Tuesday, April 12, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி -2 -( 3)


காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி 2 -( 3.)


மனித உடல் என்பதே ஒரு வேள்விச் சாலை. தூய்மையான அந்த உடலுக்கு, அண்டம் அனைத்தையும் தம்முளவாக்கிய ஆண்டவனும் அடி பணிகிறான். காரணம் அந்த உடலில் கோவில் கொண்டிருந்த உயிரே சாட்சாத் அந்த ஆண்டவன் தானே! இதுவே கயைத் தத்துவம் என்பர்.

Apr 12, 2011

விந்திய மலைச் சாரலுக்கு வடக்கே, மகத நாட்டிலே சம்பகம் என்னும் பெயர் கொண்ட, தேன் சொரியும் மலர்கள் நிறைந்த வனத்திலே, ஆனந்த மலையெனத் திகழும் கோலாகல பர்வதத்திலே இத்திருத்தலம் அமைந்துள்ளது. அரக்கர் குலத்தில் அவதரித்த கயாசுரன் என்ற அசுரனின் பெயரால்தான், இத்தலம் கயை என்று அழைக்கப்படுகிறது.

கயாசுரனின் மெய்யான தவத்தை மெச்சிய காத்தல் கடவுளான விஷ்ணு பகவான், வேண்டிய வரம் அருள்வதாய் உறுதி கொடுத்ததைப் பார்த்த தேவர்கள் அஞ்சி நடுங்கினர். கயாசுரன் அப்படி என்னதான் வரம் கேட்டான்....?


“தேவர்கள், ரிஷிகள்,மந்திரங்கள், துறவிகள் இவர்களைக் காட்டிலும் என் உடல் புனிதமாக வேண்டும், என்னைத் தொடுபவர்களுக்கும் புனிதம் ஏற வேண்டும்” என்பதாகும்.அசுர குலத்தில் பிறந்த ஒருவருக்கு எத்துனை உயர்ந்த குணம்.......!

இவ்வரத்தின் பயனாய், நரகம் என்ற ஒன்றே செயலற்றுப் போய், தூய்மை வரம் சுவர்கத்திலேயே, இட நெருக்கடியை உண்டு பண்ணியதாம்.

’குலத்தளவே ஆகுமாம் குணம்’ என்பர் பெரியோர்.

பிறவியால் சாதியா? செயலால் சாதியா?

இன்றளவும் விவாதத்திற்குரிய பிரச்சனை இது. வேதியர் குலத்தில் உதித்த இராவணன் தன் செய்கைகளினால் அசுர குலத்தவன் ஆனான்.அசுரர் குலத்தவரான பிரகலாதனோ, தேவர் உலகத்தினராகும் தகுதி பெற்றான். சத்திரிய குலத்தில் அவதரித்த விசுவாமித்திரரோ, பிரம்ம ரிஷியானாரே. அப்படித்தான் கயாசுரனும் தம் வரத்தால் மட்டுமன்றி, விஷ்ணு பகவான் தானமாக கேட்ட தன் உடலையே, நல்ல காரியம் என்பதனால் துளியும் யோசிக்காமல் மிக மகிழ்ச்சியுடன், தன் உடலைக் கீழே கிடத்தினான். அவன் படுத்த அந்த இடம்தான் மகத தேசத்தைச் சேர்ந்த சம்ப காரண்யம் என்ற மதுவனம், கோலாகலம் என்ற மலையைத் தலைக்கு உயரமாகக் கொண்டு, அவன் வேள்விக்குத் தன்னை அர்ப்பித்த இடமே கயை என்னும் சுதார சேத்திரமாகியது.இந்த வேள்வியில் பங்கு கொள்ள தேவர் உலகமே கூடியதாம்.


‘உயிர் ஒடுங்குவதற்கு இறை அனுமதி வேண்டும்’ என்பதும் உயிர் ஒடுங்கிய பின்னும் உடல் ஒடுங்கச் சிறிது நேரம் பிடிக்கும் என்பதையும் அவன் செயல்கள் உணர்த்தும். அந்த நேரத்தில் தேவர்கள் அவன் வேண்டும் வரம் கேட்கச் சொன்ன போதும் அவன் முக்தி வேண்டாமல், உலக நன்மைக்காக,வரம் கேட்டான்.


