Tuesday, July 28, 2015

ராமேசுவரத்தில் அப்துல்கலாம் பிறந்து வளர்ந்த பழைய வீடு!






நம் நாடு இன்று இளைய சமுதாயத்தின் வழிகாட்டும் ஒளிவிளக்கை இழந்து தவிக்கிறது. மக்கள் அனைவரும் தம் சொந்த குடும்பத்தின் ஒரு முக்கிய இழப்பாகவே எண்ணி வேதனைப்படுகிறார்கள் என்றால் அதற்கு அர்த்தம் இல்லாமலா இருக்கும்.. தனக்கென்று எதுவுமே வைத்துக்கொள்ளாத தன்னலம் கருதாத தவமுனி நம் ஐயா அப்துல் கலாம் அவர்கள்.. 2004ம் ஆண்டில் கும்பகோணத்தில் உள்ள ஒரு பள்ளிக்கூடம் எரிந்து, அதில் பல சிறார்கள் உயிர் விட்டது நினைவில் இருக்கலாம். அந்த நேரத்தில் நம் நாட்டின் குடியரசு தலைவராக இருந்த ஐயா அப்துல்கலாம் அவர்கள் தினமணி நாளிதழில் கும்பகோணத்தில் தீயில் கருகிய அக்குழந்தைகளைக் குறித்து எழுதிய கவிதை இது.

இதோ அந்த கவிதை இதுதான்:

அன்றுஏன் கதிரவன் கடும் கரும் மேகங்களை ஊடுருவவில்லை
அன்று ஏன் குடந்தைத் தென்றல் கனலாக மாறியது
அன்று ஏன் தாயுள்ளங்கள் பதறித் துடித்தன
இளஞ்சிறார்கள் அக்னித் தேவனின் சினத்தில் தத்தளித்தனர்
அன்று ஏன் அச்சிறார்களை இறைவன் அக்னிக் குஞ்சுகளாகப்
பரிணமித்தான்?

இறைவா இதுவோ கொடுமையிலும் கொடுமை
வளர்ந்து கல்விகற்று பணிசெய்யும் பருவத்தில்
பழுத்த வயதில் மறைந்த தாய்தந்தையரை பூமிக்குக் கொடுப்பர்
இன்றோ காண்பது கொடுமையிலும் கொடுமை
பாலர்களை ஒவ்வொன்றாய் தந்தையர் பூமியில் புதைக்கும் காட்சி

தாய்கண்ட கனவு, தந்தைகண்ட கனவு, சிறார்கள் கண்ட கனவு
எல்லாமே அக்னியின் வேகத்தில் கரிக்குஞ்சாய் பரிணமித்தன
இறைவா குழந்தைகள் உன் படைப்பு - அவர்கள்
உன்னிடமே அடைக்கலத்தில் அடைந்தார்கள்
உன் அருளால் அக் குழந்தைகள் எங்கிருப்பினும் நன்றிருக்க

கையேந்தி பிரார்த்திக்கிறோம் கையேந்தி பிரார்த்திக்கிறோம்
இறைவா உன் அருளால் - தம் குழந்தைகளை இழந்து
தவிக்கின்ற பெற்றோருக்கு மன அமைதி பாக்கியத்தை
மறுபடியும் வாழவிலருள் - அவர்கள் எப்பொழுதும் 
உனை நம்பி அமைதி வாழ்வு வாழ பிரார்த்திக்கிறேன்.

ஐயாவின் ஆன்மா சாந்தியடைய பிரார்த்தனை செய்வோம்..

2 comments: