Tuesday, April 16, 2013

அருள்மிகு ஸ்ரீ ஆஞ்சநேயர் - நாமக்கல்


அருள்மிகு ஸ்ரீ நாமக்கல் ஆஞ்சநேயர்




புத்தியும் பலமும் தூய
புகழோடு துணிவும் நெஞ்சில்
பக்தியும் அச்ச மில்லாப் பணிவும்
நோய் இல்லா வாழ்வும்
உத்தம ஞானச் சொல்லின்
ஆற்றலும் இன்மை வாழ்வில்
அத்தனை பொருளும் சேரும்
அனுமனை நினைப்பவர்க்கே!

அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே
ஒன்றைத்தாவி, அஞ்சிலே ஒன்று ஆறாக
ஆரியற்காக ஏகி, அஞ்சிலே ஒன்று பெற்ற
அணங்கைக் கண்டு அயலார் ஊரில்
அஞ்சிலே ஒன்றை வைத்தான்
அவன் நம்மை அளித்துக் காப்பான்!


ஸ்ரீ நாமகிரி என்றழைக்கப்படும் நாமக்கல் பற்றி எண்ணும்போதே  அனைவருக்கும் முதலில் கண்முன்னே தோன்றுவது, பிரம்மாண்டமாக உயர்ந்து நிற்கும் ஸ்ரீ ஆஞ்சநேயரும், ஸ்ரீ நாமகிரியம்மன், ஸ்ரீ நரசிம்மர் ஆகிய தெய்வ வடிவங்களே.

நாமக்கல் நகரின் மத்தியில் நடுநாயகமாக விளங்குவது சிறீசைலகிரி எனப்படும் ஒரே கல்லால் ஆன குன்று.  இந்நகர் பேட்டை, கோட்டை என இரு பிரிவுகளாக உள்ளது. இம்மலையின் மேல்புறம், சுமார் 18 அடி உயரமுள்ள, (பீடத்திலிருந்து 22 அடி) 1500 ஆண்டுகளுக்கு முற்பட்ட மிகப் பழமையான, ஒரே கல்லிலான ஆஞ்சநேயரின் திருவடிவம் அமைந்துள்ளது, தொழுத கைகளுடனும், இடுப்பில் வாளுடனும் திறந்த வெளியில், மழை, வெய்யில் என அனைத்து இயற்கையோடு ஒன்றி நின்று அருள்பாலிக்கிறார். தமிழகம் முழுவதும் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து கும்பிட்டுச் செல்லும் புகழ் பெற்ற கோயில் இது. ஆஞ்சநேயர், தமது கோயிலுக்கு நேரெதிராக இருக்கும் லட்சுமி நரசிம்மர் ஆலயத்தைத் தொழுதபடி இருக்கிறார் என்பது சிறப்பு.

இந்த ஆஞ்சநேயரை வழிபட்டால் நல்ல தெளிவான சிந்தையும், உடல் பலமும், கீர்த்தி, மனத்துணிவு, அச்சமின்மை, நோயின்மை, மனச்சோர்வின்மை, வாக்கு சாதுர்யம் ஆகிய நற்பலன்கள் ஏற்படும். நவக்கிரகங்களால் ஏற்படும் தொல்லைகள்  நீங்குவதோடு, கடன் தொல்லைகள், விரோதிகளால் ஏற்படும் இன்னல்கள் போன்றவைகளும் நீங்குவதாக மக்கள் நம்புகின்றனர். தீராத நோய்களும் தீர்த்து வைக்கிறார் இந்த ஆஞ்சநேயர் என்கின்றனர் பக்தர்கள். .ஆஞ்சநேயரை வழிபட்டால் நவக்கிரகங்களை வழிபடுவதற்கு இணையானது என்ற ஐதீகம் உள்ளதால் நவக்கிரக தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள  ஸ்ரீ ஆஞ்சநேய சுவாமியை பக்தி சிரத்தையுடன் வழிபடுகிறார்கள்..