“ சூரியனும் சந்திரனும், நட்சத்திரங்களும் பூவுலகமும் இருக்கும் வரை எல்லாத் தெய்வங்களும், உருவமாகவோ, அருவமாகவோ இங்கேயே என்னில் உறைய வேண்டும். இந்த, தலம் தன் பெயரில் கயை என்று காலம் முழுவதும் விளங்க வேண்டும். இங்கு வந்து பிண்டம் போட்டுச் சிரார்த்தம் செய்பவர்களின் பித்ருக்கள் அனைவருக்கும் பிரம்ம லோகம் சித்திக்க வேண்டும். அவர்களை எந்த பாவமும் தீண்டக் கூடாது.” என்ற வரம் கேட்டான்.

அறவாழி அந்தணன் தாள் சேர்ந்தார் கல்லால்
பிற வாழி நீந்தலரிது.

என்னும் ஐயனின் குறளுக்கு இலக்கணமாய் கயையில் விஷ்ணு பதம் அமைந்துள்ளது.

நம் முன்னோர்களுக்கு நாம் கொண்டுள்ள மதிப்பும் மரியாதையையும், நன்றியுணர்வையும் தெரிவிக்கும் வகையிலேயே, சிரார்த்தம் செய்யப்படுகிறது. நமது முந்தைய மூன்று தலைமுறைகளையும் நினைவு கூர்கிறோம். நம் முன்னோர்கள் நம் வம்சத்தில் யாராவது ஒருவராவது கயைக்கு வந்து நம்மைக் கரையேற்ற மாட்டார்களா என்று காத்திருப்பார்களாம்.கயைக்குச் சென்று பிண்டம் போட்டு,நன்றிக் கடன் செலுத்துவது,நம் கடமையாகும்.என்று பெரியவர்கள் சொல்லிச் சென்றுள்ளனர்.


கயையிலே, தங்கள் முன்னோருக்கு மட்டுமன்றி, உற்றார், உறவினர், நண்பர், பகைவர் என்று எல்லோருக்குமே பிண்டம் போட்டு அவர்களுக்கு நற்கதியை கிடைக்கச் செய்யலாம்.தனக்கும், ‘ஆத்ம பிண்டம்’ போட்டு விஷ்ணு பதத்தில் ஒப்படைக்கலாமாம். இதனால்தான் கயைக்கு இத்துனை மகத்துவம் என்கின்றனர். பிராமணர்களைக் கொண்டு சிரார்த்தம் செய்வதற்கும் ஒரு புராணக்கதை நிலவுகிறது.


பல்குனி நதியில் பொதுவாகத் தண்ணீர் இருப்பதில்லை. ஊற்று நீரில் மூழ்கிப் பிண்டம் போடலாம். அடுத்த படியாக விஷ்ணு பத பிண்டம், பிறகு சிரார்த்தம். அஷய வடத்துக்குச் சென்று பிண்டம் போடுவது வழக்கம். அங்கே சிரார்த்தம் செய்தவருக்குக் கயை வாழ் அந்தணர்கள் மாலை போட்டு பித்ருக்கள் சுவர்க பதம் அடைந்ததாக்ச் சொல்லி வாழ்த்துவார்கள்.


கயை சென்று வருகிறவர்கள் அஷய வடத்தின் அடியில் ஒரு காய், ஒரு கனி, ஒரு கீரை இவற்றை உட்கொள்வதில்லை என்று விரதம் மேற்கொள்ள வேண்டுமாம்.ஆனால் நாங்கள் சற்று வித்தியாசமாக ஒரு முடிவு எடுத்தோம். அதாவது, அவரரிடம் இருக்கும் வேண்டாத பழக்கங்கள் ஏதாவதை விட்டு வருவது என்று. நான் சற்று அதிகமாகக் கோபப்படுவேன். அதை விட்டு விடுவது என்று முடிவு செய்து, முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.அதே போல் என் கணவரும், வியாபாரத்தில் இனி கடன் கொடுப்பதும், வாங்குவதும் முடிந்த வரை தவிர்ப்பது என்ற முடிவும் எடுத்து விட்டு வந்தோம். இன்றும் முடிந்த வரை காப்பாற்றுகிறோம்.


இரவு விஷ்ணு பதம் சென்று அபிசேகம் ஆகும் பொழுது பார்த்தால் விஷ்ணு பதம் பதிந்திருப்பதைக் கண் குளிர தரிசனம் செய்யும் பேரும் பெறலாம். ஆனால் நாங்கள் மதியமே தரிசனம் முடித்து கிளம்பி விட்டோம். பல வண்ண மலர்கள் மற்றும் குங்குமத்தினால் நிறைந்திருந்த விஷ்ணுபாத தரிசனம் பெற்று மன நிறைவுடன் புத்த கயா கிளம்பினோம்.

தொடரும்.


--
Apr 12, 2011
Apr 12, 2011
by coral shree







--



1 comment: