Saturday, October 12, 2013

மயான சயனியே! மாசாணியே போற்றி! போற்றி!


பவள சங்கரி



மலரென உதித்து மலையென உயர்ந்து தீயெனக் கொதித்து
மதியெலாம் நிறைந்து மயானத்தில் உறைந்து மாசில்லாத
மயான சயனியாய் மாசாணியாய் உப்பாற்றங்கரையில்
மங்கலநாயகியாய் மகிழ்ந்தருளும் மகிசாசுரமர்த்தனியே! போற்றி!

வான்நோக்கிய கரமிரண்டும் மலர்மஞ்சளுடன் மங்கலமாய்
மண்நோக்கிய கரமிரண்டும் சூலமும் முரசும் அரவமுடன் 
மண்டையோடும் தாங்கி தவிப்போருக்கு அபயம் அளிக்கும் 
வற்றாத சீவநதியாய் வரமளிக்கும் வடிவுடை நாயகியே போற்றி!

தீதும் குறையும் குறிப்பறிந்து களையும் கற்பகவல்லித்தாயே
இழப்பும் தொல்லையும் தொலைதூரம் ஓடச்செய்யும் நீதியரசியே
மிளகாய்விழுதின் வீச்சில் விரோதமும் வீழ்ந்துபோகச்செய்தே
தணலாய் காய்ந்து தகர்த்தெரியும் தாட்சாயணி அன்னையே போற்றி!

மயானத்தில் பூசையிட்ட இராமனுக்கு ஆசிகூறி அருளிய அபிராமியன்னையே
கடனாச்சி மலைதனில் முனியவனின் யாகத்திற்கு ஊறுவிளைவித்தானை
தடகாசுரனை அழிக்க இராம இலக்குவனுக்கு வரமளித்த பராசக்தி அன்னையே
குதூகலமாய் குண்டமிதிவிழாவில் களித்திருக்கும் காத்தியாயினி அன்னையே போற்றி! போற்றி!

2 comments:

  1. ஹரி ஓம் ஆதி பராசக்தி...
    ஓம் மாசாணி அம்மனே சரணம்...

    ReplyDelete
  2. //குதூகலமாய் குண்டமிதிவிழாவில் களித்திருக்கும் காத்தியாயினி அன்னையே போற்றி! போற்றி!//

    புதுமையான படத்துடன் அருமையான பாடல். பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    ReplyDelete