன். மனம் கவரும் மணத்தினால், பலா மரங்களில், பழுத்த பழங்களை காக்கைகள் கொத்தித் திறக்க முனைவதையும் கண்டிருக்கிறேன்.

வெசாக், திருவிழாக்கால வண்ணமயமான பந்தல்களைக் கண்டிருக்கிறேன். ஏழை மக்களுக்கான தர்ம சாலைகளின் உணவையும் வெட்கமின்றி உண்டிருக்கிறேன். கோவில்களின் மணியோசையையும் கேட்டிருக்கிறேன். மல்லிகை மற்றும் ஜாஸ் குச்சிகளின் நறுமணத்தையும் நுகர்ந்திருக்கிறேன். பிரார்த்தனைக் கூட்டத்தில் பங்குத் தந்தை ஹேர்த்துக்கு பணிவிடைகள் புரியும் போது, ஆல் செயிண்ட்ஸ் சர்ச் மணியோசையையும் கேட்டிருக்கிறேன்.

ஆனால் 1975 இல் நான் சிறிலங்காவை விட்டு வெளியேறியதிலிருந்து, சொல்லொனாத் துயரமும், கவலையும், வேதனைகளும் தொடர்ந்து கொண்டுதானிருக்கிறது. தன்னுடைய புனித நீரை மட்டுமே நெல் வயலுக்குக் கொண்டு வருவதையே வழமையாகக் கொண்ட சக்தி, மஹாவேலி கங்கை, இரத்த வெள்ளத்தைப் பாய்ச்சிவிட்டாள். சிங்களவர்கள் மற்றும் தமிழர்கள் இருவரும் இங்கு அமெரிக்காவில் இருந்து கொண்டு, என் முன்னோர்கள் வாழ்ந்த சொர்க்க பூமி, நரகத்தின் அதள பாதாளத்திற்குச் செல்வதைக் காணும் அவலத்திற்கு ஆளாகியுள்ளோம். எவைக் குற்றம் சொல்வது என்று ஒருவரும் அறிந்திலர். அதற்கான காலமும் கடந்து விட்டது.

மேதகு அய்யா, தங்களின் சக்தி துட்டகாமுனு மற்றும் எள்ளாளரின் எம் மக்களின் வழியாகவும் பெற்றிருக்கலாம். துட்டகாமுனு, தன்னுடைய காண்டுலா யானையின் மீதிருந்து, எள்ளாளரிடம் சண்டையிட்டு, எள்ளாளரைக் கொறதை நினைவில் கொள்ளுங்கள். சிறிலங்காவை முதன் முறையாக இணைத்ததற்காக இன்றும் துட்டகாமுனு நினைவில் கொள்ளப்படுகிறார். எள்ளாளரை தோற்கடித்து கொன்ற பிறகு அவர் எள்ளாளருக்கு, அவர் மீது கொண்ட மரியாதை காரணமாக, தன் மதிப்பிற்குரிய எதிரிக்காக ஒரு நினைவுச் சின்னம் எழுப்பினார். அது மட்டுமல்லாமல், தன் குடிமக்களை, அந்த இடத்தில் நின்று எள்ளாளருக்கு மரியாதை செலுத்தி வணங்கிச் செல்ல கட்டளையிட்டார்.

இவ்வாறு செய்ததன் மூலமாக தன் உயர்ந்த குணத்தை மட்டும் வெளிப்படுத்தவில்லை. அத்தோடு தான் ஒரு திறமையான அரசியல்வாதி என்பதையும் நிரூபித்துள்ளார். எள்ளாளரின் தோல்விக்குப் பின்னரும் அவர் தமிழ் மக்களையும் ஆட்சி செய்ய வேண்டியதையும் உணர்ந்திருந்தார்.

மேதகு அய்யா அவர்களே, நம்பிக்கை, நற்பேறு மற்றும் நுண்ணிய அரசியல் திறன் அனைத்தும், தங்களைச் சரித்திரத்தின் ஒரு தனிப்பட்ட இடத்தில் நிலை பெறச் செய்துள்ளது.

இனி வரும் இளம் சந்ததியினர், தங்களுடைய சரித்திரப் புத்தகங்களில், பலரும் தோற்கடிக்க முயன்று தோல்வியடைந்த புரட்சியாளர்களை, ஏறக்குறைய 25 ஆண்டுகளுக்குப் பிறகு வெற்றி கொண்டவர், ஒரு உயர்ந்த தலைவர், சிறந்த வீரர், மகிந்த ராஜபக்ச என்று பயிலுவார்கள். அவர்கள், தங்களை 21 ஆம் நூற்றாண்டின் துட்டகாமுனு என்று கூட சொல்லலாம். ஆனால் தாங்கள் ஜெமுனுவின் அங்கியை அணிய விரும்பினால், மேதகு அய்யா அவர்களே, ஒரு நினைவுச் சின்னத்தையும் தாங்கள் கட்டமைக்க வேண்டிவரும். அந்த நினைவுச் சின்னம் வெறும் கட்டிடமாக இல்லாமல், அது, ஒரு கட்டுப்பாடான, சட்டதிட்டங்களுக்குட்பட்ட, புதிய செயல் முறைத் திட்டங்களைக் கொண்டதாக இருக்க வேண்டும்.

