Saturday, February 7, 2015

சுட்டும் விழிச்சுடர்!





திருமணம் என்பது ஒரு பெண்ணின் வாழ்க்கையில் பலவிதமான திருப்பங்களை ஏற்படுத்தக்கூடியது. எத்தனையோ கனவுகள், கற்பனைகள், பருவம் ஏற்படுத்தும் எதிர்பார்ப்புகள் என்று மண நாளை எதிர்நோக்கி காத்திருக்கிறார்கள்
இந்தியப் பெண்கள் பொதுவாகவே தங்கள் பழக்க வழக்கங்கள், வாழ்க்கை முறைகள் போன்ற அனைத்தையும் தங்கள் மதம் சார்ந்தே கடைபிடிக்கிறார்கள். தங்கள் அன்றாட கடமைகள் அனைத்தையும் தங்கள் மதச் சடங்குகளைப் போலவே ஆழ்ந்த ஈடுபாட்டுடன் செய்பவர்கள். சென்ற தலைமுறையின் பெண்கள் கூட, வீட்டில் கணவன், குழந்தைகள், மாமனார், மாமியார் என்று அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு, அமைதியாக பூசை, வழிபாடுகள், துளசிச் செடியை வலம் வருதல், ஓரளவிற்குப் படித்தவர்கள் என்றால் வீட்டுக் கணக்குகள், கணவனுக்குச் சின்ன உதவிகள் செய்வது போன்றவற்றில் மட்டும் பங்கெடுத்துக்கொண்டு மிக அமைதியான வாழ்க்கையை வாழ்ந்து கொண்டிருந்தார்கள். பழமைவாதத்தில் பாங்காக குடும்பத்திற்கு அடங்கிய மருமகளாக, குழந்தைகளின் பாசமிகு தாயாக, நல்ல கடவுள் பக்தையாக இப்படி ஒரு கட்டுப்பாடான வாழ்க்கையில் சுகம் கண்டவர்கள். ஆனால் உலகம் முழுவதும் இன்று கால மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டுதான் உள்ளது. சென்ற தலைமுறையில் வாழ்ந்த நம் பெற்றோர் அனுபவித்த ஒரு அமைதியான வாழ்க்கை இன்று உள்ளதா என்பதே கேள்விக்குறியாக உள்ளது. அவர்களிடம் பெரிய சொத்து வசதிகளோ, அதிக செல்வமோ இல்லாமல் இருந்திருக்கலாம். ஆனால் இன்றைய இயந்திர வாழ்க்கை அன்று இல்லை. இன்றுபோல் பொருளாதார பற்றாக்குறையும், சிக்கலும் அதனால் மனநிம்மதி கெட்டு, உடல் நலக் குறைவும் ஏற்படும் அவல நிலை அன்று இல்லை. உள்ளதைக்கொண்டு மகிழ்ச்சியாக வாழக் கற்றிருந்தார்கள் அவர்கள். நாகரீகம் வளர்ந்துவிட்ட இன்றைய நிலையில் உணவு முறைகள், வாழும் முறைகள் என அனைத்திலும் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் விதவிதமான புதிய நோய்களையும் இலவச இணைப்புகளாக்கியுள்ளன. இதில் மிக முக்கியமானது ஆண்களைப் பாதிக்கும் ஆண்மைக் குறைவு. சுரப்பிகளின் குறைபாடு போன்ற பல காரணங்கள் சொல்லப்பட்டாலும், இன்றைய பெரும்பாலான விவாகரத்திற்கான காரணம் ஆண்மைக் குறைவு என்று கூறப்படுகின்றன. சமூகப் பிரச்சனைகளில் மிக முக்கியமான ஒன்றான இந்த மணமுறிவு இன்று குறிப்பிடும் அளவிற்கு கனிசமாக அதிகரித்துள்ளது.


வணிகவியலில் முதுநிலைப் பட்டம் பெற்ற, பாரம்பரியமான குடும்பத்தைச் சேர்ந்த அழகான இளம் பெண் அவள். இப்படித்தான் பல கனவுகளோடும், கற்பனைகளோடும் கண்ணிற்கு இலட்சணமான, நன்கு படித்து, ஆறு இலக்க சம்பளம் வாங்கும் நல்ல பணியில் உள்ள மணமகன் கிடைத்த பெருமையில் காத்திருக்கிறாள். ஊரே அதிசயிக்கும்படி விமரிசையாக திருமணமும் நடந்து, மற்ற சடங்கு, சம்பிரதாயங்களும் குறைவில்லாமல் முறைப்படி நடந்து, புகுந்த வீடு நோக்கி அடியெடுத்து வைத்த மணமகளுக்கு அடி மேல் அடி விழுந்து அறுபது நாட்களில் மீண்டும் பிறந்த வீட்டிற்கே திரும்பிவிட்டாள். புதுப்பெண்ணின் முகத்தில் இருக்க வேண்டிய பூரிப்பு ஏதும் இல்லாமல் மாறாக, சோகமாக இருக்கும் மகளின் நிலையைக் கண்டு சந்தேகம் கொண்டு துருவித் துருவி ஆராய்ந்ததில், பேரிடியாக கிடைத்த தகவல் மணமகனுக்கு ஆண்மை குறைபாடு என்பதுதான். அடுத்த அதிர்ச்சி இத்தனைப் பெரிய குறைபாடு உள்ளவன் தங்கள் மகன் என்பதை முன்கூட்டியே அறிந்திருந்தும் அதை மறைத்து திருமணம் முடித்துள்ளார்கள். என்ன நடந்தாலும் பெண் வெளியில் சொல்ல மாட்டாள் என்ற குருட்டு தைரியத்தில் இந்த அநியாயத்தைச் செய்துள்ளனர். இதைவிட அநியாயம் இந்த விசயம் பெண் வீட்டாருக்குத் தெரிந்த பின்பும், “அதனாலென்ன, உங்கள் மகள் இனி எங்கள் மகளாக இருந்துவிட்டுப் போகட்டும், விசயம் வெளியில் தெரிந்தால் நம் இரு குடும்பத்திற்கும் அவமானமாகிவிடும்” என்று சொல்லியதுதான். எத்தனை சுயநலமிக்கக் கூட்டம் இது என்பதை நிரூபித்துள்ளது. பின்னாட்களில் குழந்தை இல்லை என்று யாராவது கேட்டால் அப்பெண் மலடி என்று காரணம் சொல்லி தப்பிக்கவும் தயங்கமாட்டார்கள் இவர்கள். இப்படி ஒரு பெண்ணை பலிகெடாவாக்கிவிட்டு எதுவுமே நடவாதது போல வாழ்க்கையை ஓட்டிவிடலாம் என்று அவர்கள் போட்ட திட்டம் நிறைவேறாது போனாலும், இன்று அந்தப் பெண்ணின் நிலையும் மிகவும் பரிதாபமாக உள்ளது.
சோதிடப் பொருத்தம், கல்வித் தகுதி, சொத்து மதிப்பு, வெளித்தோற்றம், குடும்பப் பாரம்பரியம் என்று அனைத்தையும் பார்த்தவர்கள் மணமகனுக்கு மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்று நினைத்தும் பார்க்கவில்லை. ‘சமூகத்துக்கு அஞ்சியும், குடும்பத்தில் மூத்தவர்களின் கட்டாயத்தின்பேரிலும், தகுதியின்மை, இயலாமையை மறைத்து திருமணங்கள் நடத்தப்படுகின்றன. ஆண்மைக் குறைபாடு உண்மையான காரணமாக இருந்தாலும் பலர், தங்களுக்கு வசதியாக வேறு காரணங்களைக் கூறி விவாகரத்துக் கோருவதும் அதிகரித்து வருகிறது’ – இதுதான் இன்றைய நிலையாக உள்ளது. திருமணத்திற்கு முன்பு கட்டாயமாக மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்ற சட்டம் இயற்றப்பட்டால் அது பல திருமண முறிவுகளுக்கான தீர்வாக அமையக்கூடும். பிரச்சனை வந்த பின்பு அது வெளியே தெரிந்தால் குடும்ப மானம் பறிபோய்விடும் என்பதற்காக வாய் மூடி மௌனம் காப்பதால் தவறிழைத்தவர்களை காப்பாற்றுவதோடு, பாதிக்கப்பட்ட பெண்ணின் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடுகிறது.
பெரும்பாலான விவாகரத்து வழக்குகளில் மணமகன்களின் ஆண்மையின்மை ஒரு காரணமாக சொல்லப்படுவதால் திருமணத்திற்கு ஆண்மை பரிசோதனை அவசியம் என்று உச்ச நீதிமன்றம் கருதுவதாக செய்திகள் வெளியாகின்றன. இந்தியாவில் 40 சதவீதம் ஆண்களுக்கு முழு அளவிலான ஆண்மை குறைவும், 60 சதவீதம் ஆண்களுக்கு ஒரளவிற்கு ஆண்மை குறைவும் (partial impotance) இருப்பதாக இந்திய செக்ஸாலஜி மருத்துவர்கள் கூட்டமைப்பு தெரிவிக்கிறது.

‘திருச்சியைச் சேர்ந்த பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணிபுரியும் பெண்ணுக்கும், தேனி மாவட்டம், போடிநாயக்கனூரைச் சேர்ந்த இளைஞருக்கும் இடையேயான மணமுறிவு தொடர்பான வழக்கு ஒன்றை விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி என்.கிருபாகரன் அவர்கள், அந்த வழக்குத் தொடர்பாக மட்டுமல்லாமல், வழக்குமன்றத்துக்குத் தொடர்ந்து வரும் இதே போன்ற பிரச்சினைகளுக்கும் சேர்த்து பயன்தரத்தக்க கருத்தொன்றைத் தெரிவித்துள்ளார்.’ – கட்டுரையை முழுமையாக வாசிக்க ; திருமணத்திற்கு முன் மருத்துவப் பரிசோதனை?

1 comment:

  1. இன்றைக்கு மிகவும் அவசியம் தான்...

    ReplyDelete