Friday, January 26, 2018

குடியரசு தின நல்வாழ்த்துகள்!



1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் நம் இந்திய நாடு சுதந்திரம் அடைந்த பிறகு மக்களாட்சியை அறிவித்து டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் தலைமையில் இந்திய அரசியல் சட்டம் நிறைவேற்றப்பட்டது. 1950, சனவரி 26, காலை 10.18 மணி முதல் இந்திய குடியரசுத் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த தினம் தேசிய விடுமுறையாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
சட்ட வரைவுக் குழுவில் இடம் பெற்றவர்கள், அம்பேத்கர், கோபால்சாமி ஐயங்கார், அல்லாடி கிருஷ்ணமூர்த்தி, கே.எம்.முன்ஷி, சையது முகமது சாதுல்லா, மாதவராவ், டி.பி.கைதான் ஆகியோர் ஆவர்.
1976ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட 42வது சட்டத் திருத்தத்தின்படி, “சமதர்மம்’,”மதச்சார்பின்மை’, “ஒருமைப்பாடு’ என்ற மூன்று வார்த்தைகள் முகவுரையில் சேர்க்கப்பட்டன.
indexகுடியரசுத்தலைவர் என்பவர் நம் நாட்டின் முப்படைகளுக்கும் தளபதியும், முதல் குடிமகனும் ஆவார். ஆனால் நம் நாட்டில் இது பெயரளவிலேயே மதிப்புமிக்க பதவியாக இருந்து வருகிறது. நம் இந்தியக் குடியரசின் முதல் குடியரசுத் தலைவர் டாக்டர் இராஜேந்திரப் பிரசாத், மிக எளிமையான ஒரு தலைவராக இருந்தவர். 1946ஆம் ஆண்டு இந்திய அரசியலமைப்பு அவையின் தலைவராக நியமிக்கப்பட்ட இவர், 1947ஆம் ஆண்டு காங்கிரசு கட்சியின் தலைவராக மூன்றாம் முறையாகப் பதவியேற்றார். இவர் 1950 முதல் 1962 வரை இந்தியக் குடியரசுத் தலைவராகப் பதவி வகித்தவர். இரு முறை குடியரசுத் தலைவர் பதவிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரே குடியரசுத் தலைவர் இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பெற்றார்.
இவருடைய பதவிக் காலத்தில் சிந்து மற்றும் பஞ்சாப் மாகணங்களில் நிலநடுக்கம் ஏற்பட்டபோது தடைகளையும் மீறி களம் இறங்கி நிவாரணப் பணிகளில் ஈடுபட்டார். விடுதலைப் போராட்டங்களில் ஈடுபாடு கொண்ட இவர், மகாத்மா காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் இணைந்தார். மிகப் புகழ் பெற்ற வழக்கறிஞராக பணியாற்றி வந்தவர், ஆசிரமத்தில் கழிவறையைச் சுத்தம் செய்வது,பாத்திரம் துலக்குவது போன்ற சாதாரணப் பணிகளைச் செய்து வந்தார். உண்மையான சேவை மனப்பான்மையுடன் மிக எளிமையான வாழ்க்கையை வாழ்ந்தவர் இவர். அதிக முறை, குடியரசு தின விழாவில் பங்கேற்ற குடியரசுத் தலைவர் என்ற பெருமையைப் பெற்றவர். இவர் 13 குடியரசு தின விழாக்களுக்கு தலைமை வகித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
உலகின் மிகப்பெரிய குடியரசு நாடாகிய நம் இந்தியாவின் தற்போதைய, 14 வது குடியரசுத் தலைவராகப் பதவியேற்றிருப்பவர் திரு. ராம்நாத் கோவிந்த் ஆவார்.
உலகளவில் ஆன்மீக நாடாகப் பார்க்கப்படும் நம் இந்தியாவில் சமீபத்தில் நடந்த சில நிகழ்வுகள் நாட்டின் நல்ல பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் நிகழ்ந்துள்ளதும் வருந்தத்தக்கது. நம் நாடு வல்லரசாக ஆகவேண்டும் என்ற எதிர்பார்ப்பில் இருக்கும் நிலையில் இன்று நல்லரசாக அமைந்து மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையை சிரமமின்றி நடத்துவதற்கேனும் வழிவகை அமைய வேண்டும் என்ற எண்ணமே மேலோங்கியுள்ளது. இந்த நிலை விரைவில் மாற்றம் பெற்று நாடு முன்னேற்றப் பாதையில் செல்வதோடு அமைதியும் நிலவ வேண்டும் என்று பிரார்த்தனை செய்வோம்.
http://www.vallamai.com/?p=82990

No comments:

Post a Comment