Sunday, June 7, 2020

தூக்கிவெச்சான் பாறை



பெருங்கற்படைகள் என்பது உயிரற்ற உடல் புதைக்கப்பட்ட இடங்கள் அல்லது நினைவுச்சின்னங்கள். கல்லால் ஆன பெட்டி வடிவ கல்லறை, வரையறுக்கப்பட்ட கருவூலங்களைக் கொண்ட கல் வட்டங்கள் ஆகிய கட்டமைப்புகள் இவற்றுள் அடங்கும். மனித உயிர்க்காப்பின் நினைவுச்சின்னங்களான இவைகள் பழங்கால கலாச்சாரம் என்று அறியப்பட்ட இயல்பான குணநலன்களை இன்றைய மக்களுக்கு எளிதாகப் புரியச்செய்பவை. மனிதரின் தொழில்நுட்ப வளர்ச்சியில், கற்காலத்தில், பழைய கற்காலத்துக்கும், புதிய கற்காலத்துக்கும் இடைப்பட்ட காலகட்டத்தைக் குறிக்கும் இடைக்கற்காலத்திலிருந்து ஆரம்பகால வரலாற்று காலத்திற்கு (கி.மு.2500 முதல் கி.பி. 200 வரை) இட்டுச் செல்லும் வழமை உலகம் முழுவதிலும் நீடித்தன. இந்தியாவில், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கற்காலத்தின் (கி.மு. 1500 முதல் கி.மு. 500 முதல் 1500 வரை) பெருங்கற்படைகள் நினைவுச் சின்னங்களை பெருமளவில் கண்டுபிடித்துள்ளனர்.




பெருங்கற்படைக்கால மக்கள் தங்கள் சமூகத்தின் பிரபலமான மக்களுக்கும், படைத்தளபதிகள், சிற்றரசர்கள், சமூக நலனிற்காக உயிர்த்தியாகம் செய்தவர்கள் போன்றோருக்காக நினைவுச்சின்னத்துடன் கூடிய புதைகுழிகளை நிறுவியுள்ளனர். கற்பதுக்கை சங்க காலம் என்பது கி.மு. ஐந்தாம் நூற்றாண்டு முதல் கி.பி.மூன்றாம் நூற்றாண்டுவரை எனத் தொல்லியல் ஆய்வுகளால் நிரூபிக்கப்பட்டுள்ள. சங்க காலத்தில் தமிழகத்தில் பல போர்கள் நடைபெற்றிருக்கின்றன என்பதை அக்கால இலக்கியங்கள் மூலம் அறிகின்றோம். அப்போர்களில் பலர் வீரமரணம் அடைந்தனர். அவர்களைப் புதைத்த இடங்கள் ‘பதுக்கை’ எனப்பட்டன. இதைப் பெருங்கற்காலப் பண்பாடு என்றும் கூறுவர்.
பதுக்கையில் கல் நடல் அல்லது அந்தப் பதுக்கைகள் மீது கல்நட்டு அதில் அவர்கள் உருவத்தைச் செதுக்கி, அவற்றில் அவ்வீரர்களின் பெருமைகளையும், பெயரையும் பொறித்து வைத்தனர். வீரர் நினைவாக நட்டகல் என்பதால் அது நடுகல் எனப்பட்டது.
இதுபோன்ற ஒரு பெருங்கற்கால சின்னம் ஈரோடு மாவட்டம் நம்பியூர் அருகே வேம்மாண்டம்பாளையத்தை அடுத்து உள்ள மங்கரசுவளையபாளையத்தில் காணப்படுகிறது. இங்கு வரலாற்று ஆய்வாளர் முடியரசு தலைமையில் சேவூர் தனிப்பிரிவுக் காவலர் வெள்ளியங்கிரி மற்றும் சமூக ஆர்வலர் ஆனந்தன் ஆகியோர் ஆய்வு செய்துள்ள இதைத் தூக்கிவெச்சான் பாறை என்று கூறுகின்றனர்.

No comments:

Post a Comment