Sunday, April 24, 2011

வெண்ணிலவில் ஒரு கருமுகில் (6)

திகாலை ரம்மியமான வேளையில் விழித்தெழுவது என்பது, சாமான்யமான காரியம் அல்ல. அதையே வழக்கமாகக் கொண்டவர்கள் மட்டுமே எளிமையாக எழக்கூடும். அந்தச் சுகமான வேளையில் பொதுவாக ஆனந்தமாகத் தூக்கம் வரும். ஆனால் எழுந்து பழகியவர்கள், அதுவும் அந்த நேரத்தில் நடைப் பயணம் சென்று பழகியவர்கள் அந்த வழக்கத்தை பெரும்பாலும் மாற்றிக்கொள்வது என்பது பிரம்ம பிரயத்தனமாகவே இருக்கும்.

கல்லூரி நாட்களில் ஆரம்பித்த பழக்கம், இன்று வரை தொடர்ந்து கொண்டிருக்கிறது. நான்கு மணிக்கு டாண்ணென்று அலாரம் இல்லாமலே விழித்து விடுவாள் மங்களா. எழுந்தவுடன் பல் துலக்கி, முகம் அலம்பி, சுவாமி விளக்கேற்றிவிட்டு, தியானம் செய்ய ஆரம்பித்தாள். ஏனோ மாறனின் திருமணப் பேச்சு எடுத்த நாள் முதல் அவளுடைய தியான வேளை சற்று அமைதியற்றுத்தான் இருக்கிறது. அதுவும் குலதெய்வம் கோவில் சென்று வந்ததிலிருந்து ஏதோ ஒரு உறுத்தல் இருந்துகொண்டே இருக்கிறது. ஆனால் ஆண்டவன் அருள் மீது கொண்ட ஆழ்ந்த நம்பிக்கை, நல்லபடியாக எல்லாம் முடியும் என்ற எண்ணத்தையும் மேலோங்கச் செய்கிறது. எப்படியோ அங்காள அம்மன் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வாள் என்று அம்மனை நினைத்துக் கொஞ்ச நேரம் தியானித்தவள், வாசல் தெளித்துக் கோலம் போட, வெளியே வந்தாள். காலை 5 மணி இருக்கும், இந்த வேளையில், அந்த மயிலாப்பூர், ஜீவன் பீமா காலனியில் உள்ள பெரும்பாலான வீட்டில் வாசலுக்கு நீர் தெளித்திருந்தார்கள்.

வாசலில் பவள மல்லியின் வண்ணக் கோலம், கண்ணையும் அத்தோடு மெல்லிய நாசியை நனைக்கும் அந்தச் சுகந்தம், மனத்தையும் ஒரு சேர நிறைவடையச் செய்தது. விவரமாக இரவே மரத்தினடியில் தார் பாய் போட்டு வைக்கும் வழக்கம் இருப்பதால், அந்த மலர்களுக்கு நோகாமல் மெதுவாக எடுத்து பூக்கூடையில் இட்டு உள்ளே கொண்டு வைத்தாள். வந்து கேட்டைத் திறந்து பின் பெருக்கி, மாக்கோலம் இட்டு, அன்று வெள்ளிக்கிழமையாதலால், செம்மண் கரை கட்டும் போதும்தான்.

‘அட, இன்று வெள்ளிக் கிழமையல்லவா, இன்றுதானே நாள் நன்றாக இருக்கிறதென்று கௌரியின் பெண்ணை மாறனுக்குப் பெண் கேட்கப் போகலாம் என்றாரே, அவரிடம் நினைவுபடுத்த வேண்டும்’ என்று வேகமாகக் கோலம் போட்டுவிட்டுக் கிளம்பினாள்.

