Friday, August 30, 2013

அமைதிக்கான விடியல்!


பவள சங்கரி




மழலை உலகினுள் கபடமற்ற 
மலராய் நுழைந்து மாசற்ற
அன்பைப் பனியாய் பொழிந்து
நேசமெனும் தணலில் காய்ந்து
கதகதப்பாய் கவலையின்றி
கற்கண்டாய் மொழிகள் பலப்பேசி
செவ்விதழ் மலர செழுங்கரும்பாய்
வெள்ளைப்பூக்களின் தேனிசை முழங்க
கவின்மிகு கற்பனைத்தேரில்
கலந்தே கவிபாடி கசிந்து மனமுறுகி
செங்கதிரோனின் பாசக்கரங்கள்
பற்றற்று பற்றிக்கொள்ள பாந்தமாய்
பசுமையாய் பரவசமாய் மலர்ந்தது
எம்காலைப்பொழுது!




படத்திற்கு நன்றி:

Thursday, August 29, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (25)


பவள சங்கரி

முழுமையாக அந்த நொடியில் வாழுங்கள்!!
“அந்த நொடியில் மகிழ்ச்சியாக இருங்கள், அது போதும். நமக்குத் தேவையானதெல்லாம் அந்த ஒவ்வொரு நொடி மட்டும்தான், அதற்கு மேல் இல்லை”
அன்னை தெரசா
images 5முதல் முறையாக என் அமெரிக்கப் பயணம். நடு இரவில் வீடு வந்து சேருகிறோம். நடுங்கச் செய்யும் கடுமையான குளிர். கும்மிருட்டு. இலையுதிர் காலப்பருவம். கம்பளிக்குள் நுழைந்துகொண்டு சுருண்டு விட்டாலும், காலையில் எழுந்து வெளியே வந்து பார்த்தபோது என் கண்களையே நம்ப முடியாத அளவிற்கு திரும்பிய புறமெல்லாம் தரை முழுவதும் செவ்வாடை போர்த்தது போன்ற அழகிய வண்ண இலைகள். நிமிர்ந்து பார்த்தால் மரங்களிலும் அதே அழகுக் காட்சி. எதிர்பார்க்காத இந்த அழகின் உச்சத்தில் அசந்துபோய் நின்றிருந்தேன். நடைபாதை முழுவதும் பட்டுக்கம்பளம் விரித்தது போன்று மெத்தென்ற இலைகளின் குவிப்பு. ஏதோ புதியதோர் உலகில் நுழைந்துவிட்டது போன்றதொரு பரபரப்பு. உலகமே மொத்தமாக உயிருடன் விழித்துக்கொண்டது போல ஒரு தோற்றம். என் மன உணர்வுகள் அத்தனையும் ஒருசேர விழிப்புணர்வு பெற்றிருந்தது. சூழ்நிலைகளைப் பற்றிய தெளிவான விழிப்புடன் இருந்தது மனது – நம்முடைய அன்றாட வாழ்க்கையில் உணர்வுப்பூர்வமாக பாதிக்கக்கூடிய நிகழ்வுகளை மன நிறைவுடன் எதிர்கொள்வதற்கான பயிற்சியும் இதனை ஒத்ததுதான். ஏதோ ஒரு வகையில் மறைந்திருக்கும் விரும்பத்தகாத எண்ணங்கள் அல்லது அச்சப்படக்கூடியதோ, வெட்கப்படக்கூடியதோ, சங்கடப்படச்செய்வதோ அல்லது ஏற்றுக்கொள்ளவோ, சமாளிக்கவோ முடியாமல் போகக்கூடியதோ போன்ற சந்தர்ப்பங்களில், முழுமையான விழிப்புணர்வுடன் செயல்படுவதால் அது நம்மை அதன் விளிம்பில் கொண்டு நிறுத்திவிடும் என்றாலும் அந்த மாற்றம் நம்மை பயமுறுத்தவோ, சிரமப்படுத்தவோ அல்லது வேதனைப்படுத்தக்கூடிய வகையிலோ இல்லாமல், அந்தச் சூழலின் நிதர்சனத்தை யதார்த்தமாக ஏற்றுக்கொள்ளும் வகையில் இலகுவாக்கிவிடும். முழு மனதுடன் ஏற்றுக்கொள்ளவும் மனம் சம்மதிக்கும். இதனால் அதற்கான தீர்வும் தெளிவாகிவிடும். சுருங்கச் சொன்னால் அது சுகமான அனுபவமோ அல்லது சுமையான அனுபவமோ இரண்டையும் ஒன்று போல உணரும் உன்னதமான ஞானம் பெறுவோம்!