தல வரலாறு :

நேபாளத்தில் உள்ள கண்டகி நதியில் சாதாரணமாக ஒரு துளை உள்ள சாளக்கிராமம் கிடைப்பது வழமை. ஆனால் ஆஞ்சநேயருக்கு மட்டும் இந்த நதியில் குளிக்கும் போது 2 துளையுள்ள சாளக்கிராமம் கிடைத்திருக்கிறது. சஞ்சீவி மலையை ஆஞ்சநேயர் தாம் எடுத்த இடத்திலேயே வைத்து விட்டு திரும்பி வரும்போது நாமகிரித்தாயாரிடம் இந்த சாளக்கிராமத்தைக் கொடுத்துவிட்டு ஆழ்ந்து  ராமஜெபம் செய்கிறார்.நீண்ட நேரம் ஆனதால் தாயாரும் அதைக் கீழே வைத்து விடுகிறார். ஆஞ்சநேயர் ஜெபம் முடித்து விட்டு வந்து பார்க்கும் நேரத்தில் அதிசயமாக அந்த சாளக்கிராமம் பெரிய மலையாக மாறிவிட்டிருந்தது. அதை அசைக்கக்கூட முடியாத நிலையில் இருந்தது. அந்த நேரத்தில் மகாவிஷ்ணு நரசிம்மர் கோலத்தில் திருக்காட்சி அளித்ததோடு இராமருக்கு பணிவிடை செய்யவும், தன்னை  வழிபடவரும் பக்தர்களுக்கு தாங்கள் வேண்டிய காரியங்களை நிறைவேற்றிக் கொடுக்கவும் சொல்கிறார். அதன்படியே இந்த ஆலயத்தில் ஆஞ்சநேயர் பல்லாண்டுகளாக பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.


நாமக்கல் பேருந்து நிலையத்திலிருந்து 1.5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்த ஆலயத்தின் அருகிலுள்ள ரயில் நிலையம் கரூர்
மற்றும் அருகிலுள்ள விமான நிலையம் திருச்சி.

சிறீஆஞ்சநேயருக்கு வெற்றிலை மாலை சாத்துதல் , எலுமிச்சம் பழம் மாலை சாத்துதல், துளசி மாலை சாத்துதல், வடைமாலை சாத்துதல், பூமாலை சாத்துதல் போன்றவை நேர்த்திக்கடனாக செலுத்தப்படுகின்றன. இதுதவிர வெண்ணெய் காப்பு,  வெள்ளி அங்கி, முத்தங்கி அலங்காரங்கள்  போன்ற சிறப்பு அபிடேகங்களும் செய்யப்படுவது வழமையாக நடைபெறுகிறது.

இராம நாமம் எங்கெல்லாம் ஒலிக்கிறதோ அங்கெல்லாம் தலையில் கூப்பிய கரங்களுடன், ஆனந்தம் நிறைந்த விழிகளுடன், ஸ்ரீ ஆஞ்சநேயர் அரூபமாக அருகில் மெய்மறந்து நின்று கேட்கிறார் என்று புராணங்கள் கூறுகின்றன.

சனி மற்றும் இராகு தோசங்களினால் ஏற்படும் துன்பங்களை களைவதற்காக ஆஞ்சநேயருக்கு, உளுந்து மற்றும் எள் எண்ணெயில் செய்த வடை மாலை சாற்றி வழிபட்டால் அவற்றிலிருந்து விடுபடலாம் என்ற் நம்பிக்கையும் உள்ளது. பௌர்ணமி தினத்தன்று பக்தர்கள் கிரிவலம் வருவதும் காண முடிகிறது. விசுவரூப வடிவான ஆஞ்சநேய சுவாமிக்கு, ஒவ்வொரு ஆண்டும் மார்கழி அம்மாவாசை தினத்தில் அனுமன் ஜெயந்தி விழா, அபிடேகம், வடைமாலை, சந்தனக்காப்பு, தங்கக் கவசம், வெள்ளிக் கவசம், மலர் அலங்காரம் என மிகச்சிறந்த முறையில் கொண்டாடப்படுகிறது. அது சமயம் வெளியூர்களிலிருந்தும் திரளாக பக்தர்கள் வந்து கலந்து கொண்டு ஐயனின் அருளைப் பெறுகிறார்கள்.

ஜெய் ஆஞ்சநேயா!

1 comment:

  1. இருமுறை சென்றதுண்டு... கோவிலின் விளக்கங்களும், மற்ற சிறப்பான தகவல்களும் அருமை...

    (படங்கள் மட்டும் தான் வரவில்லை... கவனிக்கவும்... ஒருவேளை எனக்கு மட்டும் தானா...? My Browser : Chrome)

    ReplyDelete