ராமச்சந்திரன் விழித்தெழுந்து குளியலறையில் இருப்பதை, தண்ணீர் விழும் சத்தம் உணர்த்தியது. வந்தவுடன் பால் வாங்க பூத் போவது வழக்கம். பால் வாங்கி வருவதற்குள் மங்களம் காபி டிகாஷன் தயாராகப் போட்டு வைத்தால், பால் வாங்கி வந்தவுடன், ஃபிரஷ்ஷாக பில்டர் காப்பி போட்டு மணக்க மணக்க எடுத்து வந்து தருவாள். காபி குடித்து முடிப்பதற்குள் தினசரி, செய்தித்தாள் வந்துவிட வேண்டும். இல்லையென்றால் குட்டி போட்ட பூனையாக வீட்டிற்கும் வாசலுக்குமாக நடக்க ஆரம்பித்துவிடுவார்.

இது, அவருடைய முப்பது வருடப் பழக்கம். ஆனாலும் தன்னுடைய ரயில்வே உயரதிகாரிப் பதவியிலிருந்து ஓய்வு பெற்றவுடன் ஒரு சில மாற்றங்களுடன் இன்றும் தொய்வில்லாமல் போய்க்கொண்டிருக்கிறது காலம். வாழ்க்கைச் சக்கரம் பழுதில்லாமல் ஓடிக்கொண்டிருக்கும் வரை பிரச்சனை இல்லைதான். ஆனாலும் நன்றாக இருக்கும் போதே கடமைகளை முடித்துவிட வேண்டும். முக்கியமான கடமைகள் முடிந்த பிறகு வாழக்கூடிய ஒவ்வொரு நாளையும் ஆண்டவன் கொடுத்த வரமாக வரவுக் கணக்கில் வைத்துக்கொள்ளலாம். அப்போது, வாழ்க்கையில் ஒவ்வொரு படியையும் கடந்து வர, தான் பட்ட பாட்டையெல்லாம் நினைவில் கொண்டு, அந்த அனுபவங்கள், இன்று போராடிக்கொண்டிருப்பவர்களுக்கு தன்னால் இயன்ற உதவிகளைச் செய்ய வேண்டும் என்ற எண்ணம் உண்டு. இருந்தாலும், தன்னுடைய ஜாதகம் குறித்த ஆய்வுப் பணியிலேயே பெரும்பாலான நேரம் செலவிட வேண்டியுள்ளதால் அதையும் ஒரு சேவையாக, தன்னைப் பற்றி தெரிந்தவர்கள் வந்து உதவி கேட்டால் தயங்காமல் இலவசமாக அறிவுரை வழங்குவதில் வள்ளல்தான்.

மங்களாவைச் சங்கடப்படுத்துகிற ஒரு சில விசயங்களில் இதுவும் ஒன்று. சின்னச் சின்ன விசயங்களுக்கெல்லாம், நேரம், காலம், தோஷம் என்று பேசுவது அவளுக்கு அறவே பிடிக்காது. ஆனாலும் இந்த மனிதரிடம் வழக்காடுவது அதைவிட பெரிய காரியம். அதனால் தலையை ஆட்டி விட்டுப் போவது அவளுக்கு உசிதமான காரியமாகிவிடுகிறது. ஒரு தலைவலி என்று வந்து விட்டால் கூட நேரத்தையும் காலத்தையும் கணாக்கு போட்டுக் கொண்டு அதனால் ஏதும் பெரிய பிரச்சனை வந்துவிடும் என்று தேவையில்லாமல் பயந்து கொண்டு, பெரிய மருத்துவமனையில் சென்று காட்ட வேண்டும் என்று பிடிவாதம் பிடிப்பார். பல நேரங்களில் இந்தப் பழக்கம், மங்களாவைச் சங்கடப்படுத்தியிருக்கிறது.

வயிற்று வலியும் அதிகமான உதிரப் போக்கும் இருந்த படியால் ஸ்கேன் எடுத்துவிட்டு மருத்துவர், கர்ப்பப் பையில் கட்டி இருப்பதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியபோது, மனிதர் தன்னுடைய அட்டமச் சனியைக் காரணம் காட்டி, அது முடிய ஒரு வருடம் ஆகும், அது வரை அறுவை சிகிச்சையைத் தள்ளிப் போட வேண்டுமென்றும் அடம் பிடித்ததால், அந்த ஒரு வருடம் மருந்து மாத்திரையுடன் எத்துனை துன்பங்களைத் தாங்க வேண்டியிருந்தது என்று இன்று நினைத்தாலும் மங்களாவிற்கு மலைப்பாக இருக்கிறது. அவளுடைய அட்டமச் சனியைவிட, அந்த வலியைத் தாங்கிக்கொண்டு ஒரு வருடம் ஓட்டியது சிரமமாக இருந்தாலும், கட்டி சிறியதாக இருந்ததால் தப்பிக்க முடிந்தது, இல்லையென்றால் மனிதரைச் சமாளிப்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல.

ஆனாலும் அந்த ஓராண்டு காலமும், அதற்குப் பிறகு அறுவை சிகிச்சை முடிந்த பிற்பாடு ஓய்வெடுக்கும் வேளையிலும், ஒரு தாயினும் சாலப் பரிந்து, தன்னைக் காத்த கணவனைத் தெய்வமாகவே நினைக்கத் தோன்றியது அவளுக்கு. காரணம், தாயில்லாத தனக்கு, ஒரு தாய் செய்ய வேண்டிய அத்துனை பணிவிடைகளும், அதுவும் உடல் நிலை மோசமாக இருந்த அந்த நேரத்தில், சற்றும் முகம் சுழிக்காமல் செய்ததை ஆயுள் முழுக்க நன்றிக் கடன் பட்டாலும் தீராது என்று அடிக்கடி நினைத்துக்கொள்வாள், கண்கலங்க…..

காப்பியுடன் வந்தவள், கணவன் நாளிதழில் மூழ்கியிருப்பதைப் பார்த்து, தொந்தரவு செய்ய வேண்டுமா என்று யோசிக்கையிலேயே, காப்பியின் மணம் சென்று ராமச்சந்திரனின் கவனத்தை மங்களாவின் புறம் திரும்ப வைத்தது. காப்பியைக் கொடுத்தவள்,

‘‘ஏண்ணா…..இன்னைக்கு வெள்ளிக்கிழமை. நம்ம கௌரி ஆத்துக்கு போலாம்னேளே.. நல்ல நேரம் பாருங்கோண்ணா, இன்று போய் அவாளிடம் ஃபார்மலாக ஜாதகம் சரியா இருக்குன்னு சொல்லிப்பிட்டு, அவாளோட விருப்பமும் தெரிஞ்சுண்டு வந்தோம்னாத்தான், மேற்கொண்டு அடுத்த காரியம் பண்ண முடியும்.’’

‘‘ம்ம்ம்…. இன்னைக்கு வெள்ளிக்கிழமைதானே. சீக்கிரம் கிளம்பு. இராகு காலத்திற்கு முன்னாலேயே போய்ட்டு வரலாம்’’

‘‘சரிண்ணா, அதான் வேகமாகச் சமைச்சிண்டிருந்தேன். இதோ சித்த நாழில முடிச்சிட்டு கிளம்பிடறேன்….’’

=====================

பீஸ் முடிந்து வீட்டிற்கு வந்த ரம்யாவிற்கு மனம் ஒரு நிலையில் இல்லை. தன் கல்லூரிக் காலங்களில் வாழ்க்கை எந்த அளவிற்கு எளிதாக, உற்சாகமாகப் போய்க்கொண்டிருந்ததோ, அதைவிட ஒரு படி மேலே இன்று திரும்பிய புறமெல்லாம், சுற்றி வளைக்கும் பிரச்சினைகள்.. யாரைப் பற்றி இனி தன் வாழ்நாள் முழுவதும் நினைக்கவே கூடாது. அந்தப் பெயர் கூட கண்ணில் படக் கூடாது என்று எண்ணியிருந்தாளோ, அவனே, அதே ரிஷி என்ற பெயரே தன் கண் முன்னே வந்து பழைய நினைவுகளை கிளறி விட்டு விட்டதே..

ரிஷியைச் சந்தித்த அந்த முதல் நாள்…… பசுமையாக நினைவில் இன்றும் இருக்கிறதே….

மறக்கக்கூடிய சந்திப்பா அது..? எவ்வளவு யதார்த்தமான ஆளாக இருந்தவன், ஏன் அப்படி மாறிப் போனான்..? கணக்குப் பார்த்து வருவதா காதல்?

மூன்று வருடக் காதல் அப்படி ஒரு நாளில் முடியக் கூடியது எளிதான காரியமா..? ஆனால் அவனால் முடிந்ததே. தான் மட்டும் வேண்டும். தன் உடன் நிழலாகத் தொடரும் தன் பிரச்சனைகள் மட்டும் விலகியிருக்க வேண்டும் என்றால் அது சாத்தியமாகக் கூடியதா…? இவ்வளவு சுயநலக்காரனாக இருப்பதை எப்படி ஆரம்பத்திலேயே கவனிக்கத் தவறிவிட்டோம் எனப் பல்லாயிரம் முறை கேட்டுக்கொண்ட கேள்விக்கு விடைதான் தெரியவில்லை அவளுக்கு…

எத்தனை சமாதானம் வேண்டுமானாலும் சொல்லலாம் இன்று. ஆனாலும் அவனுடைய சுயநலத்தின் மொத்த வெளிப்பாடாக அவன் இறுதியாகச் சொன்ன சேதிதான் அவளால் இன்றுவரை செரிமானம் செய்ய இயலாத ஒரு விசயமாகத்தானே இருக்கிறது…. ஏன் அப்படி ஒரு முடிவு எடுத்தான். வாழ்க்கை என்ன கூட்டிக் கழித்து விடை தேடும் விளையாட்டா…? ஏதேதோ குழப்ப முடிச்சுகள் இறுக்கிக்கொண்டிருக்க…

“டிரிங்க்….டிரிங்க்…..” போன் மணி ஒலிக்கவும் சுய நினைவிற்குத் திரும்பியவளாக அவசரமாக போனை எடுத்தவள்,

“ஹலோ…”

“ஹலோ, ரம்யாவா..”

“ஆம், நீங்கள் யார்?”

“என் பெயர் வந்தனா. உங்களிடம் கொஞ்சம் பேச வேண்டும். நீங்கள் இப்போது எங்கே இருக்கிறீர்கள்?”

“நீங்கள் யார். உங்களை எனக்குத் தெரியாதே. பெயர் எங்கோ கேள்விப்பட்டது போல் இருக்கிறது…”

“உங்களுக்கு என்னைத் தெரியாது. ஆனால் எனக்கு உங்களை நன்றாகத் தெரியும். உங்களிடம் கொஞ்ச நேரம் பேச வேண்டும். வீட்டில் தானே இருக்கிறீர்கள்?”

“ஆம் நீங்கள் யார் என்று சொல்லவே இல்லையே..”

“நான் யார் என்று சொன்னால் என்னிடம், மேற்கொண்டு பேசுவீர்களோ, மாட்டீர்களோ தெரியவில்லை…. இருந்தாலும் நான் உங்களிடம் அவசியம் பேச வேண்டும்…. நான் வந்தனா. ரிஷியின் மனைவி….”

இந்த வார்த்தையைக் கேட்டவுடன் இதயமே ஒரு கணம் நின்று விட்டது போல உணர்ந்தாலும் சமாளித்துக்கொண்டு ஏதும் காட்டிக் கொள்ளாமல்,

“சொல்லுங்கள், வந்தனா…..” என்றாள் அமைதியாக.

மாறன், ரிஷி பேசிய விஷயங்கள் குறித்து ரம்யாவிடம் பேச வேண்டுமென, போன் செய்துகொண்டிருக்க…… போன் வந்தனாவிடம் பிசியாக இருப்பது, மாறனுக்குத் தெரிய நியாயமில்லையே…….

(தொடரும்……..

No comments:

Post a Comment