58 கலகங்கள் ஆரம்பிக்கக்கூடியத் தவறைச் செய்யாதீர்கள். பல்கலைகழகத்தினுள் நுழைய விரும்பும் தமிழர்களைத் தடுத்து நிறுத்தாதீர்கள். தமிழர்கள் தங்களை இரண்டாந்தர குடிமக்களைப் போல் உணரும் நிலையை ஏற்படுத்தாதீர்கள். அவர்களின் மதத்திற்கும் மற்றும் மொழிக்கும் மரியாதை செலுத்துங்கள். மேதகு அய்யா அவர்கள் தமிழர்களைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டியது உள்ளது. தங்கள் மொழியையேக் கடவுளாகக் கொண்டவர்கள். உலகத்திலேயே, இந்த அளவு மொழி பக்தி கொண்ட மிகச் சில கலாச்சாரங்களே உள்ளது.

தாங்கள் ஒரு வழக்கறிஞராக பணியாற்றியுள்ளீர்கள். மனித உரிமைகளுக்காகப் போராடும் மாமனிதராகவும் இருந்திருக்கிறீர்கள். இப்பொழுது பிரபலமான நிலையிலும் இருக்கிறீர்கள். வெற்றி வாகை சூடி ரோமாபுரிக்குத் திரும்பியிருக்கும் ஜூலியஸ் சீசருக்கு நிகரான சக்தி படைத்தவர் தாங்கள். தாங்கள் கேட்பதை எவரும் மறுக்க இயலாது. நாம் இருவரும் சட்டப் பள்ளியில் பயின்ற சில உன்னதமான சட்டப் பிரிவுகளை சட்டமன்றத்தை ஏற்றுக்கொள்ளச் செய்யுங்கள். பிறகு நாம் ஆத்மசாந்தி அரசியலமைப்பைக் கற்றிருக்க வேண்டும். என் உதவி தங்களுக்குத் தேவைப்படுமானால், இந்த உலகத்தின் பார்வையாளர்கள் போல் நானும் அளிக்கத் தயாராக உள்ளேன். தமிழர்கள் தங்களுக்கும் ஒரு இடம் இருக்கிறது என்று தாங்கள் அளிக்கப் போகும் உறுதியை எதிர்நோக்கி நிர்வாணமாகவும், பசியுடனும் கிடக்கிறார்கள்.

அப்படி ஒன்று அவர்களுக்கு இருப்பதை உறுதிபடுத்துங்கள். தாங்கள் ஒரு பிரபாகரனை கொன்று விட்டீர்கள். ஆனால் இன்னொரு பிரபாகரனை வளர விடாதீர்கள். ஆயுதங்களுடனும், துப்பாக்கியுடனும் இன்னொருவர் வளருவதைத் தங்களால் தடுக்க இயலாது. தாங்கள் அதை தங்களுடைய பரந்த மனப்பான்மையால் மட்டுமே செய்ய முடியும். புத்த பகவானிடமிருந்து கற்ற இரக்கம், உண்மை, நீதி ஆகியவைகள் மட்டுமே தங்களுக்குத் தேவையான ஆயுதங்கள். 'தம்மா படா'வின் படி புத்தர் எந்த நேரத்திலும் வெறுப்பை, வெறுப்பால் கைப்பற்ற முடியாது. வெறுப்பை அன்பினால் மட்டுமே கைப்பற்ற இயலும். இது ஒரு பழமையான நியதி. இதுதான் புத்தபிரான் அருளியது.

மேதகு அய்யா அவர்களே, தாங்கள் இந்த நல்ல நகரத்தை விட்டு சிறிலங்கா செல்லும் போது, ஒரு 10 வயது பாலகன் நாளை பள்ளிக்கு தன் வெள்ளைச் சட்டையுடன் செல்லும் போது, அதில் நாவற்பழக் கறை தவிர வேறு எவ்விதமான சிகப்புக் கறையும் ஆகாது என்றொரு வாக்களிக்க வேண்டும். காலை நேரக் காகம் பலாப்பழத்தைத் தவிர வேறு எதையும் கொத்திக் கொண்டிருக்கக் கூடாது. நான் நறுமணம் நுகர்ந்த மகோசா மரங்களில் வேறெதுவும் தொங்கக் கூடாது.

மேதகு அய்யா, எங்களை சுவர்கத்திற்கு திருப்பியனுப்புங்கள். எங்களை சுவர்கத்திற்கு திருப்பியனுப்புங்கள். நன்றி

13 comments:

  1. நல்ல பணி. வாழ்த்துக்கள்

    அன்புடன்
    ஆரூரன் விசுவநாதன்

    ReplyDelete
  2. நல்ல பகிர்வு. நன்றிங்க.

    ReplyDelete
  3. பகிர்விற்கு நன்றி.

    ReplyDelete
  4. அந்தக் காணொளியையும் இணைத்திடுங்கள்

    ReplyDelete
  5. நன்றிங்க கதிர். இணைத்து விட்டேன்.

    ReplyDelete
  6. நல்லாருக்குங்க.

    ReplyDelete
  7. நன்றிங்க நசரேயன்

    ReplyDelete
  8. நன்றிங்க வானம்பாடிகள் சார்.

    ReplyDelete
  9. நல்ல வேளை நீங்களாவது உருப்படியா தமிழிலில் கொண்டு வந்துள்ளீர்கள். நன்றிங்க.

    ReplyDelete
  10. நன்றி ஜோதிஜி அய்யா.

    ReplyDelete