Tuesday, August 27, 2013

கடமையைச் செய்! பலனை எதிர்பாராதே!


பவள சங்கரி




தேவையற்ற கசதியில் உழன்று திரிவது
தேர்ந்த ஞானம் கொண்டோரின் செயலல்ல

முக்காலத்தும் இல்லாததொன்றின் இருப்பு 
எக்காலத்தும் இல்லை என்பதே சத்தியம்

புலன்களுக்கு அகப்படாத ஒன்று இல்லாததொன்றாகுமா?
நித்தியமான, நிரந்தரமானதொன்று ஆன்மா மட்டும்தானே!

அழிவதெல்லாம் இரத்தமும் சதையும் உள்ள உடல்தானே
 அழியாத நித்தியமாய் வாழும் ஞாதிருவை அழிக்க எவருளர்?

சுயதருமமும் உன் சுபாவமும் உரைப்பதில் குறைவிருந்தாலும்
கடமையில் தவறாமல் இருப்பதே தர்மம் இல்லையா?

பிறிதொருவருடைய கடமையை ஏற்று செம்மையாய்ச் செயலாற்றினாலும்
தம் கடமையில் தவறாது அதனைக் கண்ணெனப் போற்றுதல் வேண்டுமே

அக்கினி கக்கும் புகை போல எச்செய்கையிலும் ஏதேனுமொரு
குறையும், பகையும் இருக்கத்தானே செய்கிறது!

சுபாவத்தினால் விதிக்கப்பட்ட கடமையைச் சலியாமல்
சுவையாகக் கடைபிடிப்பவனே  பாவமறியாதவன்!

படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://www.alaikal.com/news/wp-content/uploads/kuruna-geta.jpg&imgrefurl=http://www.alaikal.com/news/?p%3D59120&h=338&w=450&sz=99&tbnid=SCnPRmaj7hEO3M:&tbnh=90&tbnw=120&zoom=1&usg=__XOA-ztMbBMvfwSV75Xo1-aSI4iM=&docid=ZlUegG_G5yfxNM&sa=X&ei=GXUcUoqAPIX_rAenxoH4AQ&ved=0CEAQ9QEwAw&dur=129#imgdii=SCnPRmaj7hEO3M%3A%3BW5FPsmBJ6FOdOM%3BSCnPRmaj7hEO3M%3A

Friday, August 23, 2013

ஒரு மறவனின் கட்டழகுக் காதலி!


பவள சங்கரி




இரவுநேர இவுளியின் குளம்பொலியில் 
இன்முகம் மலரத் துடித்தெழுந்தாள் கன்னியவள்
இமாலய வேந்தனின் இடியெனச் சிரிப்பொலியில்
இதமாக இன்மொழிபேசி கனிவாகக் கவிபாடி
இன்புற்றிருக்கும் வேளையில் இடைவிடாத 
இடிச்சத்தமாக இவுளிகளின் நாராசமான குளம்பொலிகள்
இரவும், இனிமையும், இதமும், இன்பமும் இறந்துபோனது.
இருளும் தனிமையும் மீண்டும் சிறைபிடிக்க
இடர்வந்து சுமையாக்க மருள்வந்து மயங்கினாள் பேதையவள்!





