Monday, November 18, 2013

நெல்லுக்குப் பாயுற தண்ணீர் கொஞ்சம் புல்லுக்கும்!


பவள சங்கரி


நெல்லுக்குப் பாயுற தண்ணி கொஞ்சம் புல்லுக்கும்!

காட்சி  : 1

ஹலோ.. ஹலோ. ஹலோ.. ஏனுங்க .. கேக்கலீங்களா..

ஹலோ..  என்னம்மா.. நான் டிராஃபிக்ல இருக்கேன்.. ஒன்னும் கேக்கலை

ஹலோ.. ஏனுங்க பக்கத்துல யாரோ பேசுறது கேக்குது.. நீங்க என்னமோ வண்டீல போற மாதிரி சொல்றீங்க..

அதுவா.. வேற ஒன்னுமில்லம்மா. நானு சிக்னல்ல நிக்கிறேனா.. அங்க பக்கத்துல ஒருத்தர் போனில பேசிட்டிருக்கார்..

அப்படியா.. அப்ப சரி. வந்து, நான் எதுக்கு போன் பண்ணேன்னா.. ஏனுங்க... ஏனுங்க.. இருக்கீங்களா?

டொக் என்று போனை கட் பண்ணும் சத்தம் கேட்க,

ஏனுங்கண்ணா.. போனில அண்ணிங்களா.. இப்படி கலாய்க்கறீங்க பாவம். கடையில உக்காந்துக்கிட்டே டிராஃபிக்ல இருக்கேங்கறீங்க.. பாவங்ண்ணா அண்ணி..


ஏம்ப்பா, நீ நேத்து என்ன பண்ணே, மறந்துட்டியாபார்ட்டி வந்திருக்காங்க. மீட்டிங்ல இருக்கேன்னு சொல்லிட்டு, வடை தின்னுக்கிட்டிருக்கல.. அப்படித்தான்ப்பா இதுவும்.

அண்ணே, அது எங்கூட்டுகாரி கூட கொஞ்சம் சண்டை அதான் அப்புடி.. கடையில இருக்கும் போது சகட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசுனா, அப்பறம் மானம் போவுமில்லீங்ண்ணா.. அதான்.. ஹி..ஹி..

ம்ம்.. இப்ப தெரீதில்ல ... அப்புடித்தான் எங்களுக்கும்அதுவும் இன்னைக்குப் பிரச்சனை உன்னாலத்தான்.

எண்ணன்னே சொல்றீங்க.. என்னால பிரச்சனையா.. நான் என்ன பண்ணேன். அடக்கடவுளே

அட, ஆமாப்பா. நீதானே உனக்குத் தெரிந்த ஒரு அம்மா வீட்டு வேலைக்கு வரேன்னு சொன்னதா சொன்னேயில்லையா, நானும் அதை நம்பி எங்கூட்டு அம்மாகிட்ட போய் சொல்லிப்புட்டேன்நீ என்னடான்னா, அந்த அம்மா வெளியூர் போயிட்டாங்கன்னு ஈசியா சொல்லிப்புட்டே. அதான் கொஞ்ச நேரத்துக்கொருக்கா, போன் மேல போன் வந்து பொழைப்பை கெடுக்குது.

.. அதனா சங்கதி. சரிண்ணே, நான் நாளைக்கு வரும்போது அந்த அம்மாவைப்பத்தி விசாரிச்சுப்புட்டு வாறேன். நீங்க நடத்துங்க உங்க நாடகத்தை.

அட, போப்பா. உனக்கு கிண்டலா இருக்கு என் பொழப்பு.. பாரு இன்னும் கொஞ்ச நேரத்துல வரும்போது ஓட்டல்ல சாப்பாடு வாங்கியாறச் சொல்லி போன் வரும்.

சொல்லி வாயை மூடவில்லை, அதற்குள் போன் மணி அடிக்கிறது. அந்தப்போனுக்கு ஆயுசு நூறுதான்!

ஏனுங்க.. அட பரவாயில்லையே போனை எடுத்துட்டீங்க.. இப்ப கடையிலதான் இருப்பீங்க போல.. சரி ஒரு சின்ன ஐடியா. வீட்டுக்கு வரும்போது, வழியில இருக்குற உங்களுக்குப் பிடிச்ச அந்த திருச்சி கபேயில ஒரு சாப்பாடு வாங்கிட்டு வந்திடுறீங்களா? பாருங்க, நாம வீட்டில செய்தால் கூட ஒரு குழம்பு, ஒரு பொறியல்தான் செய்வோம். அங்க, கூட்டு, பொறியல், சாம்பார், வத்த குழம்பு எல்லாம் தராங்களே. ஒரு சாப்பாடு மட்டும் வாங்கினா போதும். நான் வீட்டில் ஒரு டம்ளர் சாதம் வக்கிறேன்.

அதெல்லாம் ஒன்னும் வேண்டாம். வாங்கறதே வாங்கறோம். இரண்டு சாப்பாடா வாங்கியாறேன். விடு.

அதில்லைங்க, சொன்னாக் கேளுங்க, சாப்பாடு மீந்து போயிடும். வீண் பண்ண வேண்டாம்.

சரிம்மா.. சரி. இப்ப என்னா, வரும்போது ஒரு சாப்பாடு வாங்கிட்டு வரணும். அவ்வளவுதானே  சரி ஆளை உடு.. இப்ப கொஞ்சம் வேலை இருக்கு. பில் போட வேண்டியிருக்கு. அப்பறம் பேசலாம்.

சே, என்ன இந்த மனுசர் கல்யாணம் ஆன புதுசுல, கொஞ்ச நேரத்துக்கு ஒருக்கா போன் பண்ணலேன்னா வருத்தப்படுவார். இன்னைக்கு என்னடான்னா இப்புடி சலிச்சுக்கறாரு. இருக்கட்டும், இருக்கட்டும் எங்க போயிடப்போறார், யானைக்கு ஒரு காலம் வந்தால், பூனைக்கு ஒரு காலம் வராமலா போகும்? பாத்துக்கறேன்மனதிற்குள் கருவிக்கொண்டே வேலையைப் பார்த்தாள் அருந்ததி.


காட்சி : 2

ஏனுங்க, நேரமாச்சு எழுந்திரிக்கலையா..  மணி ஆறாகுது இன்னும் தூங்கிக்கிட்டிருக்கீங்கபோய் முதல்ல பூவை பறிச்சு வையுங்க. அப்பறம் வெளியில இருக்கற பூவெல்லாம் பறிச்சுச்சுட்டுப் போயிடுவாங்க. நமக்கு பூஜைக்குப் பூ இருக்காது, சீக்கிரம் எழுந்திரிங்க.. வீடெல்லாம் குப்பையா நாறிக்கிடக்கு. அதை வேற சுத்தம் பண்ணனும்

என்னம்மா இது காலங்கார்த்தாலயே ஆரம்பிச்சுட்டியாமனுசனை கொஞ்சம் நிம்மதியா தூங்கக்கூட விட மாட்டியா..? இப்படி இம்சை பண்றியே.

அட என்னங்க நீங்க, வாக்கிங் போக வேண்டாமா, இப்படியே தினமும் லேட்டா எழுந்திரிச்சுட்டு நாளைக்கு, நாளைக்குன்னு சொல்லி ஏமாத்திப்பிடறீங்க.. இன்னைக்காச்சும் சீக்கிரம் எழுந்திரிச்சி சித்த வாக்கிங் போங்க.

சரி.. சரிம்மா இதோ எழுந்திரிக்கிறேன். நீ போம்மா, பின்னாடியே வறேன்..

காலங்கார்த்தாலே ஆரம்பிச்சுட்டாளா. போச்சுடா. இன்னைக்கு இன்னும் என்னென்ன கூத்து நடக்குமோ தெரியலியே.. கடவுளே. சீக்கிரமா ஒரு நல்ல ஆளா பாத்து வீட்டு வேலைக்கு அனுப்பக்கூடாதா..’

அங்க என்னங்க முணுமுணுப்பு? நேரமாச்சுல்ல .. எத்தனைவாட்டிதான் கூப்பிடறது. ஏனுங்க இப்படி தொல்லை பண்றீங்க. மணியாகுதில்ல..

ஏனுங்க, வாக்கிங் போக கிளம்பிட்டீங்களா.. போயே ஆகணுமா. எப்பவும் 10 தடவை சொன்னாலும் ஏமாத்துவீங்க. இன்னைக்கு என்னடான்னா சொன்னதும் டிராக் சூட்டைப் போட்டுக்கிட்டு ஜம்முனு வந்து நிக்கறீங்க..

பின்ன என்னம்மா.. நீதானே வாக்கிங் போக புறப்படச்சொன்னே.. அதுக்குள்ள என்ன ஆச்சு. இப்ப சலிச்சுக்கறே.

அதில்லைங்க.. வாக்கிங் போறதும் நல்லதுதான். இல்லேனா நல்ல உடற்பயிற்சி கூட செய்யலாம். சில நாளைக்கு மழை பெய்தால் வீட்டில இருந்துதானே எக்ஸர்சைஸ் பண்ணுவீங்க. அதான் சொன்னேன்.

ஏம்மா.. இன்னைக்குதான் மழை பெய்யலியே. அப்பறம் எதுக்கு இப்புடி சொல்றே.. புரியறா மாதிரி சொல்லமாட்டியே நீ!

அதில்லைங்க..  நம்ம வீட்டை சுத்தம் பண்றதும் நல்ல எக்ஸர்சைஸ்தானே..  அதான் சொன்னேன். வேலைக்காரி இல்லாத இந்த நேரத்துல கொஞ்சம் உதவி செய்த மாதிரியும் இருக்கும், உடற்பயிற்சி செய்த மாதிரியும் இருக்குமே?

இப்ப என்னதான் சொல்ல வரே.. ஒன்னும் புரியல.. வாக்கிங் போகவா, வேண்டாமா.. நேரடியா சொல்லு எதா இருந்தாலும்.

அதைத்தாங்க சொல்றேன். நீங்க புரிஞ்சிக்கவே மாட்றீங்க.. பேசாம வீட்டை சுத்தம் பண்ணலாம் அதுவே நல்ல உடற்பயிற்சி தானேன்னு சொன்னேன். நான் கீழே சுத்தம் பண்றேன். நீங்க மாடியில ஒட்டடை அடித்து, கூட்டி துடைத்து சுத்தம் பண்ணிடுங்க.

அடப்பாவி.. இதுக்குத்தான் இத்தனை பில்டப்பா.. சரியான ஆள்தான் நீ.. அட போம்மா.. நம்மால ஆகாது இது. ஆளை விடு தாயே.

என்ன நீங்க, வேலைக்காரி அவிங்க அம்மா செத்து போயிட்டாங்கன்னு லீவ் போட்டு இன்னையோட 15 நாள் ஆவுது. நான் ஒருத்தியும் கிடந்து அல்லாடிக்கிட்டு கிடக்கறேன். நீங்க என்னடான்னா கொஞ்சம் ஹெல்ப் பண்ண இப்புடி சலிச்சுக்கறீங்க.. என்னாலயும் தான் முடியல.. ஆனா நான் செய்யலயா? எனக்கு மட்டும் என்ன எழுதியா வச்சிருக்கு?

ஏம்மா, வீட்டில சும்மாதானே இருக்கே. அப்படி என்ன வெட்டி முறிக்கறே.. டிவி சீரியல கொஞ்ச நேரம் நிறுத்தி வச்சுட்டு வேலையைப் பாக்கலாமில்ல. இல்லேனா அதை காதில கேட்டுக்கிட்டே வேலை செய்ய வேண்டியதுதானே.. உனக்காகத்தானே மூனு டிவிக்கும் கேபிள் கனெக்ஷன் குடுத்து வச்சிருக்கேன். போற பக்கமெல்லாம் சீரியல் பாத்துக்கிட்டே வேலையும் செய்யலாமே. நம்ம வீட்டு வேலைக்காரம்மாவும் மனுசிதானே, அது 5 வீட்டுல வேலை செய்யுதே. அது மட்டும் எப்புடி செய்யுதாம். நம்மால நம்ம வீட்டு வேலையே செய்ய முடியலை.

அது அந்தம்மாவுக்கு தொழில். அவிங்க ஊட்டிலயும் போயி பாருங்க. இப்பிடித்தான் சண்டையா இருக்கும். இப்ப என்னங்கறீங்க மாடியைச் சுத்தம் செய்ய முடியுமா இல்லையா..  சும்மா வெட்டிப் பேச்சு வேண்டாம். அப்பறம் நான் அதைச் சொன்னேன், இதைச் சொன்னேன்னு எல்லாத்துக்கிட்டேயும் கம்ப்ளெயிண்ட் பண்ணுவீங்க..

அட. இது வேறயா.. நான் எப்ப கம்ப்ளெயிண்ட் பண்னேன், யார்கிட்ட பண்ணினேன்.. அம்மா தாயே, இப்ப என்னா, மாடியை சுத்தம் பண்ணனும் அவ்வளவுதானே, மொட்டை மாடியும் சேர்த்து சுத்தம் பண்றேன். ஆளை விடு மகராசியே.

எப்படியாவது ஒரு ஆளை சீக்கிரம் தேடிப்பிடிக்க வேண்டும். இதுக்கு மேல நம்மளால சமாளிக்க முடியாது. அந்த ஜெயா வீட்டிலயே போய் அவ எப்பதான் வேலைக்கு வருவான்னு கேட்டுட்டாவது வரணும் என்று புலம்பிக்கொண்டே வேலையைப் பார்த்தார் சந்திரன்.

காட்சி  ; 3

அட, இன்னைக்கு என்னம்மா, இவ்வளவு உற்சாகமா வேலை ஆவுதுஎன்னை எழுப்பக்கூட இல்லை. நீயே எல்லா வேலையும் இழுத்துப்போட்டு செய்துட்டிருக்கே..  ஜன்னல் கூட துடைச்சிட்டிருக்கே. என்ன விசேசம் இன்னைக்கு?

அதுவா, வேற ஒன்னுமில்லீங்க. உங்களுக்கு இனிமேல் தொந்திரவே இருக்காது. நீங்க நிம்மதியா இருக்கலாம்.

அட, அப்படி என்ன அதிசயம் நடந்துச்சி அதுக்குள்ள .. சஸ்பென்ஸ் வக்காம சொல்லும்மா.

அது, வேற ஒன்னுமில்லீங்க, நம்ம ஜெயா இல்லை, அவ இப்பதான் போன் பண்ணினா.. இன்னையிலருந்து வேலைக்கு வராளாம். அவங்க அம்மாவுக்கு செய்யுற இறுதி சடங்கெல்லாம் செய்து முடிச்சுட்டாங்களாம். இனிமே பிரச்சனை இல்லை . அதான் சொன்னேன்.

அது சரி. நல்லதாப்போச்சு. அதான் அவ வரப்போறாளே அப்பறம் நீ ஏன் இப்படி வீட்டை தலைகீழ கவுத்துப்போட்டு சுத்தம் செய்துட்டிருக்கே.. அவ வந்து பார்த்துக்குவா இல்ல..

அது சரி. அவ வர நேரத்துக்கு வீடு கண்றாவியா கிடந்ததுன்னா, என்னையப்பத்தி என்ன நினைப்பா.. அதுமட்டுமில்லாம, தான் இல்லேன்னா நம்ம வீடு நாறிப்போகுமின்னு அவளுக்கு தலை கனம் வந்துடாதா.. அதுக்கப்புறம் நான் எப்புடி அவக்கிட்ட வேலை வாங்க முடியும். அதனாலதான், வீட்டை அவ வச்சிருக்கறதவிட ஒரு படி அதிகமா கண்ணாடியாட்டமா வச்சிருக்கணுமின்னு இப்படி விடிகாலைல இருந்து சுத்தம் பண்றேன். எல்லாம் இன்னைக்கு ஒரு நாளைக்குத்தானே. அப்பறம் ஜெயா வந்து எல்லாம் பாத்துக்குவா..”

அடக் கடவுளே, இன்னும் எத்தனை ஜென்மம் எடுத்தாலும் இந்த பொம்பளைங்கள புரிஞ்சிக்கவே முடியாதப்பா.. என்னமா யோசிக்கிறாங்கடா சாமி.. எப்படியோ நமக்கு இனி நச்சு இல்ல.. ஆளை விட்டா போதுமடா சாமி!’

என்னங்க அங்க முனகல். சீக்கிரம் வாங்க டிபன் ரெடியா இருக்கு. சாப்பிடலாம். இட்லியும் தக்காளி சட்னியும் ரெடி.

இனிமேல் காலை டிபனும், மதியச் சாப்பாடும் எல்லாம் வீட்டில் ஒழுங்கா கிடைக்கும் என்பதும் தெரியுமே. ஏன்னா ஜெயாவிற்கு நேரத்திற்கு ஒழுங்கா சாப்பாடு குடுக்கணுமே. நெல்லுக்குப் பாயுற தண்ணி அப்படியே கொஞ்சம் புல்லுக்கும் பாயாமயா போகும்!

முற்றும்


நன்றி: திண்ணை

2 comments: