காதல் என்ற வார்த்தையைக் கேட்டாலே காத தூரம் ஓடி ஒளியும் காலம் மலையேறி விட்டது. இன்று பெண் குழந்தைகள் தங்களுக்குத் தேவையானதை, தாஙகளே தேர்ந்தெடுக்கக் கூடியத் தெளிவையும், நல்லது, தீயது குறித்த தெளிந்த விழிப்புணர்வும் கொண்டுள்ளார்கள். எந்த விடயங்களையும் தெளிவாக சிந்தித்து முடிவெடுக்கக் கூடியத் திறனும் பெற்றிருக்கிறார்கள்.
சில காலம்முன்பு பெற்றோர் நிச்சயிக்கும் திருமணம் சிறந்ததா அல்லது காதல் திருமணம் சிறந்ததா என்று ஒரு விவாதம், “அவள் விகடன்” பத்திரிக்கைக்காக ஈரோடு மகளிர் கலைக்கல்லூரியில் நடத்தினேன். அதில் பத்து மாணவிகள் கலந்து கொண்டு காரசாரமாக விவாதித்தனர். அதனை சுருக்கமாக இங்கே தொகுத்துக் கொடுத்துள்ளேன்.
ஜான்ஸி : காதலர் தின கொண்டாட்டம் மிகப் பிரபலமானதிலிருந்து புரியவில்லையா, காதலின் உன்னதத்தை மக்கள் புரிந்து கொண்டார்கள் என்று.
ஜெயசுதா : நாட்டில் தலை போகிற பிரச்சனைகள் எத்தனையோ இருக்கின்றன. காதலர் தின கொண்டாட்டமா முக்கியம்? இது போல தேவையில்லாத கொண்டாட்டங்கள் குறைந்தால்தான் நாடு உருப்படும்.
சத்யா : கல்லைக் கூடக் கரைய வைக்கும் சக்தி உள்ளது காதல். கல்லாய் இருந்த இறைவனைக் கூட உருக வைத்தது ஆண்டாளின் காதல் அல்லவா...?
ஜெயசுதா : தெய்வீகக் காதல் வேறு....மனிதனின் காதல் வேறு. திருமணத்திற்குப் பிறகு ஒவ்வொருவர் வாழ்விலும் எத்தனையோ பிரச்சனைகள் ஏற்படுகிறது. அதனை உறவுகளால் மட்டுமே தீர்க்க முடியும்.
ரேணுகா தேவி : வரதட்சணை கொடுமையால் அதிகமா ஸ்டவ் வெடிக்கறது நிச்சயிக்கப்பட்ட திருமணத்தில்தாங்க........காதல் திருமணம்னா எந்த எதிர்பார்ப்பும் இருப்பதில்லையே.
கார்த்திகா : பல காதலர்கள் வீட்ல இருந்து பணம் நகையெல்லாம் எடுத்துக்கிட்டுத்தானே ஓடிப்போறாங்க.....சில நேரத்தில் அந்த காரணத்தினாலேயே ஏமாற்றப்படவும் செய்கிறார்கள்.
மேகலதா : சாதி வேறுபாடுகள் ஒழிய உதவுவது காதல்தானே. அரசாங்கமே காதல் திருமணத்திற்கு ஆதரவு கொடுக்கிறதே. பல சலுகைகளும் கொடுக்கிறது. காதல்ல மட்டும் தான் கலப்புத் திருமணம் சாத்தியமாகும்.
நிரஞ்சனா : அரசு பண்றது எல்லாமே, தொட்டிலையும் ஆட்டி பிள்ளையையும் கிள்ளிவிடுகிற வேலைதான். சாதி என்னன்னு கேட்காத பள்ளிக்கூடமும் இல்லை, சாதி இல்லாத சர்டிபிகேட்டும் இல்லை.
சித்ரா : காதல் எப்படிங்க வருது? பெரும்பாலும் வெளித்தோற்றமும், அந்தஸ்தும் பார்த்துத்தானே வருது....?
பெற்றோர் பலதையும் விசாரித்துப் பார்த்து முடிவு பண்ணும் திருமணத்தில் தான் பாதுகாப்பு அதிகம்.
ப்ரியா : அதில மட்டும் என்ன, குழந்தை இல்லேன்னாலோ, அல்லது வேறு ஏதாவது சின்ன பிரச்சனை இருந்தாலோ அதே பெரியவர்களே பார்த்து இரண்டாம் திருமணம் கூட செய்து வைக்கிறார்களே.
ஜான்சி : பெற்றோர் நிச்சயிக்கிற திருமணத்தில் பெண் பார்க்கும் படலம் என்று ஒண்ணு இருக்குமே, அது கொடுமைங்க.... ஆடு மாடு பேரம் பேசுவது போல பெண்ணை கேவலப்படுத்தும் இந்த திருமண பேரம் அவசியமா?
கார்த்திகா : காதல் திருமணத்தில் மட்டும், ப்ளஸ் பாயிண்டெல்லாம் மட்டும் காட்டி அட்ராக்ட் பண்ணுவாங்க. திருமணத்திற்குப் பிறகு மைனஸ் பாயிண்டெல்லாம் தெரியும் போது அப்ப பத்திக்கும்......
ஜெயசுதா : பல காதல் திருமணங்கள் தற்கொலையில் தானே முடிகிறது?
ரேணுகாதேவி : அதற்குக் காரணம் பெரும்பாலும்,பெற்றோராத்தான் இருப்பாங்க. ஈகோ, சாதி வேறுபாடு போன்ற காரணங்களைச் சொல்லியே பிரித்து விடுகிறார்கள். மகிழ்ச்சி, துக்கம் மாதிரி காதலும் ஒரு யதார்த்தமான உணர்வுதானே ?
ப்ரியா : உண்மைதான். காதலியின் நினைவாக கட்டிய தாஜ்மகால் இன்னும் உலக அதிசயமாக நிற்கிறது. நிச்சயித்த திருமணம் பண்ணின கண்ணகி சிலை இன்றும் கண்ணீருடன் நீதி கேட்டுக் கொண்டு நிக்குது. அது மட்டுமில்ல. கலப்பு மணம் மூலம் பிறக்கும் குழந்தைகள் மிக அறிவாளிகளாக இருப்பதாக ஆய்வுகள் சொல்கின்றனவே.
சித்ரா : குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்க பெரியோர் ஆதரவு அவசியம். அது மட்டுமல்ல, என்னதான் கணவனின் அரவணைப்பும், ஆதரவும் இருந்தாலும், பேறு காலங்களிலெல்லாம் தாயன்பு இல்லாவிட்டால் ஏக்கம் தான் மிஞ்சும்.
ஜான்சி : அதற்காக மனதிற்கு பிடிக்காதவரை மணந்து காலம் முழுவதும் கண்ணீருடன் வாழ்க்கையை நடத்த முடியுமா? மனப்பக்குவமும், தன்னம்பிக்கையும் உள்ளவங்க தைரியமாக காதலிச்சு கல்யாணம் செய்து, வாழ்க்கையில் வெற்றியும் பெறலாம்.
இப்படித்தாங்க நீண்டு கொண்டே போனது விவாதம். இதற்கு தீர்ப்பு நீங்கதான் சொல்லனும்.........