படத்திற்கு நன்றி:

http://www.google.co.in/imgres?imgurl=http://digital-art-gallery.com/oid/6/640x989_2525_Morning_hunting_2d_fantasy_warrior_horse_picture_image_digital_art.jpg&imgrefurl=http://digital-art-gallery.com/picture/2525&h=989&w=640&sz=300&tbnid=Vj4NzV5PpqGiHM:&tbnh=91&tbnw=59&zoom=1&usg=__casKkSKbNnLy14TuDgYctjw3YII=&docid=5fZlAkTmpbpgqM&sa=X&ei=VREYUs-XNs7irAfkpoGoCA&ved=0CEMQ9QEwBw&dur=1268

Thursday, August 22, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (24)


பவள சங்கரி
அனைத்து முக்கியமான தொழில்களைப்போலவே வெற்றியைப் பெறுவதற்குத் தடைகள் அவசியமாகிறது. வெற்றி என்பது பல்வேறு போராட்டங்கள் மற்றும் எண்ணிலடங்கா தோல்விகளின் பிறகே கிடைக்கக்கூடியது.
இருண்ட பொழுதுகளில், ஒவ்வொரு தோல்வியும் வெற்றியை நோக்கிய அடுத்த படி, போலி எது என கண்டறியப்படும் ஒவ்வொன்றும் உண்மையை நோக்கி வழிநடத்துகிறது, எந்த ஒரு தடையும் ஒரு நாள் மறைந்தேவிடும் அதே வேளையில் அமைதியும் நிறைவுமான பாதைக்கு வழிநடத்தும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். 
ஓக் மேண்டினோ
 ogmandino164003
‘ரிஸ்க் எடுக்குறதுன்னா எனக்கு ரஸ்க் சாப்பிடற மாதிரி’

Friday, August 16, 2013

வெற்றிக் கனியை எட்டிப் பறிப்போமா! (23)


பவள சங்கரி
tumblr_lxsk8jNp831qfwg0ho1_500
குணப்படுத்தும் வல்லமையாளராவோம்!
பல நேரங்களில் நம்மை அனைவரும் தாங்கிப் பிடிக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம். நம்மோடு பழகுபவர்கள் நமக்கு பாதுகாப்பு உணர்வை ஏற்படுத்துபவர்களாகவும், அன்பைப் பொழிபவர்களாகவும் இருக்க வேண்டும் என்று ஏங்குகிறோம். ஆனால் யதார்த்த வாழ்க்கையில் இது எந்த அளவிற்கு சாத்தியமாகும் என்று சிந்திக்க வேண்டும். ஒன்று கொடுத்தால்தான் ஒன்றைப் பெற முடியும். அந்த வகையில் ஒருவருக்குத் தேவையான நேரத்தில் நம் உதவிக்கரங்களை நீட்டவும் தயங்கக்கூடாது. எந்த அளவிற்கு அடுத்தவரின் நம்பிக்கைக்கு உரியவராக நடந்துகொள்ள முடிகிறதோ, அந்த அளவிற்கே அவரும் நம்மீது நம்பிக்கை கொள்ள முடியும். இதற்காக நாம் பெரிய தியாகியாகவோ அல்லது அவரைவிட அறிவிலும், மனோவலிமையிலும் உயர்ந்து இருப்பவராகவோ அல்லது இருப்பதாக நடிப்பவராகவோ இருக்க வேண்டியத் தேவையோ இல்லை. ஆனால் அதற்காகச் சில குறுக்கு வழி முறைகளைப் பின்பற்றுவதுதான் மிகவும் சங்கடப்படுத்தக் கூடியதொரு செயலாகிவிடும். பொதுவாகவே, மனக்குழப்பத்திலோ அல்லது பிரச்சனைகளிலோ இருப்பவர்களுக்கு அறிவுரை சொல்வதைக்காட்டிலும், அவர்களுடைய பிரச்சனைகளுக்கு பொறுமையுடன், சிறிது செவி கொடுத்தால் போதும். மனபாரம் குறைந்து ஆறுதல் பெற முடியும். அத்தோடு இல்லாமல் தன்னுடைய வாழ்க்கையின் ஒரு மிக முக்கியமான நபராகவும் நினைக்கக்கூடும். தனக்காக எதுவும் செய்யக்கூடியவர் என்ற நம்பிக்கையுடன் நிம்மதி கொள்ளமுடியும்.

Thursday, August 15, 2013

பாட்டி சொன்ன கதைகள்! (14)


பவள சங்கரி
ஹாய் குட்டீஸ் நலமா?

இனிய சுதந்திர தின நல்வாழ்த்துக்கள்!

எல்லோரும் பள்ளிக்குச் சென்று கொடியேற்றி கொண்டாடிவிட்டு வந்தீர்களா? பள்ளியில் இனிப்பு வழங்கி மகிழ்வித்திருப்பார்களே? இன்றைய நந்நாளில் ‘கொடி காத்த குமரன்’ என்ற திருப்பூர் குமரன் பற்றி தெரிந்து கொள்ளலாமா?
animated tirupur kumaranஈரோடு நகரத்தை அடுத்த சென்னிமலை என்னும் பகுதியில் ஒரு தறி நெய்யும் சாதாரண குடும்பத்தில் பிறந்தவர் குமாரசாமி. இவர்தான் பின்னாளில் நம் இந்திய நாட்டிற்காக தன்னுடைய இன்னுயிரையேக் கொடுத்த தியாகி ‘கொடி காத்த குமரன்’ ஆனார். கைத்தறி துணி நெசவிற்கு பேர்போனது சென்னிமலை. இங்கு 1904ம் ஆண்டு, அக்டோபர் மாதம், நாச்சிமுத்து முதலியார், கருப்பாயி அம்மாள் தம்பதியினருக்கு மகனாகப் பிறந்தவர், குமாரசாமி. மிக ஏழ்மையான நெசவாளிக் குடும்பம் இவர்களுடையது. ஐந்தாம் வகுப்பு வரை மட்டுமே தம் பள்ளிப்படிப்பைத் தொடர முடிந்தது இவரால். அதன் பின் பள்ளிப்பாளையத்தில் தன் தாய்மாமன் வீட்டில் தங்கி தங்கள் குலத்தொழிலான, நெசவுத் தொழிலை கவனித்துக் கொண்டிருந்தார். போக்குவரத்து வசதிகள் இல்லாத காலம் அது. ஈரோடு வந்து நூல் வாங்கிக் கொண்டுவந்து, பள்ளிப்பாளையத்தில் தறியில் துணியாக நெய்து, மீண்டும் அதை தலையில் சுமந்து கொண்டு கால்நடையாகவோ அல்லது மாட்டு வண்டியிலோ ஈரோடு கொண்டுவந்து விற்றுச் சென்று பிழைப்பு நடத்தினார். ஐந்து ஆண்டுகள் போராட்டத்திற்குப் பின்னும், இதில் போதிய வருமானம் இல்லாதலால் குடும்பத்துடன் திருப்பூருக்குக் குடிபெயர்ந்தனர். அங்கு ஒரு தரகு மண்டியில் கணக்கு எழுதும் வேலையும், பஞ்சு மண்டியில் எடை போடும் வேலையும் செய்து கொண்டிருந்தார். ஐந்து முறை திருப்பூர் வந்திருந்த காந்தியடிகளால் அவருடைய கதர் இயக்கம் மக்கள் மத்தியில் பெரும் ஈடுபாட்டை ஏற்படுத்தியது. பலரும் அதில் இணைந்து பணியாற்றினர். குமாரசாமிக்கும் இந்த இயக்கத்தில் மிகுந்த ஈடுபாடு ஏற்பட்டது. தானும் கதர் ஆடையும், கதர்க் குல்லாயும் அணிந்து கொண்டு தீவிர தேசபக்தரானார்.