Thursday, May 8, 2014

அனிச்ச மலரே!



பவள சங்கரி




அனிச்ச மலரே
தொட்டால் சிணுங்கியாகிறாய்
அழகு வண்ணம் காட்டி
வலை வீசிமகிழ்கிறாய்
குயிலின் குரலைத் தாங்கி
தலையசைக்கச் செய்கிறாய்
மயிலின் ஒயிலாய் வலம்வந்து
வாஞ்சை சேர்க்கிறாய்
வறண்ட பூமியில் பசுமையாய்
வளமை சேர்க்கிறாய்
இருண்ட வானில் இனிமையாய்
ஒளி பாய்ச்சுகிறாய்
திரண்ட மேகமாய் சீர்தூக்கி
குளிரச் செய்கிறாய்
வளியின் வீச்சிலும் நிமிர்ந்துநின்று
ஆண்மை காக்கிறாய்
எலியின் நக்கலையும் துச்சமாக்கி
துணிந்து நிற்கிறாய்
வீண்பழியின் பரிசையும்  வீசியெறிந்து
பட்டொளிவீசி நிற்கிறாய்
வான்மழையாய் வரமளித்து வாடும்பயிரை
காத்து நிற்கிறாய்
கனியின் கற்கண்டுச் சுவையாய்
மாறி நிற்கின்றாய்
சூடிய நிலவின் சூட்சுமத்தையறிந்து
தேவதூதனாய் ஆகிறாய்
பாடும் பறவையின் பாசமறிந்து
நேசம் கொள்கிறாய்
வீழ்த்தும் வித்தையை விலக்கியடித்து
வீறுகொண்டு எழுகிறாய்
சிலந்தி வலையில் சிக்காமல்
சிற்பமாய் நிற்கிறாய்
புன்னகையெனும் கிரீடம் சூடி
பொறுமையின் சிகரமாகிறாய்
பூந்தளிரின் மனம் கொண்ட பூமகனாய்
பூவுலகம் வாழச்செய்கிறாய்
நாடும் வீடும் நலம்பெறவே
பாடும் கவியே வரமருளே!!!

4 comments: