Wednesday, February 2, 2011

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள்: ஓர் அலசல் - பகுதி - 1.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்கள்: ஓர் அலசல்


என்றும் இருக்க உளங்கொண்டாய்!
இன்பத் தமிழுக் கிலக்கியமாய்:
இன்றும் இருத்தல் செய்கின்றாய்!
இறவாத் தமிழோ டிருப்பாய்நீ!
ஒன்று பொருளஃ தின்பமென
உணர்ந்தாய் தாயு மானவனே!
நின்ற பரத்து மாத்திரமோ?
நில்லா இகத்தும் நிற்பாய்நீ!

தமிழ் கூறும் நல்லுலகோருக்கு!

வணக்கம். ஓர் படைப்பிலக்கியம் என்பது, அடிப்படையில் ஓர் மூலக் கருத்தைக் கொண்டிருந்தாலும் அதனை எடுத்தாள்பவர்களின் போக்கிற்கிணங்க, பல்வேறு பரிமாணங்களைப் பெறுவதும் நிதர்சனமாகிறது. அந்த வகையில், சுமார் 1500 ஆண்டுகளுக்கு முன்பு ஆழ்வார்கள் இயற்றிய பாசுரங்கள் இன்றளவும் இரசிக்கத்தக்கதாய் இருப்பதே நித்யமான தமிழன்னையின் இனிமை மற்றும் இளமைக்குச் சான்றாகிறது.

எழுத்தாளர் திரு நா.கண்ணன் அவர்கள் ஆழ்வார்களின் பாசுரங்களை அடிப்படையாகக் கொண்டு 108 மடல்களாக தொகுத்துள்ளார்கள்.

இருபதாம் நூற்றாண்டின் பரிணாமவியல் விதியின்படி, வேற்றுமை விரிந்து இருக்கும் போதுதான் உயிர்த் தொடர்ச்சி காலத்தை வெல்கிறது என்றும், இந்திய மெய்யியல் இன்றளவும் காலத்தை வென்று நிற்பதற்கு அதன் பல நோக்கு அணுகுமுறைதான் காரணம் என்றும் கூறுகிறார் ஆசிரியர். இந்த பன்னோக்கு அணுகுமுறையைத் தான் தன்னுடைய பாசுர மடல்களாக வடித்துள்ளார் ஆசிரியர். கருத்தாழமிக்க இப் பாசுரங்கள் நயமாக எடுத்துரைக்கப் பட்டிருந்தாலும், ஆழ்ந்து சிந்திக்க வேண்டிய பல பகுதிகள், தமிழறிஞர்களின் பார்வைகளில் மூலம் மேலும் பல பரிமாணங்களைக் காணக்கூடுமே என்ற ஆவலும் மிகுதியாவதன் காரணமே இதனை படித்தான் படித்துரையில் யான் எடுத்துக் கொண்டதன் நோக்கம். தயை கூர்ந்து தமிழறிஞர்கள் இதனைத் தொடர்ந்து படித்து மகிழ்வுறுமாறு வேண்டிக் கொள்கிறேன். நன்றி

.
அடியார்கள் வாழ, அரங்க நகர் வாழ
சடகோபன் தண் தமிழ் நூல் வாழ-கடல் சூழ்ந்த
மண்ணுலகம் வாழ மணவாள மாமுனியே
இன்னுமோர் நூற்றாண்டு இரும்.


பாசுரங்கள், நாம் பன்முறை கேட்டு இன்புற்ற ஒன்றுதான் என்றாலும், ஆழ்வார்கள் முதன் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வு, ஒரு சுவாரசியமான கதையன்றோ. ஒருவர் கிடக்க, இருவர் இருக்க, மூவர் நிற்க எனும் அந்த அழகிய பழம் புராணக் கதையை ஆசிரியர்
“ஆழ்வார்கள் முதலில் தமிழகத்திற்கு அறிமுகமாகும் நிகழ்வே மனிதநேயம் மிக்க செய்தியாக அமைகிறது.”, என்று வர்ணித்திருப்பது மூலம் அவர்தம் பாசுரமடல்களின் போக்கின் திசையை ஆரம்பத்திலேயே தெளிவாக்கிவிடுகிறார்.

1300 ஆண்டுகளுக்கு முன்பு இயற்றப்பட்ட பாசுரங்களின் நிகழ்வுகள் உண்மையா, புனைவா என்ற தேவையில்லாத வாதத்தை விட்டு, தற்காலத்திற்கேற்றவாரு அதன் மூலம் பயன்பெறும் தந்திரம் அறிந்துள்ளார்.

’ஒண்டவந்த பிடாரி ஊர்பிடாரியை துரத்திய கதையாக’, என்று பழைய பழமொழி கொண்டு, பகிர்தல் தரும் இன்பம் குறித்து மிக யதார்த்தமான இன்றைய வாழ்வியல் சூழல்கள் கொண்டு விளக்கியிருப்பது சிறப்பு.

இவர் இறைவனை எளிதாக அடையும் மார்க்கம், கீதையில் கண்ணன் காட்டிய கர்ம யோகத்திற்கு ஒத்ததாகவே உள்ளது.

பாயிரம் வாயிலாக தமிழ் மறுமலர்ச்சி என்ற தலைப்பில்,
”பொய்கையின் முதல் பவாவைப்பாருங்கள். உலகை ஒரு அகல் (விளக்காகக்) கொண்டு, வார் கடலை நெய்யாக இட்டு, வெய்ய கதிரோனை விளக்காக வைத்து பிரபஞ்ச கர்த்தாவைப் பார்க்கிறார். "அப்பாலுக்கு அப்பாலாய்" உள்ள இறைமையை அப்படிப் பார்த்தால்தான் தெரியும் போலும்! இல்லை அவன் பிரம்மாண்டத்தை உணர, அப்படியொரு பெரிய விளக்கு வேண்டும் போலுள்ளது! இவர் நோக்கில் அறிவு உரத்த சிந்தனை (அதாவது ஞான மார்க்கம்) இருக்கிறது.” - அறிவியலையும் ஆன்மீகத்தையும் அற்புதமாக இணைத்திருக்கிறார் ஆசிரியர்.

’ஸ்ரீ’ என்ற சொல்லிற்கும் ‘ திரு’ என்ற சொல்லிற்கும் பொருளை வெகு நேர்த்தியாக விளக்கிய பாங்கு, பூனைக்கும் சோறு - பாலுக்கும் காவல்!

சமண, பௌத்த மற்றும் ஜென் மதங்களையும் ஒப்பிட்டு, வரலாற்றுத் தகவல்களையும் வழங்கத் தவறவில்லை இந்த பன்முக நாயகர்.

ஆழ்வார்கள் அருளிய மங்களாசாசனம் மற்றும் நாயன்மார்கள் அருளிய பாடல்களையும் அழகுற ஒப்பிட்டு, ஹரியும், சிவனும் ஒன்றே என்பதையும்,

”இடதுபுறம் திருமால், திருத்துழாய் (துளசி). துகிலாடை (பீதாம்பரம்), சுடராழி (சக்கரம்), கரிதால் (கரிய நிறத்தவனான கண்ணன்); வலது சேது (சிவப்பான சிவன்), கொன்றை, புலித்தோல், மான் இரண்டுருவும் ஒன்றாய் இசைந்து..... ” என்ற சேரமான் பெருமாள் நாயனாரின் பொன்வண்ணத்தந்தாதி என்னும் பாடல் மூலம் தெளிவுபடுத்தியது அருமை.

பொதுவாக ஆழ்வார்கள், நாயன்மார்கள் போன்ற மகான்களின் வாக்கை அருளியதாகவே சொல்வது மரபு. அதற்கான ஆசிரியரின் வியாக்கியானம் வரவேற்கத்தக்கது.

”வேதாந்தம் என்பதற்கு வேதத்தின் அந்தம் என்று ஒரு பொருள் கொள்ளலாம். வேதம் என்பதை கல்வி-கேள்வி என்று கொண்டால் அது முடியும் பொது இறைவன் வருகிறான். அதாவது கல்வி- கேள்வி என்று இருக்கும் வரை நாம் "தெரிந்த" என்ற ஒரு குறையுள்ள (நிறைவு பெற முடியாத -கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு) நிலப்பரப்பில் நிற்கிறோம். நம் கல்வி-கேள்வி, பட்டம், பதவி இவையெல்லாம் "நான்" என்பதற்குள் அடக்கம். "நான்" அடங்கி, தெரிந்த நிலப்பரப்பபை விட்டு அகலும் பொது இறைமை ஆட்கொள்ளுகிறது (அதாவது உருவகமாச் சொன்னால்-வேங்கடம் வீடாகிறது)” - என்ற ஆசிரியரின் விளக்கம் தேர்ந்த ஞானமுள்ளவையாக இருப்பது இயல்பு.

” விதையாக நற்றமிழை வித்திட்டாய்.” - என்ற அழகிய தலைப்பில், மொழியின் ஆதியும், அந்தமும் திறம்பட ஆய்ந்தளித்திருக்கிறார், ஆசிரியர், திருமழிசை ஆழ்வாரின் பாசுரத்தின் ஆதாரம் கொண்டு.

கதவு மனம் என்றும் காணலாம் என்றும்
குதையும் வினையாவி தீர்ந்தேன் விதையாக
நற்றமிழை வித்தியென் உள்ளத்தை நீ விளைவித்தாய்
கற்ற மொழியாகிக் கலந்து , என்ற பாசுரம் மூலம் ஆழ்வார்கள் தமிழ் மொழி பால் கொண்ட காதலை நயம்பட விளக்கியுள்ளார்.

ஆன்மீக வளர்ச்சி சீராக அமைய, மனம் ஒருநிலைப்பட்டு இருக்க வேண்டும் என்பதையும் வாசகருக்கு எளிதாக புரியும் வண்ணம் அமைத்திருப்பது சிறப்பு.

”இந்த ஒரு பாடலை ஆரம்பமாக வைத்துத்தான் ஆழ்வார்கள் தமிழ் (திராவிட) வேதத்தை படைக்கின்றனர் என்பது என் ஊகம். வேதம் சொல்லும் மொழி உயர் தனிச் செம்மொழியாக இருக்க வேண்டும். ஆழ்வார்கள் தமிழால் அது முடியும் என்று செய்து காட்டினர். வேதத்தின் சாரமாக மட்டுமில்லை, வேத உபநிஷத்துக்களுக்கும் விளக்கம் தேடி பாசுரங்களுக்கு வரும் நிலையை உருவாக்கினர் ஆழ்வார்கள். இவர்கள் செய்வித்தது ஞானத்தமிழ்” என்று, தன்னுடைய ஊகத்தையும், தெளிவாக்கியிருக்கிறார் இவர்.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்களின் தனிச்சிறப்பே அதன் தலைப்புக்கள் தான்.

ஆழ்வார்கள் கி.பி. 7ம்நூற்றாண்டின் பிற்பகுதி அல்லது 8ம் நூற்றாண்டின் முற்பகுதியில் வாழ்ந்திருக்கக் கூடும் என்பது போன்ற வரலாற்றுப் பின்னனித் தகவல்களும் அளித்திருப்பதால், சமூக ஆர்வலர்களுக்கும் இம்மடல் பயன் தர வல்லதாக அமைந்திருக்கிறது எனலாம்.

”இப்படி "ஊழி தோறும் தன்னுள்ளே படைத்து, காத்து, கெடுத்து உழலும்" ஒன்றை வார்த்தைகளால் பிடிக்க முடியுமா? என்பது அடுத்த கேள்வி. அன்றைய ரிஷிகளிலிருந்து, இன்றைய ஜே.கிருஷ்ணமுர்த்திவரை இதைசொல்லி களைத்து இருக்கிறார்களே தவிர உண்மையையாய் " சொல்ல" முடியவில்லை! "சொல்லினால் சுருங்க நின் குணங்கள் சொல்ல யார் வல்லரே?" என திருமழிசை கேட்பது சரிதான்!” - ஆசிரியரின் ஆழ்ந்த தத்துவ ஞானங்கள் விளங்கச் செய்கிறது.

ஆழ்வார்களின் ஆழ்ந்த பக்தி நெறியை, கி.மு. 400 - 200 க்கும் இடைப்பட்ட காலத்தில் எழுந்த சங்ககால இலக்கிய மரபைத் துணை கொண்டு, மனித உறவுகளின் பசலை நோயுடன், ஒப்பு நோக்கி, வாசகரை பல்வேறு தளத்திற்கு அழைத்துச் செல்வதிலும் வெற்றி கண்டிருக்கிறார், இந்த வித்தகர்.

” சோணியோ, தொத்தலோ எல்லோருக்கும் காதல் வருகிறது!! எதாவதொரு சமயத்தில் காதல் வசப்பட்டு உருகுகிறார்கள். இது அடிப்படை! காதல் உணர்வு மனிதனை தளிர்ப்பிக்கும் உணர்வு. காதல் கொண்ட மக்களின் முகத்தைப்பார்த்தாலே ஒரு "பொலிவு" தெரியும்” - இப்படி வெகு யதார்த்தமான நடையில், அத்தோடு நில்லாமல் பாரதியையும் துணைக்கழைத்துக் கொண்டு, ஆழ்வாரின் அன்பை உணரச் செய்திருப்பது பாராட்டத்தக்க வகையில் அமைந்துள்ளது.

சாதிகள் இல்லையடி பாப்பா என்ற தலைப்பில், சங்க கால இலக்கியங்களையும், சாதி வேறுபாட்டையும்,முகம்மதிய, ஆங்கிலேய ஆட்சிக்காலத்தின் பிறகு வந்த மாற்றங்கள் போன்றவற்றை பல உன்னத உதாரணங்கள் மூலம் உணரச் செய்திருப்பது வாசகருக்கு, பல்வேறு வரலாற்றுத்தகவல்கள் அறிந்து கொண்ட திருப்தியையும் ஏற்படுத்தக் கூடியதாகவும் அமைந்துள்ளது நிதர்சனம்.

பக்தி இயக்கத்தின் முக்கிய நோக்கு ரசனை, அழகுணர்ச்சி.........இப்படி இளைஞர்களயும் பக்தி மார்கத்தில் கொண்டு செலுத்தும் உபாயமும் கையாளப் பட்டிருக்கிறது..............

“ஆணாதிக்க சமுதாயத்தில் பிறந்து வளர்ந்த ஆண்டாள் ஆணாதிக்கத்திற்கு கொடுக்கும் சவுக்கடி, "அட பொடியன்களா! நீங்கள் எல்லாம் எனக்கு சமமா! உயர் பொருளான கண்ணன் அல்லவோ எனக்கு சரி சமம்" அவளது கால கட்டத்தை நினைத்துப் பார்த்தால் இது மாபெரும் புரட்சிகரமான போக்கு. இப்போது கூட, அடிமைப்பட்டிருக்கும் இந்திய பெண்ணிற்கு ஆண்டாளின் தைர்யத்தில் கால் பங்கு இருந்தால் கூட பாரதி சொல்லும் புதுமைப் பெண் வந்து நிற்பாள்.” - எப்படி புரட்சிகரமாக கொண்டு செல்கிறார், பாருங்கள். மனம் இருந்தால் மார்கமுண்டு என்பதை சத்தியமாக்கும் பகுதி இது...........

ஆழ்வார்களின் அழகுணர்ச்சி மெய்சிலிர்க்கச் செய்வதாக உள்ளதும் நிதர்சனம்.

ஆழ்வார்க்கடியானின் பாசுரமடல்களின் முழுமையான சுவையை அனுபவிக்க விரும்பினால், கீழ்கண்ட சுட்டியைச் சொடுக்கி உள்ளே சென்றால், புதியதோர் உலகானுபவம் பெறலாம் என்பதும் நிதர்சனம்.


Monday, January 31, 2011

காவிரிக்கரையிலிருந்து கங்கை வரை - பகுதி - 1`.


”தெற்கின் கங்கை” , என்று அழைக்கப்படுகிற புனிதமான காவிரி இந்துக்களின் புனிதமான நதிகளின் முக்கியப் பங்கு வகிக்கக் கூடிய ஒன்றாகும். இந்துக்களின் புராணக் கதையின்படி பிரம்மகிரி மலையில் வாழ்ந்து வந்த கவேரா முனி, குழந்தை வரம் வேண்டி பிரம்மதேவனை வழிபட கவேரா முனியின் குழந்தையாக காவேரி என்ற பெயரில் பூமியில் அவதரிக்கிறாள். பிற்காலத்தில், அகத்திய மாமுனிவரை மணந்து அவரால் தன் கமண்டலத்தில் அடைக்கப் பட்டபோது, நாடு கடுமையான வறட்சியின் பிடியில் சிக்கித் தவிக்கும் வேளையில், கணேசப் பெருமான் காக்கை உருவில் வந்து அந்த கமண்டலத்தைத் தட்டிவிட்டு காவிரியைப் பாயச் செய்து நாட்டைக் காப்பாற்றியதாக புராணக் கதைகளும் உண்டு.

சோழ மன்னர்களால் கட்டப்பட்ட பல பிரம்மாண்டமானக் கோவில்கள், விஜய நகர மற்றும் மராத்திய மன்னர்களால் புதுப்பிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வந்த பெரும்பாலான கோவில்கள் காவிரி நதிக் கரையிலேயே அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும். ஆழ்வார்களாலும், பாடப் பெற்ற பெரும்பாலான வைணவ திவ்ய தேசத் தலங்களும், அப்பர், சுந்தரர், சம்பந்தர் ஆகிய மூவராலும் பாடப் பெற்ற தலங்களும் காவிரிக் கரையினிலேயே அமைந்திருப்பதும் தனிச் சிறப்பு.

மிகப் புனிதமாகக் கருதப்படும் காவிரி அன்னை நம் கர்மங்களையும், துன்பங்களையும் வேதனைகளையும் களைந்து மன நிம்மதியை அருளச் செய்கிறாள் என்பது காலங்காலமாக நம்பப்பட்டு வரும் பேருண்மையாகும்.


இக்காவிரி நதி, தமிழ்நாட்டில், கிருட்டிணகிரி வழியாக, ஒகேனக்கல் போன்ற அழகான நீர் வீழ்ச்சிகளையும் சுமந்து கொண்டு ஈரோடை வழியாக, பவானி ஆறு சங்கமத்துடன், திருச்சிராப்பள்ளியை சென்றடையும் முன் நொய்யல் மற்றும் அமராவதி ஆகிய இரு கிளைகளையும் இணைத்துக் கொள்கிறது. இங்கிருந்துதான், மணல் படுகையுடன் கூடிய அகண்ட நதியாக கிழக்கு நோக்கி பாய்கிறது. வடக்குப் பகுதி கொள்ளிடம் என்றும், தெற்குப் பகுதி காவிரி என்றும் அழைக்கப் பெற்று , கிழக்கு வழியாக நேராகத் தஞ்சை மாவட்டம் சென்று அடைகிறது. இந்த இரு நதிகளும் இணைந்து திருச்சிராப்பள்ளி அருகே, ஸ்ரீரங்கம் என்ற தீவாக அமைகிறது.

இதைக் குறிப்பிடும் போது, “ கங்கையிற் புனிதமாகிய காவிரி”, என்று திருவரங்கம் பற்றி சிறப்பித்துக் கூறும் போது கம்பர் கூறுவார்.இத்தகைய புனிதம் வாய்ந்த நதிக்கரையில் அமைந்திருக்கும் கொங்கு நாடு பல வகையிலும் சிறப்பு வாய்ந்ததாகும்.

விரைவாக வளர்ந்து வரும் இந்தியப் பெருநகரங்களின் பட்டியலில் ஈரோடை மாநகரத்திற்கும் ஒரு முக்கிய இடமுண்டு. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை மாநகரின் தென் மேற்கு திசையில் 400 கி.மீ. தொலைவில் காவேரி மற்றும் பவானி நதிக்கரையில் அமைந்துள்ளது, ஈரோடை மாநகரம் கைத்தறி, விசைத்தறி துணிகள் தயாரிப்பு மற்றும் ஆயுத்த ஆடைகள் தயாரிப்பு மட்டுமன்றி, சிறந்த வியாபாரக் கேந்திரமாகவும் விளங்கும் காரணத்தினால் இந்தியாவின் மிகச் சிறந்த ஜவுளி நகரமாகக் கருதப்படுகிறது. பருத்திச் சேலைகள், படுக்கை விரிப்புகள், லுங்கிகள், வேட்டிகள் மற்றும் துண்டுகள் இவையனைத்தும் அதிக அளவில் வியாபாரம் செய்யப் படுகிறது.அனைத்திற்கும் மேலாக உலகிலேயே மிகப் பெரிய மஞ்சள் சந்தையாக இருப்பதன் காரணமாக ‘மஞ்சள் மாநகரம்’, என்றும் அழைக்கப்படுகிறது.


மகேந்திரப் பல்லவனால் கட்டப்பட்ட மிகப் பழமையான கோவில் மகிமாலீசுவரர் திருக்கோவிலாகும். மாலி, சுமாலி என்ற இரு அசுரர்கள் வழிபட்ட தலமாதலால் இத்தலம் மகிமாலீசுரம் என்று அழைக்கப்படுகிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்த கோவிலிருந்துதான் எங்கள் ராமேசுவரப் பயணம் இனிதாகத் துவங்கியது. விடியற்காலை பிரம்ம முகூர்த்த வேளையில், ஆண்டவனின் ஆராதனைகளை முடித்துக் கொண்டு, அவனருளாலே, அவன் தாள் வணங்கி இரு பேருந்துகளில்பயணம் தொடங்கினோம். கோவில் யாத்திரைகள், சத்சங்கங்கள் இவையனைத்தும் மனித மனங்களைப் பல்வகையிலும் பக்குவப் படுத்தக் கூடிய ஒன்றாகும்.


அன்பு ஒன்றே பேரானந்தத்தை அடைவதற்குரிய ஒரே வழியாகும். நிலையில்லாததொரு உலகில் நிலையான தன்மை பெற்ற ஒரே பொருள் அன்பு மட்டுமே. காரைக்கால் அம்மையார் இறைவன் மீது கொண்ட மாறாத அன்பு போன்று. அன்பில்லாமல் இன்பம் வராது. அன்பில்லாமல் வந்த இன்பமும் நிலையாது. மானுட ஆக்கை என்பது இறைவன் கொடுத்த வரம். மனித மனம் பல சென்மங்களாக, அறியாமையாகிய, ஆணவக், கண்ம, மலங்களை சுமந்து கொண்டு இறைவன் தன்னைப் போல ஒளி வடிவாக, பேரருள் வடிவாக மாற ஒரே மார்க்கம், அன்புதான். மனித வாழ்வே, கிடைத்ததைப் பாதுகாப்பதும், கிடைக்காததற்கு ஏங்குவதுமே தான், என்றாகிப் போகிறது. இந்த அஞ்ஞானத் திரை விலகும் போது தான், ஞான ஒளி சீறி வெளி வருகிறது. இந்த ஞான ஒளி பெற வேண்டிதான் நாயன்மார்கள் முதல், சாமான்ய மக்கள் வரை ஆண்டவனின் திருப்பாதம் தேடி யாத்திரைகள் மேற்கொள்கின்றனர்.

தொடரும்.

Saturday, January 29, 2011

பட்ட மரம்.

பட்ட மரம்.

அடர்ந்த வனம். எங்கு நோக்கிலும் கபடமற்று தன்னிச்சையாக வளர்ந்த பசுமையான, வகைவகையான மரம் செடி கொடிகள். வண்ண மலர்கள். சுகந்த மணம் நாசியை நிறைத்து, மதியை மயங்கச் செய்தது........... பளீரென ஒரு மின்னல். அசைந்து, அசைந்து தன்னருகே வருகிறதே.......ஓ ...இது மின்னல் இல்லை. ஏதோ பறவை போலல்லவா இருக்கிறது.......அட ஆமாம் அன்னப்பறவை. பாலையும், தண்ணீரையும் தனித்தனியே பிரித்து விடுமாமே, அந்த அன்னப் பறவை.....தலையை ஆட்டி கிட்டே வந்து உரசி நின்று.........உற்றுப் பார்க்கிறதே, எதனால் என்று தெரியவில்லையே. திடீரென, ஒய்யாரமாக தோகையை ஆட்டியபடி அப்படியே ஒரு வட்டமடித்து, திரும்பி நடக்க ஆரம்பித்தது அது.

நேர்ந்து விட்டது போல பின்னாலேயே போக முயற்சித்து, அது ஓட ஆரம்பித்த போது தானும் ஓடி துரத்திப் பிடிக்கும் நோக்கில், நெருங்கி, நெருங்கி.....ஆகா பிடிக்கப் போகிறோம் என்று கையை நீட்டும் நேரம் அங்கே ஒரு அழகான ராஜ குமாரி. ஆம் ராஜகுமாரியாய் மாறிப்போன அன்னம்.

டொக்.....டொக்......டொக்........என்ன சத்தம். ராஜகுமாரி, நீ எனக்கே, எனக்கா.........

அட பாவி மனுசா......மணி 7 ஆவுது, கனவு கண்டுகினு கீது பாரு.........பொழுதன்னைக்கும் சுட்டி டிவி குழந்தைங்களோட உக்கார்ந்துகினு பாக்குறது. அப்பறம் இப்படிகனவு கண்டு உளர்றது. இதே பொயப்பா பூடிச்சி உனக்கு.

ஏய் இன்னாம்மே ரொம்பத்தான் அலுத்துக்கினுகிற.............

சரி, இன்னா சத்தம் வெளிய?

அதுவா, நீதானே அந்த பட்டுப் போன, காய்க்காம கடந்த கொய்யா மரத்த வெட்ட சொன்ன? அதைத்தான் ஆள் வந்து வெட்டறான்.

எம்புட்டு நாளா சொல்லறேன். கண்டுக்காம இருந்துட்டு இன்னைக்கு என்னா ஞானோதயம்?

அதுவா, இன்னைக்குத் தானே, உங்க அக்கா ஊரில இல்ல, குல சாமி கோயிலுக்கு போயிருக்கா. அதான் இன்னைக்கு வெட்டச் சொன்னேன்.

அவ ஊருக்குப் போறதுக்கும், நீ மரத்தை வெட்டறதுக்கும் இன்னாம்மே சம்பந்தம்? அவகிட்ட எப்பவும் மல்லுகட்டிகினு நிக்கிறது போதாதுனுட்டு, அவ இல்லாத நேரத்திலயும் இப்புடி கரிச்சி கொட்டறியே ஞாயமா?

அடப் போய்யா, உனக்கு என்னைக்குத்தான் இதெல்லாம் புரியப் போகுது. அவளே பாவம், புருசனும் இல்லாம, புள்ளை குட்டியும் இல்லாம, நொந்து போய் பட்ட மரமா வந்து நிக்குறா......இந்த மரத்த வெட்டற போது நீயோ இல்ல அந்த மரவெட்டியோ ஏழு தடவை பட்ட மரம், பட்டமரம்னு சொல்லுவீங்க......அந்த நேரத்துல அந்த புள்ள மனசு என்ன பாடு படும் கொஞ்ச ரோசனை பண்ணிப் பாத்தியா நீ? அதான் அவ வரதுக்குள்ள இந்த மரத்தை வெட்டிப்புடலாம்னு...............

அடி, என் ராசாத்தி, இத்தனை நல்ல மனசா உனக்கு........இத்தனை நாள் இது தெரியாமப் போச்சே..........

Thursday, January 27, 2011

அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் .


அறிவும் நம்பிக்கையும் பிரியும் இடத்தில் நிற்கும் மனிதன் - ஆசிரியர் திரு ஸ்ரீரங்கம் வி. மோகனரங்கன் அவர்கள்.


திரு இராஜகோபாலாச்சாரி அவர்கள் கூறிய, இந்து மதத்தையும், இந்தியாவையும் காப்பாற்றியவரே சுவாமி விவேகானந்தர்தான் என்பதையும், சுவாமிஜியின், சிகாகோ பயணச் சொற்பொழிவுகளின் மாபெரும் வெற்றியையும், உலகெங்கும் சுற்றியலைந்து, தாய்த்திரு நாட்டிற்குத் திரும்பியபோது, இந்தியாவின் ஆன்மாவே திரும்பி வந்துவிட்டதாக புளங்காகிதமடைந்த இந்திய மக்களின் மன நிலையையும், நடு நிசி நேரம் தன்னுயிர் பிரியும் வேளையில்,[ ஆகஸ்ட் 16, 1886] தன் ஆன்ம சக்திகள் அனைத்தையும் தன்னுடைய மிக நெருக்கமான சீடரான நரேந்திரருக்குத் தாரை வார்த்துக் கொடுத்த ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சரின் வள்ளல் வரை பல விசயங்கள் நமக்குப் பரிச்சயமானதாக இருப்பினும், ஆசிரியரின் முற்றிலும் மாறுபட்ட கோணத்தில் அனைத்தையும் பார்க்கும் போது, பல்வேறு சிந்தனைகள் நம் மனதிலும் விரிவதையும் தடுக்க இயலவில்லை. ஒரு நல்ல நூலின் இலக்கணம் ஒரு வாசகனை கண்மூடித்தனமாக நம்பச் செய்வதைவிட, சுயமாக சிந்திக்கத் தூண்டச் செய்வதாக இருக்க வேண்டும். அந்த வகையில் இந்நூல் வெற்றி பெற்றிருப்பதாகவே தோன்றுகிறது.


சுந்தரத் தமிழ் துள்ளி விளையாடும் படைப்பு!

“இரவும், பகலும் முடைந்து நெய்யப்பட்ட ஆடையாய்ச் செல்கின்றன நாட்கள்.............. அறிவும், அறியாமையுமாய்ச் செல்கிறது மனிதனின் முன்னேற்றப்பாதை”................. இப்படி முன்னுரையின் முதல் வரியிலேயே வார்த்தை ஜாலங்கள் கொண்டு, வாசகர்களை சுண்டியிழுக்கும் நுண்கலை கற்றவர் என்று நிரூபிக்கிறார் ஆசிரியர்.

பறக்க எத்தனிக்கும் தன் குஞ்சுகளைக் காக்கும் பொருட்டு, பெற்ற காக்கைகளின் பரிதவிப்பை, ஒரு கவிதையாக மாற்றியமைத்த பாங்கு, கையில் எடுத்த நூலை கீழே வைக்க முடியாமல் ஒரே மூச்சில் படிக்கத் தூண்டுகிறது.

பதஞ்சலி யோக ஸூத்திரம் தொடங்கி, ஆதாம் ஏவாள் வரை மனம் படுத்திய பாட்டினால், சபிக்கப்பட்ட மனிதனின் நிலையை அழகு கவிதையாக வடித்திருக்கிறார் ஆசிரியர். ‘தான்’ என்ற அகங்காரம் தொலைந்தால்தான் மெய்ஞ்ஞானம் சித்திக்கும் என்பதனை விவரித்திருக்கும் விதம் தெளிந்த நீரோடை..

“ அந்த அனுபவங்களின் விஷத்தையெல்லாம் குடித்துக் கழுத்தில் தேக்கியபடி இந்து சமுதாயத்தின் உன்னதத்தையும், இந்து மதத்தின் ஆக்கப்பூர்வமான உயிர்வடிவத்தையும் தம் உணர்வுக் கண்னால் கண்டு, உள்ளம் கசிந்து காதலாகி வந்துற்ற தீங்கிற்கு நெஞ்சம் விதிர்த்துக் கண்ணீர் மல்கி, உயர்வையே எடுத்துரைத்த நரேந்திரனின் பக்குவம் வியத்தற்குரியது”, என்று [ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்] ஆசிரியர் உள்ளம் உருக, அத்துணை உணர்வுகளையும் சொல்லால் வடித்து, வாசகரை மெய்சிலிர்க்கச் செய்திருப்பதும் நிதர்சனம்.

ஆலகாலத்தை கண்டத்தில் தாங்கிய சிவபெருமானை முன்னிறுத்தியிருக்கும் பாங்கு அவர்தம் ஆன்மீக உணர்வையும் பிரதிபலிக்கிறது.

ஒரு சில இடங்களில் ‘ பரிவ்ராஜக வாழ்க்கை’ போன்று வடமொழிப் பயன்பாடு இருந்தாலும், அதற்கான தமிழாக்கமும் வாசகருக்குப் புரியும் வண்ணம் எளிய நடையில் வழங்கியிருப்பதும் சிறப்பு.

படிப்பறிவற்ற வாழ்க்கையை ‘ஊருண்கேணி’ என்று உவமைப்படுத்திய விதம் அற்புதம்.

” அறிவு என்பது முதலில் நம்பிக்கைகளின் தளைகளை அவிழ்க்கும், சிறைப்படுத்தும் வழக்க நெறிகளினின்றும் மனிதனை புறத்தனாக்கும் “ - என்ற ஆசிரியரின் கூற்று, Bertrand Russellன் "Useless Knowledge ", என்ற கட்டுரையை நினைவு கூறும் விதமாக அமைந்துள்ளது.

நரேந்திரர், விவேகாநந்தராக மாறிய சந்தர்ப்பத்தை நயம்பட எடுத்துரைத்திருக்கின்றார்.

நரேந்திரர் மதக்கல்வியை கையாண்ட விதம் பற்றிய ஆசிரியரின் பார்வை வாசகரையும் சிந்திக்க வைக்கக் கூடியதாகவே உள்ளது.

வேதாந்தம் அமைப்பியல் குறித்த ஆசிரியரின் ஆழ்ந்த ஞானம் வியப்பில் ஆழ்த்துகிறது.

‘ வேதத்திலேயே வந்திருந்தாலும் அறிவுக்குப் பொருத்தமாக இருந்தால் மட்டுமே ஏற்கத் தகுந்தது’, என்ற ஆசிரியரின் தீர்ப்பு பாரபட்சமற்றது.

19ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் ஆங்கிலக் கல்வியின் விடியலில் மகிழ்ந்து அறிவியக்கக் கதிர்களில் குளித்த நெஞ்சங்களின் சூழலை, மனோத்தத்துவ முறையில் ஆய்ந்தறிந்து விளக்கமளித்துள்ளது வரவேற்கத்தகுந்தது.

ஆண்டவன் மீது பக்தர்கள் கொள்ளும் பக்தியை காதலன், காதலி மீது கொள்ளும் தீராக் காதலுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் நவீன வேதாந்தப் போக்கும் காணப்பெறுகிறது.கடவுளின் அருகில் எளிதாகச் சென்றடையும் மார்கத்தை மேலும் எளிதாக்க முயற்சிதிருக்கிறார் ஆசிரியர்.

பிரம்மம் சத்யம், உலகம் மாயை, ஜீவன் பிரம்மமே என்ற அத்வைதத்திற்கு ஆசிரியரின் வியாக்கியானம் தேர்ந்த ஞானமுள்ளதாகவும் பல இடங்களில் ஓஷோவின் தத்துவங்களோடு ஒத்துப் போவதாகவுமே உள்ளது.

விசிஷ்டாத்வைத்தத்தையும் விட்டுவைக்கவில்லை இந்த வித்தகர். ஸ்ரீநாத முனிகள் அருளிய மறைந்து போன ‘யோக ரகஸ்யம்’, நூல் குறித்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சங்கப் புலவர்களின் பார்வையில் காதல் மற்றும் காமத்தின் விளைவுகள், அன்பின் ஐந்திணை என்ற குறியீட்டால் அடி முதல் நுனி வரை அலசி ஆய்ந்திருக்கிறார்.

விவேகாநந்தரின் உபதேசங்களை ஊடுறுவி அதனைத் தெளிவுற தம் பாணியில் விளக்கியுள்ளார்.

ஒரு வேறுபட்ட கோணத்தில், ஹெர்மன் ஹெஸ்லேயின் ‘சித்தார்த்தாவில்’, சித்தார்த்தனின் தனிமையை வெகு நேர்த்தியாக விவேகாநந்தரின் தனிமையுடன் ஒப்பிட்டு , அதன் ரணம் குறித்தும் விவரித்திருக்கிறார்.

உணர்ச்சிச் சூழல்களும், அறிவுச் சுடர்களும் மாறி மாறி வரும் ஒரு பின்னிப் பிணைந்த ஆளுமையாக நம்மில் பதிவு பெறுகிறவர் விவேகாநந்தர் என்ற ஆசிரியரின் கூற்று ஏற்புடையதாகவே உள்ளது.


விவேகாநந்தரையும், நரேந்திரரையும் இரு வேறு உயிர்களாக உருவகப்படுத்தி, இருவரையும் ஒப்புமைப்படுத்தி, இரண்டிற்குமான பிணக்கத்தையும் துல்லியமாக எடுத்துக் காட்டியிருப்பதிலும் வெற்றி கண்டுள்ளார் என்றே கூறலாம்.

மேலை நாட்டு மத நம்பிக்கைகள், அராபிய தத்துவ அறிஞர் அவர்ரோஸ், கிரேக்க தத்துவஞானி அரிஸ்டாட்டில், அக்லினாஸ் இப்படி அனைவரின் தத்துவங்களையும் அலசி ஆயத் தவறவில்லை இந்த தத்துவ ஞானி.

சுருங்கச் சொன்னால், விவேகானந்தர், ராமகிருஷ்ண பரமஹம்சர், ஸ்ரீராமானுஜர், ஆழ்வார்கள் மட்டுமன்றி உலகின் பெரும்பாலான மதங்களையும், தத்துவ ஞானிகளையும் கலந்தாய்ந்து தம் கருத்துக்களையும் உள்ளிருத்தி ஒரு அரிய படைப்பாக்கியிருக்கிறார் ஆசிரியர்.

‘பிற்றை நிலையில் சிந்திக்கும் பொழுது’, என்ற அழகிய தலைப்புடைய இறுதி அத்தியாயம், இம்முழு நூலின் முத்தாய்ப்பாக அமைந்திருக்கிறதென்றால் அது மிகையாகாது.மஜீம்தாரின் ஸ்ரீராமகிருஷ்ணரைப் பற்றிய கட்டுரையை , அதன் உணர்வலைகளில் ஏதும் மாற்றம் வந்துவிடக்கூடாது என்ற உந்துதலினாலோ என்னவோ அதனை அப்படியே ஆங்கிலத்திலேயே அளித்துள்ளார்.

குறிப்புதவி நூல்கள் என்று 67 பெயர்கள் கொண்ட ஒரு பெரும் பட்டியலையே குறிப்பிட்டும், மனம் நிறைவடையாத ஆசிரியர், “இப்படியா அப்படியா என்று தீர்ந்து விடாத இத்தகைய தொல்லை இன்பமான அவஸ்தையில் இருந்து கொண்டு தான் இந்த நூலாக்கம் வெளிவருகிறது”, என்று முடித்திருப்பது மேலும் ஆச்சரியத்தை ஏற்படுத்துவதோடு, திரும்பவும் முதல் பக்கம் நோக்கி பார்வையைத் திருப்பவும் வைக்கிறது....................

இந்த நூல் உண்மையிலேயே மனித குலத்தின் மிகப் பெரிய சமன்பாடுகளில் ஒன்றின் தீர்வு என்பதிலும் மிகையில்லை !!

88 பக்கங்கள் கொண்ட, தமிழினி வெளியிட்டுள்ள இந்நூலின் விலை ரூ.55.

பவள சங்கரி.







Monday, January 24, 2011

கதையே கவிதையாய்...............


கதையே கவிதையாய் !

THE PROPHET - KAHLIL GIBRAN.

அல்முஸ்தபா, அனைவராலும் நேசிக்கப்பட்ட ஜீவன், நிகழ்காலத்தின் விடிவெள்ளியானவன், ஆர்பலீஸ் நகரத்தில் பன்னிரண்டு ஆண்டுகளாக காத்துக் கிடக்கிறான் தான் பிறந்த மண்ணிற்கே தன்னைச் சுமந்து செல்லப் போகும் கப்பலுக்காகக் காத்துக் கிடக்கிறார்.

பன்னிரண்டாம் வருடம், ஏழாவது நாள் அறுவடை சமயம், நகர எல்லையை விட்டு குன்றின் மீதேறி கடற்பரப்பை நோக்கும் போது மூடுபனியினூடே கப்பல் வருவது மங்கலாகத் தெரிந்தது.

இதயக் கதவுகள் விரிந்து திறந்து, அவருடைய இன்ப எல்லை கடல் கடந்து விரிந்தது. அவர் கண்களை மூடி ஆன்மாவின் அமைதியில் பிரார்த்தனை செய்தார்.

ஆனால் குன்றிலிருந்து கீழே இறங்கும் போது ஏதோ ஒரு சோகம் மேலே படர்ந்தது......அவர் இதயம் நினைத்தது :

நான் துன்பம் இன்றி அமைதியாக எப்படி புறப்படப் போகிறேன் ? அல்லது ஆன்மாவின் ரணமின்றி இந்நகரத்தை விட்டு எவ்வாறு வெளியேறப் போகிறேன்?

வேதனையோடு நீண்ட நாட்கள் இந்த சுவற்றுக்குள் கழித்திருக்கிறேன், நீண்ட தனிமையான இரவுகள் : சோகமின்றி அவர் தனிமையையும் வேதனையையும் யாரால் போக்க முடியும் ?

குழந்தையைத் தன் தோளின் மீது ஏந்திக் கொண்டிருந்த ஒரு பெண், குழந்தைகள் பற்றிப் பேசும்படி வேண்டினாள்.

அதற்கு அவர் கூறியதாவது :

உங்கள் குழந்தைகள் உங்கள் குழந்தைகளே அல்ல.........

அவர்கள், வாழ்க்கை அது தன் சொந்த ஏக்கங்களின், மகனும், மகளும் ஆவார்கள்.

அவர்கள் உங்கள் மூலமாக வந்திருக்கிறார்களே ஒழிய உங்களிலிருந்து வரவில்லை.

அவர்கள் உங்களோடு இருந்தாலும் உங்கள் உடமைகள் அல்ல.

நீங்கள் உங்கள் அன்பை அவர்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் உங்கள் எண்ணங்களை அவர்கள் மீது திணிக்க முடியாது.

காரணம் அவர்கள் தங்களுடைய சொந்த எண்ணங்கள் கொண்டவர்கள்

நீங்கள் அவர்களின் உடலை மட்டும்தான் உடமையாக்கிக் கொள்ள இயலுமே ஒழிய அவர்களின் ஆன்மாவையல்ல.

காரணம், அவர்களின் ஆன்மா எதிர்காலம் எனும் இல்லத்தில் குடியிருக்கிறது. உங்கள் கனவிலும் அதனை நீங்கள் நெருங்க முடியாது.

நீங்கள் அவர்களைப் போலவே இருக்க முயற்சிக்கலாம். ஆனால் உங்களைப்போலவே அசலாக அவர்களை உருவாக்க முடியாது.

காரணம் வாழ்க்கை பின்னோக்கிச் செல்லுவதும் இல்லை, இறந்த காலத்தில் நிலைத்து நிற்பதும் இல்லை.

உங்கள் குழந்தைகள் விர்ரென்று விடுகின்ற அம்பிற்குரிய நாணாகத்தான் நீங்கள் இருக்கிறீர்கள்.

அந்த வில்லாளி தொலை நோக்குப் பாதையின் மீதல்லவோ குறிவைத்திருக்கிறான்.

அவன் தன் பலம் கொண்டு, தான் விடும் அம்பு வெகு தூரம் வேகமாக பாய்வதற்கு ஏற்றபடி உங்களை வளைத்துக் கொள்கிறார்கள்.

அந்த வில்லாளியின் கையில், உங்கள் வளையும் தன்மை மகிழ்ச்சிக்குரியதாக இருக்கட்டும்.

அவன் பறக்கக்கூடிய அம்பையே விரும்புவதால், அதற்காக உறுதியாக நிற்கக் கூடிய அந்த நாணையும் அவன் விரும்புகிறான்.

“ அண்ணன் என்னடா.......தம்பி என்னடா அவசரமான உலகத்திலே.............”

”தாய் என்றாலும், பிள்ளை என்றாலும் வாயும் வயிறும் வேறல்லவோ....?”


--------------------------------------------------------------------

கண்ணீரும் சிரிப்பும் !

நைல் நதிக்கரையில், சலனமில்லாத நீரோட்டத்தில், ஒரு கழுதைப்புலியும், முதலையும் சந்தித்துக் கொண்டது. இரண்டும் ஒன்றை ஒன்று நலம் விசாரித்தது.

கழுதைப்புலி முதலையைப் பார்த்து, “ தங்களின் நேரம் எப்படி போய்க் கொண்டிருக்கிறது ஐயா ?” என்றது.

பதிலாக அந்த முதலையும், “ மோசமாக போய்க் கொண்டிருக்கிறது. சில நேரங்களில் நான் வேதனையாலும், வலியாலும் துடிக்கிறேன். ஆனால் மற்ற உயிரினங்களோ எப்பொழுதும், அதற்கென்ன நல்லாத்தான் முதலைக் கண்ணீர் வடிக்கிறது, என்கின்றன. இது மேலும் என்னை வேதனைப்படுத்துகிறது “, என்றது.

கழுதைப் புலியோ, “ நீ, உன் வலியும், வேதனையும் பற்றிப் பேசுகிறாய். ஆனால் என் நிலையைப் பற்றி எண்ணிப்பார். இந்தப் பிரபஞ்ச அழகையும், அதிசயங்களையும், அற்புதங்களையும் கண்டு வியந்து போகிறேன். மகிழ்ச்சியின் எல்லையில் பளபளப்பான பகல் பொழுதைப் போல நானும் சிரிக்கிறேன். அதற்கும் இந்த காட்டுவாசிகள், இது கழுதைப் புலியின் சிரிப்பு என்றுதானே எகத்தாளமாகக் கூறுகிறார்கள்?”, என்றது.

சிரித்தாலும், அழுதாலும் சரியான புரிதல் இல்லையென்றால் வாழ்க்கையே நரகம்தானே..........


Friday, January 7, 2011

காதல் சின்னம்.


காதல் சின்னம்

அற்றைத் திங்களின்
அற்புத நிலவொளியில்
அரசனின் அந்தப்புரத்தின்
அரசனையில் அழகுப் பதுமையாய்
அன்பு மனம் கலந்திருந்த
அரிதான தருணமதில்
அட்சர சுத்தமாய்
அன்புக் கட்டளையிட்டாள்
அரியணைப் பதுமையாம் மும்தாசு.

இற்றைத் திங்களில்
இந் நிலவொளியில்
இம்மையில் இனியும்
இச்சை கொண்டொரு
இல்லாளை வேண்டாமல்
இவ்விரண்டு மக்களையும்
இன்பமுற வாழ வழி செய்து
இந்நிலையை காலம் முற்றும்
இப்புவியுலக காதலர் அனைவரும்
இறுமாப்புடன் நிமிந்து நோக்கும் வண்ணம்
இசைபட பளிங்கு மாளிகையது அமைத்து
இச்சகத்து மாந்தரும் இன்பம் பெற
இணையிலாதொரு காதல் சின்னம் அமைக்கவே

ஓம்காரமாய் ஓங்கி ஒலிக்குதொரு
ஒய்யார மண்டபம் ஒயிலாய்
ஒத்த மனமுடைய மனிதரையும்
ஒண்ணாய் உயிர் சேர்க்கச் செய்கிறது
ஒருமையாய் ஓய்ந்து போன உள்ளமும்
ஒத்தாரை உறவோடு ஏற்றுக் கொள்ளும்
ஒப்புயர்வில்லா உன்னத நிலையையும்
ஒருகாலும் மாறாத அன்பையும்
ஓங்கி உலகளந்த உத்தமன்
ஓம்கார நாதனின் தண்ணளி வீசி
ஓங்கி உயர்ந்து நிற்கும் மாமலையாமே!!

Sunday, January 2, 2011

சுடர் ஒளி.

சுடர் ஒளி

ஓர் உண்மைச் சம்பவத்தின் அடிப்படையில் எழுதப்பட்ட சிறுகதை.


காலை நேர பரபரப்பு. மருத்துவர் குழு ரவுண்ட்ஸ் வரும் நேரம். ஒரு புறம் அறையை சுத்தப்படுத்தும் பணியாளர்கள். மறுபுறம் நோயாளிகளுக்குத் தேவையான பணிவிடைகள் செய்யும் செவிலியர்கள் என்று மருத்துவமனை அல்லோகல்லோலப்பட்டுக் கொண்டிருந்தது. 106 ஆம் எண் அறைக்கு தனலட்சுமி புதிதாக வந்து சேர்ந்திருக்கும் நோயாளி. கணவர் ராதாகிருஷ்ணன் ஒரு மத்திய அரசு நிறுவனத்தின் உயர் பதவியில் இருப்பவர். தனலட்சுமி நல்ல தெய்வீகக் களையான முகம். பார்த்தவுடன் கையெடுத்துக் கும்பிடத் தோன்றும் கம்பீரமானதோற்றம்.

உடல் நிலை மோசமான அந்நிலையிலும் காலையில் டவல் பாத் எடுத்து, அழகாக நெற்றியில் குங்குமப் பொட்டிட்டு , இளம் பச்சை வண்ணத்தில் சுங்கடி பட்டுச் சேலையும் அதற்கு ஏற்றாற் போல அதேவண்ண இரவிக்கையும் அணிந்து, இலட்சுமி அம்சமாகவே காட்சியளித்தார். அந்த வார்ட் பக்கம் செல்பவர்கள் அவரைப் பார்த்த மாத்திரத்தில் இந்த அம்மாவிற்கு என்ன வியாதியாக இருக்கும், வயதும் நடுத்தர வயதுதான் என்று சந்தேகத்தோடு மறுபடியும் திரும்பிப் பார்க்காமல் செல்ல மனம் வராது.

அன்று காலை நர்ஸ் நம்ருதா டியூட்டிக்கு நான்கு நாட்கள் விடுமுறைக்குப் பிறகு வந்தாள். தனலட்சுமியை முதன் முதலில் பார்த்தவுடன் ஒரு மரியாதை தோன்றினாலும் அவருடைய கேஸ் ஷீட்டை பார்க்கும் ஆவல்தான் அதிகமானது. அதற்கான முயற்சியில் இருந்த போது, தனலட்சுமி நம்ருதாவை ஏற இறங்க பார்த்து விட்டு,

“ என்னம்மா, இது எத்தனாவது மாதம்? வயிறு பெரிதாக உள்ளதே?”, என்றாள்.

நம்ருதாவும், “ எட்டு மாதம்”, என்றாள், சற்றே நாணத்தால் தலை குனிந்தபடி.

“ ஏம்மா, மாதம் நெருங்கிவிட்டது போல் உள்ளதே. வயிறு நன்றாக இறங்கியுள்ளதே. மெட்டர்னிட்டி லீவ் எடுக்கவில்லையா?,” என்றாள்.

பதில் சொல்ல சற்று தயங்கினாலும், தனலட்சுமியின் அக்கரையான பேச்சும், அன்பான பார்வையும், அவள் கேள்விக்கு பதில் சொல்வதில் எந்த தயக்கமும் காட்ட முடியவில்லை நம்ருதாவால்.

தன் கணவன் ரயில்வே காவல் துறை அதிகாரியாக பணிபுரிந்ததால் அதிக அழுத்தம் காரணமாக மதுப் பழக்கத்திற்கு அடிமையானதன் விளைவாக இன்று பக்கவாதத்தினால் அவதிப் படுவதாகவும், பணிக்குச் செல்ல முடியாத வேதனையுடன் மருத்துவச் செலவின் பாரமும் சேர்ந்து தன்னால் விடுமுறை எடுக்க முடியாத சூழலை உருவாக்கியதன் பின்னணியை தயக்கமின்றி அவளால் கூற முடிந்தது. எட்டு ஆண்டுகளாக குழந்தைப்பேறு இல்லாமல் தவித்த தங்களுக்கு ஆண்டவர் கருணையால் தற்போது கிடைத்த வரத்தை பொக்கிஷமாக காக்க வேண்டிய கட்டாயத்தையும் மனம் விட்டு ஒரு தாயிடம் கொட்டித் தீர்ப்பது போல கொட்டித் தீர்த்தாள் நம்ருதா. காதல் மணம் புரிந்த காரணத்தினால் , இரு குடும்பத்தாரின் உறவும் இல்லாமல் போன சோகக் கதையும் இணைந்து இன்று தன்னை பாடாய்ப் படுத்துவதைத் தவிர்க்க முடியாமல் ஏங்கும் ஏக்கத்தை அவள் வார்த்தைகள் தெளிவாக படம்பிடித்துக் காட்டின.

பேசிக் கொண்டே தனலட்சுமி அம்மாவின் கேஸ் ஷீட்டை எடுக்கப் போனவள், அட்டெண்டர் வந்து, ஒரு அவசர கேஸ் வந்துள்ளதால் மருத்துவர் அழைப்பதாகக் கூறவும் அப்படியே விட்டு விட்டு பிற்பாடு வருவதாகக் கூறிச் சென்று விட்டாள். ஒரு பிரசவ கேஸ், குழந்தை கொடி சுற்றி இருந்ததால் மிகச் சிரமமான நிலையில் நல்லபடியாக தாயிடமிருந்து சேய் பிரிந்து வருவதற்குள் நேரம் போனதே தெரியவில்லை. இரவு வரை பெரும் போராட்டமாகி விட்டது. கணவனின் நினைவு வந்த மாத்திரத்தில், வேறு நினைவெதுவும் அற்றவளாக வீடு திரும்பினாள், நம்ருதா.

மறுநாள் காலை பணிக்கு வந்தவுடன், ஏனோ தனலட்சுமி அம்மாவின் நினைவாகவே இருந்தது நம்ருதாவிற்கு. உடனடியாகச் சென்று அவருடைய கேஸ் ஷீட்டைப் பார்க்க மனம் துடித்தாலும், மற்ற அவசரப் பணிகள் அவளைத் தடுத்து நிறுத்தி வைத்திருந்தது.

பணியில் மூழ்கியிருந்த சமயம் வார்ட் பாய் வந்து ஒரு எமர்ஜென்ஸி கேஸை, ஸ்கேன் அறைக்கு அழைத்துச் செல்ல வேண்டுமென்று கூறவும், அந்தப் பையன் பின்னாலேயே சென்றவள், அவன் 106 ஆம் எண் அறை இருந்த பகுதிக்குச் செல்லவும், அவள் மனம், ‘ கடவுளே தனலட்சுமி அம்மாவின் அறையாக இருக்கக் கூடாதே’, என்று தன்னையறியாமல் வேண்டிக் கொள்ள ஆரம்பித்தது.

ஆனால், விதி யார் வேண்டுதலையும் பொருட்படுத்தாமல், தன் தர்ம நியாயப் படித்தானே காரியங்கள் செய்து கொண்டிருக்கிறது? அப்படியானால் வேண்டுதல் என்பதன் அர்த்தமே பொய்யாகிப் போய்விடுகிறதே?

அந்தப் பையன் சரியாக தனலட்சுமி அம்மாவின் அறையின் வாசலில் சென்று நின்று கொண்டிருந்தான். மனம் படபடக்க ஆரம்பித்தாலும், ஒரு கணத்தில் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தவள், பரபரவென செயலாற்றத் துவங்கினாள் நம்ருதா.

உள்ளே தனலட்சுமி அம்மாவிற்கு வெண்டிலேட்டர் பொருத்தியிருந்தார்கள். லேசான மயக்கத்தில் இருந்தார் அவர். அவரை பையனின் உதவியுடன் ஸ்ட்ரெச்சரில் மாற்றி, சலைன் பாட்டிலை ஒரு கையில் பிடித்துக் கொண்டு அந்தப் பையன் ஸ்ட்ரெச்சரை தள்ளிக் கொண்டுப் போக, மூன்றாம் மாடியில் இருந்த ஸ்கேன் அறைக்கு லிப்டில் அழைத்துச் சென்றனர். தனலட்சுமி அம்மாவின் கணவரின் முகத்தில் இருந்த சோகம் நம்ருதாவின் மனதிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவர்களின் ஒரே மகன், 15 வயது இருக்கலாம், என்பது உறவினர்கள் பேச்சிலிருந்து தெரிய வந்தது. தேம்பித் தேம்பி அழுது கொண்டிருப்பதும், தந்தை ஆறுதல் சொல்ல இயலாத நிலையில் நின்று கொண்டிருப்பதையும் பார்த்து உறவினர்களும் விக்கித்து நின்று கொண்டிருந்தனர்.

இவையனைத்தையும் கவனித்தாலும், நம்ருதா, உடனே தனலட்சுமி அம்மாவை தாமதிக்காமல் ஸ்கேன் அறைக்கு அழைத்துச் சென்று பார்த்து, விரைவில் சிகிச்சையை ஆரம்பிக்க வழி செய்ய வேண்டுமென்ற உந்துதலில் தன் நிறைமாத பாரச் சுமையையும் பொருட்படுத்தாது பரபரப்பாக இயங்கத் தொடங்கினாள்.

லிப்டில் தனலட்சுமி அம்மாவின் நெருக்கமாக நின்று கொண்டு, அவர் தலையை ஆதரவுடன் தடவிக் கொடுத்து, “ எல்லாம் சரியாகிவிடும் அம்மா, கர்த்தர் ஒருகாலும் தங்களைக் கைவிட மாட்டார். தைரியமாக இருங்கள்”, என்றாள் நம்ருதா ஆதரவுடன்.

அரை மயக்கத்தில் இருந்த தனலட்சுமி அம்மாவோ நம்ருதாவின் கையை இருகப் பற்றிக் கொண்டு ஏதோ பேச வேண்டும் என்பது போலவும் வெண்டிலேட்டரை எடுக்க முயற்சிப்பது போலவும் சைகை செய்தார். ஏதோ தன் சிரமம் குறித்து சொல்லப் போகிறார் என்ற எண்ணத்தில் குனிந்து வாயருகே காதை வைத்துக் கொண்டு கேட்க முயற்சித்தாள் நம்ருதா. பேச முடியாத அந்த நிலையிலும், மிகச் சிரமப்பட்டு, தனலட்சுமி அம்மாள் சொன்ன அந்த விசயம் நம்ருதாவை கண் கலங்கச் செய்தது. ‘இதெல்லாம் பின்பு பார்த்துக் கொள்ளலாம் அம்மா, நீங்கள் ஓய்வெடுங்கள்’, என்றாள் நம்ருதா.

ஸ்கேன் அறைக்குச் சென்று, தனலட்சுமி அம்மாவை மெதுவாக தூக்கி படுக்க வைத்தாள். மனதில் ஏனோ பெரும் பாரம் நிறையத் தொடங்கியது. அந்த மின் இயந்திரம் உள்ளே இருக்கும் விபரீதங்கள் அனைத்தையும் தெள்ளத் தெளிவாக படம் பிடித்துக் காட்டத் தொடங்கியது. நம்ருதாவின் இதயமும் வேகமாக துடிக்க ஆரம்பித்தது.

நல்ல இதயத்தைக் கொடுத்த அந்த ஆண்டவன், எத்துணை இரக்கமற்ற அரக்கன் என்பதை தெளிவாக படம் பிடித்துக் காட்டியது அந்த மின் சாதனம். ஆம், தனலட்சுமி அம்மாவின் மார்பகப் புற்று நோய், அவருடைய மொத்த உள்ளுருப்புகளையும், பாரபட்சமின்றி பாதித்திருந்தது. உள்ளிருந்தே கொல்லும் வியாதியாக இறுதி எல்லையைத் தொட்டிருந்தது. தன் கண்களையே நம்ப முடியாதவளாக திரும்பவும், மருத்துவர் அறிக்கையையும் படித்து உறுதிப் படுத்திக் கொண்ட நிலையில், செய்வதறியாது, நேரே பிரார்த்தனை அறைக்குச் சென்று மனதார பிரார்த்திப்பதைத் தவிர வேறு வழி அறியாதவளானாள்.

பணி நேரம் முடிந்தும், வீடு திரும்ப எண்ணமில்லாதிருந்தும் உடல் அசதியும், கணவனின் நினைவும் சேர்ந்து அவளை வீடு நோக்கி நடக்கச் செய்தது. அடுத்து வந்த சில நாட்கள் தனலட்சுமி அம்மாவின் உடல் படும் வேதனையால், நல்லுள்ளம் கொண்டோர் அனைவரும் மன வேதனை கொள்வது தவிர்க்க முடியாததாகிப் போனது.


அன்று வெள்ளிக்கிழமை. உடல் அசதியால் பரபரப்பாக இயங்க முடியாது சற்றே
மெத்தனம் காட்டியதன் விளைவு மருத்துவ மனைக்கு காலம் தாழ்ந்து வர வேண்டியதாகிவிட்டது. தலைமை மருத்துவரிடம் வழக்கம்போல் பாட்டு கேட்க வேண்டிவருமே என்ற அச்சத்துடனே மருத்துவமனையினுள் அடியெடுத்து வைத்தவள், தலைமை மருத்துவர் தன் இருக்கையில் இல்லாதது கண்டு சற்றே பெருமூச்சு விட்டாள், நம்ருதா.

ஆனால் அது வெகு நேரம் நீடிக்கவில்லை. மருத்துவமனை மிகவும் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருந்தது. தனலட்சுமி அம்மாவின் அறையின் புறம்தான் அந்த பரபரப்பு என்பதை அறிந்த மாத்திரத்தில் அவள் அதிர்ச்சியடைந்ததோடு ஏதோ விபரீதம் நடக்கப் போவதாகவும் உணர்ந்தாள். தன் உடற்சுமையையும் பொருட்படுத்தாது வேகமாக ஓட்டமும் நடையுமாக தனலட்சுமி அம்மாவின் அறையை நெருங்கினாள். தலைமை மருத்துவர் அங்குதான் பரிசோதனை நடத்திக் கொண்டிருந்தார். இவளைக் கண்டவுடன் இன்றும் தாமதமா என்பது போல பார்வையிலேயே கோபத்தின் எல்லையை வெளிப்படுத்தினார்.

தனலட்சுமி அம்மாவோ மூச்சுத் திணறலால் துடித்துக் கொண்டிருந்தார். வெண்டிலேட்டர் பொருத்தப்பட்டிருந்தது. மருத்துவர் சலைன் பாட்டிலில் வேறு ஏதோ மருந்தை ஏற்றிக் கொண்டிருந்தார். அந்த அம்மாவோ மிகவும் துவண்ட நிலையில் நினைவுகளும் தப்பிக் கொண்டிருந்தது புரிந்த போது பேரதிர்ச்சியாக இருந்தது நம்ருதாவிற்கு. இரவு சென்று காலை வருவதற்குள் இத்தனை கொடுமையான ஒரு நிலைமையை சற்றும் எதிர்பார்க்கவில்லை அவள். 37 வயதேயான தனலட்சுமி அம்மாவிற்கு இப்படி ஒரு அவசர முடிவு மிகக் கொடியதாகும். அடுத்த சில மணித்துளிகள் கல் நெஞ்சையும் கரையச் செய்யும், விளக்க முடியாத சம்பவங்கள். அவர் உடல் படும் மரணவேதனையுடன் ஒரு படி அதிகமாக அவரின் கணவர் மற்றும் ஒரே மகனும் தாங்கொணாத்துயரில் இருந்தனர். உறவினர்களும் அவர்களுக்கு ஆறுதல் சொல்ல முயன்று தோற்றுக் கொண்டிருந்தனர்.

இந்த நேரத்தில்தான் யாருமே எதிர்பார்க்காத வகையில் தனலட்சுமி அம்மாள், அணையப் போகும் தீபம் சுடர்விட்டு பிரகாசிப்பது போல, வெண்டிலேட்டரை தானே எடுத்துவிட்டு நம்ருதாவை அருகே அழைத்து, மெல்லிய குரலில் அவளிடம், இனிமேல் கொஞ்ச நாட்களுக்கு குழந்தை பெரிதாகும் வரை தான் பணிக்கு விடுமுறை எடுத்துக் கொள்ளவும், கணவருக்குத் தேவையான மருத்துவ சிகிச்சைகள் பெறுவதற்கும் தங்கள் லயன்ஸ் கிளப் டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்துள்ளதாகவும் அதற்கான கடிதம் தன் தலையணை அடியில் இருப்பதாகவும் சைகை மூலமும் வார்த்தைகள் மூலமும் புரிய வைத்தார், அந்த தெய்வப் பெண்மணி. இதனைக் கண்ட அத்துணைக் கண்களிலும் இரத்தக் கண்ணீர் வடிந்ததென்றால் அது மிகையாகாது. ‘மனிதம்’ என்பதன் முழுப் பொருளாக விளங்கிய ஒரு மாமனிதம்!

அந்த நொடி நம்ருதாவின் இதயம் துடித்து, மனதோ, தனலட்சுமி அம்மாவின் உயிர் தன் கருவில் இணைய வேண்டுமென ஏங்க ஆரம்பித்தது. கண்களை மூடி மனமார பிரார்த்திக்க ஆரம்பித்தாள் அந்த அபலைப் பெண். கர்பிணிகளின் வேண்டுதல்கள் பெரும்பாலும் செவிசாய்க்கப்படுவதாக நம்பிக்கையும் உண்டு.

தனலட்சுமி அம்மாவின் உயிர் அமைதியாக அடங்க ஆரம்பித்தது.......... திடீரென நம்ருதாவிற்கும் பிரசவ வேதனை ஆரம்பித்தது. அவள் மயக்கம் தெளிந்து கண் விழித்து பார்த்தபோது தன் அருகில் அழகானதொரு பெண் குழந்தை நிச்சலமாக உறங்கிக் கொண்டிருப்பதைக் கண்ட மாத்திரத்தில் ஒரு நிம்மதி பெருமூச்சு விட்டாள்...........

பெரிய புராணம் எனும் பேரமுதம் – பகுதி – 36

  63 நாயன்மார்கள் வரலாறு – 31 மூர்க்க நாயனார்   தொண்டை நாடு சான்றோர் உடைத்து , எனும் பழமொழிக்கேற்ப சான்றோர் பெருமக்கள் பல்லோர் அவதரித...